திருவீழிமிழலை

bookmark

பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

892

நம்பினார்க்கருள் செய்யுமந்தணர்

நான்மறைக்கிட மாயவேள்வியுள்
செம்பொ னேர்மடவாரணி

பெற்ற திருமிழலை
உம்பரார்தொழு தேத்தமாமலை

யாளொடும்முட னேஉறைவிடம்
அம்பொன் வீழிகொண்டீர்

அடியேற்கும் அருளுதிரே.

7.88.1

893

விடங்கொள்மாமிடற் றீர்வெள்ளைச்சுருளொன்

றிட்டுவிட்ட காதினீரென்று
திடங்கொள் சிந்தையினார்

கலிகாக்குந் திருமிழலை
மடங்கல்பூண்டவி மானம்மண்மிசை

வந்திழிச்சிய வானநாட்டையும்
அடங்கல் வீழிகொண்டீர்

அடியேற்கும் அருளுதிரே.

7.88.2

894

ஊனைஉற்றுயிர் ஆயினீரொளி

மூன்றுமாய்த்தெளி நீரோடானஞ்சின்
தேனை ஆட்டுகந்தீர்

செழுமாடத் திருமிழலை
மானைமேவிய கையினீர்மழு

வேந்தினீர்மங்கை பாகத்தீர்விண்ணில்
ஆன வீழிகொண்டீர்

அடியேற்கும் அருளுதிரே.

7.88.3

895

பந்தம்வீடிவை பண்ணினீர்படி

றீர்மதிப்பிதிர்க் கண்ணியீரென்று
சிந்தை செய்திருக்குஞ்

செங்கையாளர் திருமிழலை
வந்துநாடகம் வானநாடியர்

ஆடமாலயன் ஏத்தநாடொறும்
அந்தண் வீழிகொண்டீர்

அடியேற்கும் அருளுதிரே.

7.88.4

896

புரிசைமூன்றையும் பொன்றக்குன்றவில்

லேந்திவேதப் புரவித்தேர்மிசைத்
திரிசெய் நான்மறையோர்

சிறந்தேத்துந் திருமிழலைப்
பரிசினாலடி போற்றும்பத்தர்கள்

பாடியாடப் பரிந்துநல்கினீர்
அரிய வீழிகொண்டீர்

அடியேற்கும் அருளுதிரே.

7.88.5

897

எறிந்தசண்டி இடந்தகண்ணப்பன்

ஏத்துபத்தர்கட் கேற்றம்நல்கினீர்
செறிந்த பூம்பொழில்

தேன்துளிவீசுந் திருமிழலை
நிறைந்தஅந்தணர் நித்தநாடொறும்

நேசத்தாலுமைப் பூசிக்கும்மிடம்
அறிந்து வீழிகொண்டீர்

அடியேற்கும் அருளுதிரே.

7.88.6

898

பணிந்தபார்த்தன் பகீரதன்பல

பத்தர்சித்தர்க்குப் பண்டுநல்கினீர்
திணிந்த மாடந்தொறுஞ்

செல்வம்மல்கு திருமிழலை
தணிந்தஅந்தணர் சந்திநாடொறும்

அந்திவானிடு பூச்சிறப்பவை
அணிந்து வீழிகொண்டீர்

அடியேற்கும் அருளுதிரே.

7.88.7

899

பரந்தபாரிடம் ஊரிடைப்பலி

பற்றிப்பார்த்துணுஞ் சுற்றமாயினீர்
தெரிந்த நான்மறை

யோர்க்கிடமாய திருமிழலை
இருந்துநீர்தமி ழோடிசைகேட்கும்

இச்சையாற்காசு நித்தல்நல்கினீர்
அருந்தண் வீழிகொண்டீர்

அடியேற்கும் அருளுதிரே.

7.88.8

900

தூயநீரமு தாயவாறது

சொல்லுகென்றுமைக் கேட்கச்சொல்லினீர்
தீயராக் குலையாளர்

செழுமாடத் திருமிழலை
மேயநீர்பலி ஏற்றதென்னென்று

விண்ணப்பஞ்செய் பவர்க்குமெய்ப்பொருள்
ஆய வீழிகொண்டீர்

அடியேற்கும் அருளுதிரே.

7.88.9

901

வேதவேதியர் வேதநீதியர்

ஓதுவார்விரி நீர்மிழலையுள்
ஆதி வீழிகொண்டீர்

அடியேற்கும் அருளுகென்று
நாதகீதம்வண் டோ துவார்பொழில்

நாவலூரன்வன் றொண்டன்நற்றமிழ்
பாதம் ஓதவல்லார்

பரனோடு கூடுவரே.

7.88.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகர், தேவியார் - சுந்தரகுசாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்