திருநெய்த்தானம் - திருத்தாண்டகம்

bookmark

திருச்சிற்றம்பலம்

418

மெய்த்தானத் தகம்படியுள் ஐவர் நின்று

வேண்டிற்றுக் குறைமுடித்து வினைக்குக் கூடாம்
இத்தானத் திருந்திங்ங னுய்வா னெண்ணும்

இதனையொழி இயம்பக்கேள் ஏழை நெஞ்சே
மைத்தான நீள்நயனி பங்கன் வங்கம்

வருதிரைநீர் நஞ்சுண்ட கண்டன் மேய
நெய்த்தான நன்னகரென் றேத்தி நின்று

நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

6.042.1

419

ஈண்டா விரும்பிறவித் துறவா ஆக்கை

இதுநீங்க லாம்விதியுண் டென்று சொல்ல
வேண்டாவே நெஞ்சமே விளம்பக் கேள்நீ

விண்ணவர்தம் பெருமானார் மண்ணி லென்னை
ஆண்டானன் றருவரையாற் புரமூன் றெய்த

அம்மானை அரி அயனுங் காணா வண்ணம்
நீண்டா னுறைதுறைநெய்த் தான மென்று

நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

6.042.2

420

பரவிப் பலபலவுந் தேடி யோடிப்

பாழாங் குரம்பையிடைக் கிடந்து வாளா
குரவிக் குடிவாழ்க்கை வாழ வெண்ணிக்

குலைகை தவிர்நெஞ்சே கூறக் கேள்நீ
இரவிக் குலமுதலா வானோர் கூடி

யெண்ணிறந்த கோடி யமர ராயம்
நிரவிக் கரியவன் நெய்த் தான மென்று

நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

6.042.3

421

அலையார் வினைத்திறஞ்சே ராக்கை யுள்ளே

யகப்பட்டு ளாசையெனும் பாசந் தன்னுள்
தலையாய்க் கடையாகும் வாழ்வி லாழ்ந்து

தளர்ந்துமிக நெஞ்சமே அஞ்ச வேண்டா
இலையார் புனக்கொன்றை யெறிநீர்த் திங்கள்

இருஞ்சடைமேல் வைத்துகந்தான் இமையோ ரேத்தும்
நிலையா னுறைநிறைநெய்த் தான மென்று

நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

6.042.4

422

தினைத்தனையோர் பொறையிலா வுயிர்போங் கூட்டைப்

பொருளென்று மிகவுன்னி மதியா லிந்த
அனைத்துலகும் ஆளலா மென்று பேசும்

ஆங்காரந் தவிர்நெஞ்சே யமரர்க் காக
முனைத்துவரு மதில்மூன்றும் பொன்ற அன்று

முடுகியவெஞ் சிலைவளைத்துச் செந்தீ மூழ்க
நினைத்த பெருங் கருணையன்நெய்த் தான மென்று

நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

6.042.5

423

மிறைபடுமிவ் வுடல்வாழ்வை மெய்யென் றெண்ணி

வினையிலே கிடந்தழுந்தி வியவேல் நெஞ்சே
குறைவுடையார் மனத்துளான் குமரன் தாதை

கூத்தாடுங் குணமுடையான்கொலைவேற் கையான்
அறைகழலுந் திருவடிமேற் சிலம்பும் ஆர்ப்ப

அவனிதலம் பெயரவரு நட்டம் நின்ற
நிறைவுடையா னிடமாம்நெய்த் தான மென்று

நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

6.042.6

424

பேசப் பொருளலாப் பிறவி தன்னைப்

பெரிதென்றுன் சிறுமனத்தால் வேண்டி யீண்டு
வாசக் குழல்மடவார் போக மென்னும்

வலைப்பட்டு வீழாதே வருக நெஞ்சே
தூசக் கரியுரித்தான் தூநீ றாடித்

துதைந்திலங்கு நூல்மார்பன் தொடர கில்லா
நீசர்க் கரியவன்நெய்த் தான மென்று

நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

6.042.7

425

அஞ்சப் புலனிவற்றா லாட்ட வாட்டுண்

டருநோய்க் கிடமாய வுடலின் தன்மை
தஞ்ச மெனக்கருதித் தாழேல் நெஞ்சே

தாழக் கருதுதியே தன்னைச் சேரா
வஞ்ச மனத்தவர்கள் காண வொண்ணா

மணிகண்டன் வானவர்தம் பிரானென் றேத்தும்
நெஞ்சர்க் கினியவன்நெய்த் தான மென்று

நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

6.042.8

426

பொருந்தாத உடலகத்திற் புக்க ஆவி

போமா றறிந்தறிந்தே புலைவாழ் வுன்னி
இருந்தாங் கிடர்ப்படநீ வேண்டா நெஞ்சே

யிமையவர்தம் பெருமானன் றுமையா ளஞ்சக்
கருந்தாள் மதகரியை வெருவச் சீறுங்

கண்ணுதல்கண் டமராடிக் கருதார் வேள்வி
நிரந்தரமா இனிதுறைநெய்த் தான மென்று

நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

6.042.9

427

உரித்தன் றுனக்கிவ் வுடலின் தன்மை

உண்மை யுரைத்தேன் விரத மெல்லாந்
தரிந்துந் தவமுயன்றும் வாழா நெஞ்சே

தம்மிடையி லில்லார்க்கொன் றல்லார்க் கன்னன்
எரித்தான் அனலுடையான் எண்டோ ளானே

யெம்பெருமா னென்றேத்தா இலங்கைக் கோனை
நெரித்தானை நெய்த்தானம் மேவி னானை

நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

6.042.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நெய்யாடியப்பர்.
தேவியார் - வாலாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்