திருவையாறு

bookmark

பண் - காந்தாரபஞ்சமம்

திருச்சிற்றம்பலம்

781

பரவும் பரிசொன் றறியேன்நான்

பண்டே உம்மைப் பயிலாதேன்
இரவும் பகலும் நினைந்தாலும்

எய்த நினைய மாட்டேன்நான்
கரவில் அருவி கமுகுண்ணத்

தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலை
அரவந் திரைக்கா விரிக்கோட்டத்

தையா றுடைய அடிகளோ.

7.77.1

782

எங்கே போவே னாயிடினும்

அங்கே வந்தென் மனத்தீராய்ச்
சங்கை யொன்றும் இன்றியே

தலைநாள் கடைநாள் ஒக்கவே
கங்கை சடைமேற் கரந்தானே

கலைமான் மறியுங் கனல்மழுவுந்
தங்குந் திரைக்கா விரிக்கோட்டத்

தையா றுடைய அடிகளோ.

7.77.2

783

மருவிப் பிரிய மாட்டேன்நான்

வழிநின் றொழிந்தேன் ஒழிகிலேன்
பருவி விச்சி மலைச்சாரற்

பட்டை கொண்டு பகடாடிக்
குருவி ஓப்பிக் கிளிகடிவார்

குழன்மேல் மாலை கொண்டோ ட்டந்
தரவந் திரைக்கா விரிக்கோட்டத்

தையா றுடைய அடிகளோ.

7.77.3

784

பழகா நின்று பணிசெய்வார்

பெற்ற பயனொன் றறிகிலேன்
இகழா துமக்காட் பட்டோ ர்க்கு

வேக படமொன் றரைச்சாத்தி
குழகா வாழைக் குலைத்தெங்கு

கொணர்ந்து கரைமேல் எறியவே
அழகார் திரைக்கா விரிக்கோட்டத்

தையா றுடைய அடிகளோ.

7.77.4

785

பிழைத்த பிழையொன் றறியேன்நான்

பிழையைத் தீரப் பணியாயே
மழைக்கண் நல்லார் குடைந்தாட

மலையும் நிலனுங் கொள்ளாமைக்
கழைக்கொள் பிரசங் கலந்தெங்குங்

கழனி மண்டிக் கையேறி
அழைக்குந் திரைக்கா விரிக்கோட்டத்

தையா றுடைய அடிகளோ.

7.77.5

786

கார்க்கொள் கொன்றைச் சடைமேலொன்

றுடையாய் விடையாய் கையினால்
மூர்க்கர் புரமூன் றெரிசெய்தாய்

முன்னீ பின்னீ முதல்வன்நீ
வார்க்கொள் அருவி பலவாரி

மணியும் முத்தும் பொன்னுங்கொண்
டார்க்குந் திரைக்கா விரிக்கோட்டத்

தையா றுடைய அடிகளோ.

7.77.6

787

மலைக்கண் மடவாள் ஒருபாலாய்ப்

பற்றி உலகம் பலிதேர்வாய்
சிலைக்கொள் கணையால் எயிலெய்த

செங்கண் விடையாய் தீர்த்தன்நீ
மலைக்கொள் ளருவி பலவாரி

மணியும் முத்தும் பொன்னுங்கொண்
டலைக்குந் திரைக்கா விரிக்கோட்டத்

தையா றுடைய அடிகளோ.

7.77.7

788

போழும் மதியும் புனக்கொன்றைப்

புனல்சேர் சென்னிப் புண்ணியா
சூழும் அரவச் சுடர்ச்சோதீ

உன்னைத் தொழுவார் துயர்போக
வாழு மவர்கள் அங்கங்கே

வைத்த சிந்தை உய்த்தாட்ட
ஆழுந் திரைக்கா விரிக்கோட்டத்

தையா றுடைய அடிகளோ.

7.77.8

789

கதிர்கொள் பசியே ஒத்தேநான்

கண்டேன் உம்மைக் காணாதேன்
எதிர்த்து நீந்த மாட்டேன்நான்

எம்மான் றம்மான் றம்மானே
விதிர்த்து மேகம் மழைபொழிய

வெள்ளம் பரந்து நுரைசிதறி
அதிர்க்குந் திரைக்கா விரிக்கோட்டத்

தையா றுடைய அடிகளோ.

7.77.9

790

கூசி அடியார் இருந்தாலுங்

குணமொன் றில்லீர் குறிப்பில்லீர்
தேச வேந்தன் திருமாலும்

மலர்மேல் அயனுங் காண்கிலாத்
தேச மெங்குந் தெளித்தாடத்

தெண்ணீர் அருவி கொணர்ந்தெங்கும்
வாசந் திரைக்கா விரிக்கோட்டத்

தையா றுடைய அடிகளோ.

7.77.10

791

கூடி அடியார் இருந்தாலுங்

குணமொன் றில்லீர் குறிப்பில்லீர்
ஊடி இருந்தும் உணர்கிலேன்

உம்மைத் தொண்டன் ஊரனேன்
தேடி யெங்குங் காண்கிலேன்

திருவா ரூரே சிந்திப்பன்
ஆடுந் திரைக்கா விரிக்கோட்டத்

தையா றுடைய அடிகளோ.

7.77.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்பொற்சோதியீசுவரர், தேவியார் - அறம் வளர்த்த நாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்