திருநெய்த்தானம் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
408
வகையெலா முடையாயும் நீயே யென்றும்
வான்கயிலை மேவினாய் நீயே யென்றும்
மிகையெலாம் மிக்காயும் நீயே யென்றும்
வெண்காடு மேவினாய் நீயே யென்றும்
பகையெலாந் தீர்த்தாண்டாய் நீயே யென்றும்
பாசூ ரமர்ந்தாயும் நீயே யென்றும்
திகையெலாந் தொழச் செல்வாய் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.
6.041.1
409
ஆர்த்த எனக்கன்பன் நீயே யென்றும்
ஆதிக் கயிலாயன் நீயே யென்றும்
கூர்த்த நடமாடி நீயே யென்றுங்
கோடிகா மேய குழகா என்றும்
பார்த்தற் கருள் செய்தாய் நீயே யென்றும்
பழையனூர் மேவிய பண்பா என்றும்
தீர்த்தன் சிவலோகன் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.
6.041.2
410
அல்லாய்ப் பகலானாய் நீயே யென்றும்
ஆதிக் கயிலாயன் நீயே யென்றும்
கல்லா லமர்ந்தாயும் நீயே யென்றுங்
காளத்திக் கற்பகமும் நீயே யென்றும்
சொல்லாய்ப் பொருளானாய் நீயே யென்றுந்
சோற்றுத் துறையுறைவாய் நீயே யென்றும்
செல்வாய்த் திருவானாய் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.
6.041.3
411
மின்னே ரிடைபங்கன் நீயே யென்றும்
வெண்கயிலை மேவினாய் நீயே யென்றும்
பொன்னேர் சடைமுடியாய் நீயே யென்றும்
பூத கணநாதன் நீயே யென்றும்
என்னா விரதத்தாய் நீயே யென்றும்
ஏகம்பத் தென்னீசன் நீயே யென்றும்
தென்னூர்ப் பதியுளாய் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.
6.041.4
412
முந்தி யிருந்தாயும் நீயே யென்றும்
முன்கயிலை மேவினாய் நீயே யென்றும்
நந்திக் கருள்செய்தாய் நீயே யென்றும்
நடமாடி நள்ளாறன் நீயே யென்றும்
பந்திப் பரியாயும் நீயே யென்றும்
பைஞ்ஞீலீ மேவினாய் நீயே யென்றும்
சிந்திப் பரியாயும் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.
6.041.5
413
தக்கா ரடியார்க்கு நீயே யென்றுந்
தலையார் கயிலாயன் நீயே யென்றும்
அக்காரம் பூண்டாயும் நீயே யென்றும்
ஆக்கூரில் தான்றோன்றி நீயே யென்றும்
புக்காய ஏழுலகும் நீயே யென்றும்
புள்ளிருக்கு வேளூராய் நீயே யென்றும்
தெக்காரு மாகோணத் தானே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.
6.041.6
414
புகழும் பெருமையாய் நீயே யென்றும்
பூங்கயிலை மேவினாய் நீயே யென்றும்
இகழுந் தலையேந்தி நீயே யென்றும்
இராமேச் சுரத்தின்பன் நீயே யென்றும்
அகழும் மதிலுடையாய் நீயே யென்றும்
ஆலவாய் மேவினாய் நீயே யென்றும்
திகழும் மதிசூடி நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.
6.041.7
415
வானவர்க்கு மூத்திளையாய் நீயே யென்றும்
வானக் கயிலாயன் நீயே யென்றும்
கான நடமாடி நீயே யென்றுங்
கடவூரில் வீரட்டன் நீயே யென்றும்
ஊனார் முடியறுத்தாய் நீயே யென்றும்
ஒற்றியூ ராரூராய் நீயே யென்றும்
தேனாய் அமுதானாய் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.
6.041.8
416
தந்தைதா யில்லாதாய் நீயே யென்றுந்
தலையார் கயிலாயன் நீயே யென்றும்
எந்தாயெம் பிரானானாய் நீயே யென்றும்
ஏகம்பத் தென்னீசன் நீயே யென்றும்
முந்திய முக்கணாய் நீயே யென்றும்
மூவலூர் மேவினாய் நீயே யென்றும்
சிந்தையாய்த் தேனூராய் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.
6.041.9
417
மறித்தான் வலிசெற்றாய் நீயே யென்றும்
வான்கயிலை மேவினாய் நீயே என்றும்
வெறுத்தார் பிறப்பறுப்பாய் நீயே யென்றும்
வீழி மிழலையாய் நீயே யென்றும்
அறத்தாய் அமுதீந்தாய் நீயே யென்றும்
யாவர்க்குந் தாங்கொணா நஞ்ச முண்டு
பொறுத்தாய் புலனைந்தும் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.
6.041.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நெய்யாடியப்பர்.
தேவியார் - வாலாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
