திருவலிவலம் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
479
நல்லான்காண் நான்மறைக ளாயி னான்காண்
நம்பன்காண் நணுகாதார் புரமூன் றெய்த
வில்லான்காண் விண்ணவர்க்கும் மேலா னான்காண்
மெல்லியலாள் பாகன்காண் வேத வேள்விச்
சொல்லான்காண் சுடர்மூன்று மாயி னான்காண்
தொண்டாகிப் பணிவார்க்குத் தொல்வான் ஈய
வல்லான்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.
6.048.1
480
ஊனவன்காண் உடல்தனக்கோர் உயிரா னான்காண்
உள்ளவன்காண் இல்லவன்காண் உமையாட்கென்றுந்
தேனவன்காண் திருவவன்காண் திசையா னான்காண்
தீர்த்தன்காண் பார்த்தன்றன் பணியைக் கண்ட
கானவன்காண் கடலவன்காண் மலையா னான்காண்
களியானை யீருரிவை கதறப் போர்த்த
வானவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.
6.048.2
481
ஏயவன்காண் எல்லார்க்கு மியல்பா னான்காண்
இன்பன்காண் துன்பங்க ளில்லா தான்காண்
தாயவன்காண் உலகுக்கோர் தன்னொப் பில்லாத்
தத்துவன்காண் உத்தமன்காண் தானே யெங்கும்
ஆயவன்காண் அண்டத்துக் கப்பா லான்காண்
அகங்குழைந்து மெய்யரும்பி அழுவார் தங்கள்
வாயவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.
6.048.3
482
உய்த்தவன்காண் உடல்தனக்கோர் உயிரானான்காண்
ஓங்காரத் தொருவன்காண் உலகுக் கெல்லாம்
வித்தவன்காண் விண்பொழியும் மழையா னான்காண்
விளைவவன்காண் விரும்பாதார் நெஞ்சத்தென்றும்
பொய்த்தவன்காண் பொழிலேழுந் தாங்கி னான்காண்
புனலோடு வளர்மதியும் பாம்புஞ் சென்னி
வைத்தவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.
6.048.4
483
கூற்றவன்காண் குணமவன்காண் குறியா னான்காண்
குற்றங்க ளனைத்துங்காண் கோல மாய
நீற்றவன்காண் நிழலவன்காண் நெருப்பா னான்காண்
நிமிர்புன் சடைமுடிமேல் நீரார் கங்கை
ஏற்றவன்காண் ஏழுலகு மாயி னான்காண்
இமைப்பளவிற் காமனைமுன் பொடியாய் வீழ
மாற்றவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.
6.048.5
484
கோவணமோ தோலோ உடை யாவது
கொல்லேறோ வேழமோ ஊர்வது தான்
பூவணமோ புறம்பயமோ அன்றா யிற்றான்
பொருந்தாதார் வாழ்க்கை திருந் தாமையோ
தீவணத்த செஞ்சடைமேல் திங்கள் சூடித்
திசைநான்கும் வைத்துகந்த செந்தீ வண்ணர்
ஆவணமோ ஒற்றியோ அம்மா னார்தாம்
அறியேன்மற் றூராமா றாரூர் தானே.
6.048.4
485
பெண்ணவன்காண் ஆணவன்காண் பெரியோர்க் கென்றும்
பெரியவன்காண் அரியவன்காண் அயனா னான்காண்
எண்ணவன்காண் எழுத்தவன்காண் இன்பக் கேள்வி
இசையவன்காண் இயலவன்காண் எல்லாங் காணுங்
கண்ணவன்காண் கருத்தவன்காண் கழிந்தோர் செல்லுங்
கதியவன்காண் மதியவன்காண் கடலேழ் சூழ்ந்த
மண்ணவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.
6.048.7
486
முன்னவன்காண் பின்னவன்காண் மூவா மேனி
முதலவன்காண் முடிவவன்காண் மூன்று சோதி
அன்னவன்காண் அடியார்க்கும் அண்டத் தார்க்கும்
அணியவன்காண் சேயவன்காண் அளவில் சோதி
மின்னவன்காண் உருமவன்காண் திருமால் பாகம்
வேண்டினன்கா ணீண்டுபுனற் கங்கைக் கென்றும்
மன்னவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.
6.048.8
487
நெதியவன்காண் யாவர்க்கும் நினைய வொண்ணா
நீதியன்காண் வேதியன்காண் நினைவார்க் கென்றுங்
கதியவன்காண் காரவன்காண் கனலா னான்காண்
காலங்க ளூழியாய்க் கலந்து நின்ற
பதியவன்காண் பழமவன்காண் இரதந் தான்காண்
பாம்போடு திங்கள் பயில வைத்த
மதியவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.
6.048.9
488
பங்கயத்தின் மேலானும் பால னாகி
உலகளந்த படியானும் பரவிக் காணா
தங்கைவைத்த சென்னியரா யளக்க மாட்டா
அனலவன்காண் அலைகடல்சூ ழிலங்கை வேந்தன்
கொங்கலர்த்த முடிநெரிய விரலா லூன்றுங்
குழகன்காண் அழகன்காண் கோல மாய
மங்கையர்க்கோர் கூறன்காண் வானோ ரேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.
6.048.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மனத்துணைநாதர்.
தேவியார் - வாளையங்கண்ணியம்மை.
திருச்சிற்றம்பலம்
