திருமழபாடி - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
401
அலையடுத்த பெருங்கடல்நஞ் சமுதா வுண்டு
அமரர்கள்தந் தலைகாத்த ஐயர் செம்பொற்
சிலையெடுத்து மாநாக நெருப்புக் கோத்துத்
திரிபுரங்கள் தீயிட்ட செல்வர் போலும்
நிலையடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட
நிரைவயிரப் பலகையாற் குவையார்த் துற்ற
மலையடுத்த மழபாடி வயிரத் தூணே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
6.40.1
402
அறைகலந்த குழல்மொந்தை வீணை யாழும்
அந்தரத்திற் கந்தருவர் அமர ரேத்த
மறைகலந்த மந்திரமும் நீருங் கொண்டு
வழிபட்டார் வானாளக் கொடுத்தி யன்றே
கறைகலந்த பொழிற்கச்சிக் கம்ப மேயக்
கனவயிரத் திரள்தூணே கலிசூழ் மாடம்
மறைகலந்த மழபாடி வயிரத் தூணே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
6.40.2
403
உரங்கொடுக்கு மிருண்மெய்யர் மூர்க்கர் பொல்லா
ஊத்தைவாய்ச் சமணர்தமை யுறவாக் கொண்ட
பரங்கெடுத்திங் கடியேனை ஆண்டு கொண்ட
பவளத்தின் திரள்தூணே பசும்பொன் முத்தே
புரங்கெடுத்துப் பொல்லாத காம னாகம்
பொடியாக விழித்தருளிப் புவியோர்க் கென்றும்
வரங்கொடுக்கும் மழபாடி வயிரத் தூணே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
6.40.3
404
ஊனிகந்தூ ணுறிகையர் குண்டர் பொல்லா
ஊத்தைவாய்ச் சமணருற வாகக் கொண்டு
ஞானகஞ்சேர்ந் துள்ளவயி ரத்தை நண்ணா
நாயேனைப் பொருளாக ஆண்டு கொண்ட
மீனகஞ்சேர் வெள்ளநீர் விதியாற் சூடும்
வேந்தனே விண்ணவர்தம் பெருமான் மேக
வானகஞ்சேர் மழபாடி வயிரத் தூணே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
6.40.4
405
சிரமேற்ற நான்முகன்றன் றலையும் மற்றைத்
திருமால்தன் செழுந்தலையும் பொன்றச் சிந்தி
உரமேற்ற இரவிபல் தகர்த்துச் சோமன்
ஒளிர்கலைகள் படவுழக்கி உயிரை நல்கி
நரையேற்ற விடையேறி நாகம் பூண்ட
நம்பியையே மறைநான்கும் ஓல மிட்டு
வரமேற்கும் மழபாடி வயிரத் தூணே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
6.40.5
406
சினந்திருத்துஞ் சிறுப்பெரியார் குண்டர் தங்கள்
செதுமதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடிப்
புனந்திருத்தும் பொல்லாத பிண்டி பேணும்
பொறியிலியேன் றனைப்பொருளா வாண்டு கொண்டு
தனந்திருத்து மவர்திறத்தை யொழியப் பாற்றித்
தயாமூல தன்மவழி யெனக்கு நல்கி
மனந்திருத்தும் மழபாடி வயிரத் தூணே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
6.40.6
407
சுழித்துணையாம் பிறவிவழித் துக்கம் நீக்குஞ்
சுருள்சடையெம் பெருமானே தூய தெண்ணீர்
இழிப்பரிய பசுபாசப் பிறப்பை நீக்கும்
என்றுணையே என்னுடைய பெம்மான் தம்மான்
பழிப்பரிய திருமாலும் அயனுங் காணாப்
பரிதியே சுருதிமுடிக் கணியாய் வாய்த்த
வழித்துணையாம் மழபாடி வயிரத் தூணே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
6.40.7
இப்பதிகத்தில் 8,9,10-ம் செய்யுட்கள்
சிதைந்து போயின.
6.40.8-10
திருச்சிற்றம்பலம்
