திருப்பூந்துருத்தி - திருத்தாண்டகம்

bookmark

திருச்சிற்றம்பலம்

428

நில்லாத நீர்சடைமேல் நிற்பித் தானை

நினையாவென் நெஞ்சை நினைவித் தானைக்
கல்லா தனவெல்லாங் கற்பித் தானைக்

காணா தனவெல்லாங் காட்டி னானைச்
சொல்லா தனவெல்லாஞ் சொல்லி யென்னைத்

தொடர்ந்திங் கடியேனை யாளாக் கொண்டு
பொல்லாவென் நேர்ய்தீர்த்த புநிதன் தன்னைப்

புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

6.043.1

429

குற்றாலங் கோகரணம் மேவி னானைக்

கொடுங்கைக் கடுங்கூற்றைப் பாய்ந்தான் தன்னை
உற்றால நஞ்சுண் டொடுக்கி னானை

யுணராவென் நெஞ்சை யுணர்வித் தானைப்
பற்றாலின் கீழங் கிருந்தான் தன்னைப்

பண்ணார்ந்த வீணை பயின்றான் தன்னைப்
புற்றா டரவார்த்த புநிதன் தன்னைப்

புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

6.043.2

430

எனக்கென்றும் இனியானை யெம்மான் தன்னை

யெழிலாரும் ஏகம்பம் மேயான் தன்னை
மனக்கென்றும் வருவானை வஞ்சர் நெஞ்சில்

நில்லானை நின்றியூர் மேயான் தன்னைத்
தனக்கென்றும் அடியேனை யாளாக் கொண்ட

சங்கரனைச் சங்கவார் குழையான் தன்னைப்
புனக்கொன்றைத் தாரணிந்த புநிதன் தன்னைப்

பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

6.043.3

431

வெறியார் மலர்க்கொன்றை சூடி னானை

வெள்ளானை வந்திறைஞ்சும் வெண்காட் டானை
அறியா தடியே னகப்பட் டேனை

அல்லற்கடல் நின்று மேற வாங்கி
நெறிதா னிதுவென்று காட்டி னானை

நிச்சல் நலிபிணிகள் தீர்ப்பான் தன்னைப்
பொறியா டரவார்த்த புநிதன் தன்னைப்

பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

6.043.4

432

மிக்கானை வெண்ணீறு சண்ணித் தானை

விண்டார் புரமூன்றும் வேவ நோக்கி
நக்கானை நான்மறைகள் பாடி னானை

நல்லார்கள் பேணிப் பரவ நின்ற
தக்கானைத் தண்டா மரைமே லண்ணல்

தலைகொண்டு மாத்திரைக்கண் உலக மெல்லாம்
புக்கானைப் புண்ணியனைப் புநிதன் தன்னைப்

பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

6.043.5

433

ஆர்த்தானை வாசுகியை அரைக்கோர் கச்சா

அசைத்தானை அழகாய பொன்னார் மேனிப்
பூத்தானத் தான் முடியைப் பொருந்தா வண்ணம்

புணர்ந்தானைப் பூங்கணையா னுடலம் வேவப்
பார்த்தானைப் பரிந்தானைப் பனிநீர்க் கங்கை

படர்சடைமேற் பயின்றானைப் பதைப்ப யானை
போர்த்தானைப் புண்ணியனைப் புநிதன் தன்னைப்

பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

6.043.6

434

எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும்

இமைப்பளவிற் பொடியாக எழிலார் கையால்
உரித்தானை மதகரியை யுற்றுப் பற்றி

யுமையதனைக் கண்டஞ்சி நடுங்கக் கண்டு
சிரித்தானைச் சீரார்ந்த பூதஞ் சூழத்

திருச்சடைமேல் திங்களும் பாம்பும் நீரும்
புரித்தானைப் புண்ணியனைப் புநிதன் தன்னைப்

பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

6.043.7

435

வைத்தானை வானோ ருலக மெல்லாம்

வந்திறைஞ்சி மலர்கொண்டு நின்று போற்றும்
வித்தானை வேண்டிற்றொன் றீவான் தன்னை

விண்ணவர்தம் பெருமானை வினைகள் போக
உய்த்தானை யொலிகங்கை சடைமேற் றாங்கி

யொளித்தானை யொருபாகத் துமையோ டாங்கே
பொய்த்தானைப் புண்ணியனைப் புநிதன் தன்னைப்

பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

6.043.8

436

ஆண்டானை வானோ ருலக மெல்லாம்

அந்நா ளறியாத தக்கன் வேள்வி
மீண்டானை விண்ணவர்க ளோடுங் கூடி

விரைமலர்மேல் நான்முகனும் மாலுந் தேட
நீண்டானை நெருப்புருவ மானான் தன்னை

நிலையிலார் மும்மதிலும் வேவ வில்லைப்
பூண்டானைப் புண்ணியனைப் புநிதன் தன்னைப்

பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

6.043.9

437

மறுத்தானை மலைகோத்தங் கெடுத்தான் தன்னை

மணிமுடியோ டிருபதுதோள் நெரியக் காலால்
இறுத்தானை யெழுநரம்பி னிசைகேட் டானை

யெண்டிசைக்கும் கண்ணானான் சிரமே லொன்றை
அறுத்தானை யமரர்களுக் கமுதீந் தானை

யாவர்க்குந் தாங்கொணா நஞ்ச முண்டு
பொறுத்தானைப் புண்ணியனைப் புநிதன் தன்னைப்

பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

6.043.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - புஷ்பவனநாதர்.
தேவியார் - அழகாலமர்ந்தநாயகி.

திருச்சிற்றம்பலம்