திருஆவடுதுறை - திருத்தாண்டகம்

bookmark

திருச்சிற்றம்பலம்

469

திருவேயென் செல்வமே தேனே வானோர்

செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதி மிக்க
உருவேஎன் னுறவேஎன் ஊனே ஊனின்

உள்ளமே உள்ளத்தி னுள்ளே நின்ற
கருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற்

கருமணியே மணியாடு பாவாய் காவாய்
அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம்

ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

6.047.1

470

மாற்றேன் எழுத்தஞ்சும் என்றன் நாவின்

மறவேன் திருவருள்கள் வஞ்ச நெஞ்சின்
ஏற்றேன் பிறதெய்வம் எண்ணா நாயேன்

எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால்
மேற்றான்நீ செய்வனகள் செய்யக் கண்டு

வேதனைக்கே யிடங்கொடுத்து நாளு நாளும்
ஆற்றேன் அடியேனை அஞ்சே லென்னாய்

ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

6.047.2

471

வரையார் மடமங்கை பங்கா கங்கை

மணவாளா வார்சடையாய் நின்றன் நாமம்
உரையா உயிர்போகப் பெறுவே னாகில்

உறுநோய்வந் தெத்தனையு முற்றா லென்னே
கரையா நினைந்துருகிக் கண்ணீர் மல்கிக்

காதலித்து நின்கழலே யேத்து மன்பர்க்
கரையா அடியேனை அஞ்சே லென்னாய்

ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

6.047.3

472

சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவச்

சிலைவளைவித் துமையவளை யஞ்ச நோக்கிக்
கலித்தாங் கிரும்பிடிமேற் கைவைத் தோடுங்

களிறுரித்த கங்காளா எங்கள் கோவே
நிலத்தார் அவர்தமக்கே பொறையாய் நாளும்

நில்லா வுயிரோம்பு நீத னேன்நான்
அலுத்தேன் அடியேனை அஞ்சே லென்னாய்

ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

6.047.4

473

நறுமா மலர்கொய்து நீரின் மூழ்கி

நாடோறும் நின்கழலே யேத்தி வாழ்த்தித்
துறவாத துன்பந் துறந்தேன் தன்னைச்

சூழுலகில் ஊழ்வினைவந் துற்றா லென்னே
உறவாகி வானவர்கள் முற்றும் வேண்ட

ஒலிதிரைநீர்க் கடல்நஞ்சுண் டுய்யக் கொண்ட
அறவா அடியேனை அஞ்சே லென்னாய்

ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

6.047.5

474

கோன்நா ரணன் அங்கந் தோள்மேற் கொண்டு

கொழுமலரான் தன்சிரத்தைக் கையி லேந்திக்
கானார் களிற்றுரிவைப் போர்வை மூடிக்

கங்காள வேடராய் எங்குஞ் செல்வீர்
நானார் உமக்கோர் வினைக்கே டனேன்

நல்வினையுந் தீவினையு மெல்லாம் முன்னே
ஆனாய் அடியேனை அஞ்சே லென்னாய்

ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

6.047.6

475

உழையுரித்த மானுரிதோ லாடை யானே

உமையவள்தம் பெருமானே இமையோர் ஏறே
கழையிறுத்த கருங்கடல்நஞ் சுண்ட கண்டா

கயிலாய மலையானே உன்பா லன்பர்
பிழைபொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்றன்

கடனன்றே பேரருளுன் பால தன்றே
அழையுறுத்து மாமயில்க ளாலுஞ் சோலை

ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

6.047.7

476

உலந்தார் தலைகலனொன் றேந்தி வானோ

ருலகம் பலிதிரிவாய் உன்பா லன்பு
கலந்தார் மனங்கவருங் காத லானே

கனலாடுங் கையவனே ஐயா மெய்யே
மலந்தாங் குயிர்ப்பிறவி மாயக் காய

மயக்குளே விழுந்தழுந்தி நாளும் நாளும்
அலந்தேன் அடியேனை அஞ்சே லென்னாய்

ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

6.047.8

477

பல்லார்ந்த வெண்டலை கையி லேந்திப்

பசுவேறி யூரூரன் பலிகொள் வானே
கல்லார்ந்த மலைமகளும் நீயு மெல்லாங்

கரிகாட்டி லாட்டுகந்தீர் கருதீ ராகில்
எல்லாரு மென்தன்னை யிகழ்வர் போலும்

ஏழையமண் குண்டர்சாக் கியர்களொன்றுக்
கல்லாதார் திறத்தொழிந்தேன் அஞ்சே லென்னாய்

ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

6.047.9

478

துறந்தார்தந் தூநெறிக்கண் சென்றே னல்லேன்

துணைமாலை சூட்டநான் தூயே னல்லேன்
பிறந்தேன்நின் திருவருளே பேசி னல்லாற்

பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
செறிந்தார் மதிலிலங்கைக் கோமான் தன்னைச்

செறுவரைக்கீ ழடர்த்தருளிச் செய்கை யெல்லாம்
அறிந்தேன் அடியேனை அஞ்சே லென்னாய்

ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

6.047.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாசிலாமணியீசுவரர்.
தேவியார் - ஒப்பிலாமுலையம்மை.

திருச்சிற்றம்பலம்