திருக்கடவூர் மயானம்

bookmark

பண் - பழம்பஞ்சுரம்

திருச்சிற்றம்பலம்

540

மருவார் கொன்றை மதிசூடி

மாணிக் கத்தின் மலைபோல
வருவார் விடைமேல் மாதோடு

மகிழ்ந்து பூதப் படைசூழத்
திருமால் பிரமன் இந்திரற்குந்

தேவர் நாகர் தானவர்க்கும்
பெருமான் கடவூர் மயானத்துப்

பெரிய பெருமா னடிகளே.

7.53.1

541

விண்ணோர் தலைவர் வெண்புரிநூல்

மார்பர் வேத கீதத்தர்
கண்ணார் நுதலர் நகுதலையர்

கால காலர் கடவூரர்
எண்ணார் புரமூன் றெரிசெய்த

இறைவ ருமையோ ரொருபாகம்
பெண்ணா ணாவர் மயானத்துப்

பெரிய பெருமா னடிகளே.

7.53.2

542

காயும் புலியின் அதளுடையர்

கண்டர் எண்டோ ட் கடவூரர்
தாயுந் தந்தை பல்லுயிர்க்குந்

தாமே யாய தலைவனார்
பாயும் விடையொன் றதுவேறிப்

பலிதேர்ந் துண்ணும் பரமேட்டி
பேய்கள் வாழும் மயானத்துப்

பெரிய பெருமா னடிகளே.

7.53.3

543

நறைசேர் மலரைங் கணையானை

நயனத் தீயாற் பொடிசெய்த
இறையா ராவர் எல்லார்க்கும்

இல்லை யென்னா தருள்செய்வார்
பறையார் முழவம் பாட்டோ டு

பயிலுந் தொண்டர் பயில்கடவூர்ப்
பிறையார் சடையார் மயானத்துப்

பெரிய பெருமா னடிகளே.

7.53.4

544

கொத்தார் கொன்றை மதிசூடிக்

கோள்நா கங்கள் பூணாக
மத்த யானை உரிபோர்த்து

மருப்பும் ஆமைத் தாலியார்
பத்தி செய்து பாரிடங்கள்

பாடி ஆடப் பலிகொள்ளும்
பித்தர் கடவூர் மயானத்துப்

பெரிய பெருமா னடிகளே.

7.53.5

545

துணிவார் கீளுங் கோவணமுந்

துதைந்து சுடலைப் பொடியணிந்து
பணிமே லிட்ட பாசுபதர்

*பஞ்ச வடிமார் பினர்கடவூர்த்
திணிவார் குழையார் புரமூன்றுந்

தீவாய்ப் படுத்த சேவகனார்
பிணிவார் சடையார் மயானத்துப்

பெரிய பெருமா னடிகளே.
* பஞ்சவடியாவது மயிர்ப்பூணநூல். இது மாவிரதியரென்னும்
உட்சமயத்தாரணிவது. மேலும் அவர்களணியுமணி எலும்பினாலாகிய
மணிகள். இவற்றை மானக்கஞ்சாறநாயனார் புராணத்து 23-வது
திருவிருத்தத்தானுமுணர்க.

7.53.6

546

காரார் கடலின் நஞ்சுண்ட

கண்டர் கடவூர் உறைவாணர்
தேரார் அரக்கன் போய்வீழ்ந்து

சிதைய விரலா லூன்றினார்
ஊர்தான் ஆவ துலகேழும்

உடையார்க் கொற்றி யூராரூர்
பேரா யிரவர் மயானத்துப்

பெரிய பெருமா னடிகளே.

7.53.7

547

வாடா முலையாள் தன்னோடும்

மகிழ்ந்து கானில் வேடுவனாய்க்
கோடார் கேழற் பின்சென்று

குறுகி விசயன் தவமழித்து
நாடா வண்ணஞ் செருச்செய்து

ஆவ நாழி நிலையருள்செய்
பீடார் சடையார் மயானத்துப்

பெரிய பெருமா னடிகளே.

7.53.8

548

வேழம் உரிப்பர் மழுவாளர்

வேள்வி அழிப்பர் சிரமறுப்பர்
ஆழி அளிப்பர் அரிதனக்கன்

றானஞ் சுகப்பர் அறமுரைப்பர்
ஏழைத் தலைவர் கடவூரில்

இறைவர் சிறுமான் மறிக்கையர்
பேழைச் சடையர் மயானத்துப்

பெரிய பெருமா னடிகளே.

7.53.9

549

மாட மல்கு கடவூரில்

மறையோ ரேத்தும் மயானத்துப்
பீடை தீர அடியாருக்

கருளும் பெருமா னடிகள்சீர்
நாடி நாவ லாரூரன்

நம்பி சொன்ன நற்றமிழ்கள்
பாடு மடியார் கேட்பார்மேற்

பாவ மான பறையுமே.

7.53.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசுவரர், தேவியார் - மலர்க்குழல்மின்னம்மை.

திருச்சிற்றம்பலம்