திருவாரூர்

bookmark

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

073

இறைகளோ டிசைந்த இன்பம்

இன்பத்தோ டிசைந்த வாழ்வு
பறைகிழித் தனைய போர்வை

பற்றியான் நோக்கி னேற்குத்
திறைகொணர்ந் தீண்டித் தேவர்

செம்பொனும் மணியுந் தூவி
அறைகழல் இறைஞ்சும் ஆரூர்

அப்பனே அஞ்சி னேனே.

7.8.1

074

ஊன்மிசை உதிரக் குப்பை

ஒருபொரு ளிலாத மாயம்
மான்மறித் தனைய நோக்க

மடந்தைமார் மதிக்கு மிந்த
மானுடப் பிறவி வாழ்வு

வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்
ஆனல்வெள் ளேற்ற ஆரூர்

அப்பனே அஞ்சி னேனே.

7.8.2

075

அறுபதும் பத்தும் எட்டும்

ஆறினோ டஞ்சு நான்குந்
துறுபறித் தனைய நோக்கிச்

சொல்லிற்றொன் றாகச் சொல்லார்
நறுமலர்ப் பூவும் நீரும்

நாடொறும் வணங்கு வார்க்கு
அறிவினைக் கொடுக்கும் ஆரூர்

அப்பனே அஞ்சி னேனே.

7.8.3

076

சொல்லிடில் எல்லை இல்லை

சுவையிலாப் பேதை வாழ்வு
நல்லதோர் கூரை புக்கு

நலமிக அறிந்தே னல்லேன்
மல்லிகை மாடம் நீடு

மருங்கொடு நெருங்கி யெங்கும்
அல்லிவண் டியங்கும் ஆரூர்

அப்பனே அஞ்சி னேனே.

7.8.4

077

நரம்பினோ டெலும்பு கட்டி

நசையினோ டிசைவொன் றில்லாக்
குரம்பைவாய்க் குடியி ருந்து

குலத்தினால் வாழ மாட்டேன்
விரும்பிய கமழும் புன்னை

மாதவித் தொகுதி என்றும்
அரும்புவாய் மலரும் ஆரூர்

அப்பனே அஞ்சி னேனே.

7.8.5

078

மணமென மகிழ்வர் முன்னே

மக்கள்தாய் தந்தை சுற்றம்
பிணமெனச் சுடுவர் பேர்த்தே

பிறவியை வேண்டேன் நாயேன்
பணையிடைச் சோலை தோறும்

பைம்பொழில் விளாகத் தெங்கள்
அணைவினைக் கொடுக்கும் ஆரூர்

அப்பனே அஞ்சி னேனே.

7.8.6

079

தாழ்வெனுந் தன்மை விட்டுத்

தனத்தையே மனத்தில் வைத்து
வாழ்வதே கருதித் தொண்டர்

மறுமைக்கொன் றீய கில்லார்
ஆழ்குழிப் பட்ட போது

வலக்கணில் ஒருவர்க் காவர்
யாழ்முயன் றிருக்கும் ஆரூர்

அப்பனே அஞ்சி னேனே.

7.8.7

080

உதிரநீர் இறைச்சிக் குப்பை

எடுத்தது மலக்கு கைம்மேல்
வருவதோர் மாயக் கூரை

வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்
கரியமால் அயனுந் தேடிக்

கழலிணை காண மாட்டா
அரியனாய் நின்ற ஆரூர்

அப்பனே அஞ்சி னேனே.

7.8.8

081

பொய்த்தன்மைத் தாய மாயப்

போர்வையை மெய்யென் றெண்ணும்
வித்தகத் தாய வாழ்வு

வேண்டிநான் விரும்ப கில்லேன்
முத்தினைத் தொழுது நாளும்

முடிகளால் வணங்கு வார்க்கு
அத்தன்மைத் தாகும் ஆரூர்

அப்பனே அஞ்சி னேனே.

7.8.9

082

தஞ்சொலார் அருள் பயக்குந்

தமியனேன் தடமு லைக்கண்
அஞ்சொலார் பயிலும் ஆரூர்

அப்பனை ஊரன் அஞ்சிச்
செஞ்சொலால் நயந்த பாடல்

சிந்தியா ஏத்த வல்லார்
நஞ்சுலாங் கண்டத் தெங்கள்

நாதனை நணுகு வாரே.

7.8.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வன்மீகநாதர், தேவியார் - அல்லியங்கோதையம்மை.

திருச்சிற்றம்பலம்