திருவெண்காடு - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
489
பண்காட் டிப்படி யாயதன் பத்தர்க்குக்
கண்காட் டிக்கண்ணில் நின்ற மணியொக்கும்
பெண்காட் டிப்பிறைச் சென்னிவைத் தான்றிரு
வெண்காட் டையடைந் துய்ம்மட நெஞ்சமே.
5.49.1
490
கொள்ளி வெந்தழல் வீசிநின் றாடுவார்
ஒள்ளி யகணஞ் சூழுமை பங்கனார்
வெள்ளி யன்கரி யன்பசு வேறிய
தெள்ளி யன்றிரு வெண்கா டடைநெஞ்சே.
5.49.2
491
ஊனோக் குமின்பம் வேண்டி யுழலாதே
வானோக் கும்வழி யாவது நின்மினோ
தானோக் குந்தன் னடியவர் நாவினில்
தேனோக் குந்திரு வெண்கா டடைநெஞ்சே.
5.49.3
492
பருவெண் கோட்டுப்பைங் கண்மத வேழத்தின்
உருவங் காட்டிநின் றானுமை அஞ்சவே
பெருவெண் காட்டிறை வன்னுறை யும்மிடந்
திருவெண் காடடைந் துய்ம்மட நெஞ்சமே.
5.49.4
493
பற்ற வன்கங்கை பாம்பு மதியுடன்
உற்ற வன்சடை யானுயர் ஞானங்கள்
கற்ற வன்கய வர்புரம் ஓரம்பால்
செற்ற வன்றிரு வெண்கா டடைநெஞ்சே.
5.49.5
494
கூடி னானுமை யாளொரு பாகமாய்
வேட னாய்விச யற்கருள் செய்தவன்
சேட னார்சிவ னார்சிந்தை மேயவெண்
காட னாரடி யேஅடை நெஞ்சமே.
5.49.6
495
தரித்த வன்கங்கை பாம்பு மதியுடன்
புரித்த புன்சடை யான்கய வர்புரம்
எரித்த வன்மறை நான்கினோ டாறங்கம்
விரித்த வன்னுறை வெண்கா டடைநெஞ்சே.
5.49.7
496
பட்டம் இண்டை யவைகொடு பத்தர்கள்
சிட்ட னாதியென் றுசிந்தை செய்யவே
நட்ட மூர்த்திஞா னச்சுட ராய்நின்ற
அட்ட மூர்த்திதன் வெண்கா டடைநெஞ்சே.
5.49.8
497
ஏன வேடத்தி னானும் பிரமனும்
தான வேடமுன் தாழ்ந்தறி கின்றிலா
ஞான வேடன் விசயற் கருள்செயும்
கான வேடன்றன் வெண்கா டடைநெஞ்சே.
5.49.9
498
பாலை யாடுவர் பன்மறை யோதுவர்
சேலை யாடிய கண்ணுமை பங்கனார்
வேலை யார்விட முண்டவெண் காடர்க்கு
மாலை யாவது மாண்டவ ரங்கமே.
5.49.10
499
இராவ ணஞ்செய மாமதி பற்றவை
இராவ ணம்முடை யான்றனை யுள்குமின்
இராவ ணன்றனை யூன்றி யருள்செய்த
இராவ ணன்திரு வெண்கா டடைமினே.
5.49.11
திருச்சிற்றம்பலம்
