திருநெல்வாயில் அரத்துறை

bookmark

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

022

கல்வாய் அகிலுங் கதிர்மா மணியுங்

கலந்துந் திவருந் நிவவின் கரைமேல்
நெல்வா யில்அரத் துறைநீ டுறையும்

நிலவெண் மதிசூ டியநின் மலனே
நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்

நரைத்தார் இறந்தா ரென்றுநா னிலத்திற்
சொல்லாய்க் கழிகின் றதறிந் தடியேன்

தொடர்ந்தேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.

7.3.01

023

கறிமா மிளகும் மிகுவன் மரமும்

மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
நெறிவார் குழலா ரவர்காண நடஞ்செய்

நெல்வா யில்அரத் துறைநின் மலனே
வறிதே நிலையாத இம்மண் ணுலகில்

நரனா கவகுத் தனைநா னிலையேன்
பொறிவா யிலிவ்வைந் தினையும் மவியப்

பொருதுன் னடியே புகுஞ்சூழல் சொல்லே.

7.3.02

024

புற்றா டரவம் மரையார்த் துகந்தாய்

புனிதா பொருவெள் விடையூர் தியினாய்
எற்றே ஒருகண் ணிலன்நின்னை யல்லால்

நெல்வா யில்அரத் துறைநின் மலனே
மற்றேல் ஒருபற் றிலனெம் பெருமான்

வண்டார் குழலாள் மங்கைபங் கினனே
அற்றார் பிறவிக் கடல்நீந்தி யேறி

அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.

7.3.03

025

கோடுயர் கோங்க லர்வேங் கையலர்

மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
நீடுயர் சோலை நெல்வா யிலரத்

துறைநின் மலனே நினைவார் மனத்தாய்
ஓடு புனற்க ரையாம் இளமை

உறங்கி விழித்தா லொக்குமிப் பிறவி
வாடி இருந்து வருந்தல் செய்யா

தடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.

7.3.04

026

உலவு முலகிற் றலைகற் பொழிய

உயர்வே யோடிழி நிவவின் கரைமேல்
நிலவு மயிலா ரவர்தாம் பயிலும்

நெல்வா யிலரத் துறைநின் மலனே
புலனைந் தும்மயங் கியகங் குழையப்

பொருவே லோர்நமன் றமர்தாம் நலிய
அலமந்து மயங்கி அயர்வ தன்முன்

அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.

7.3.05

027

ஏலம் இலவங் கம்எழிற் கனகம்

மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
நீலம் மலர்ப்பொய் கையிலன் னம்மலி

நெல்வா யிலரத் துறையாய் ஒருநெல்
வாலூன் றவருந் தும்முடம் பிதனை

மகிழா தழகா வலந்தேன் இனியான்
ஆலந் நிழலில் அமர்ந்தாய் அமரா

அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.

7.3.06

028

சிகரம் முகத்திற் றிரளார் அகிலும்

மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
நிகரில் மயிலா ரவர்தாம் பயிலும்

நெல்வா யிலரத் துறைநின் மலனே
மகரக் குழையாய் மணக்கோ லமதே

பிணக்கோ லமதாம் பிறவி இதுதான்
அகரம் முதலின் எழுத்தாகி நின்றாய்

அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.

7.3.07

029

திண்டேர் நெடுவீ தியிலங் கையர்கோன்

றிரள்தோ ளிருபஃ தும்நெரித் தருளி
நெண்டா டுநெடு வயல்சூழ் புறவின்

நெல்வா யிலரத் துறைநின் மலனே
பண்டே மிகநான் செய்தபாக் கியத்தாற்

பரஞ்சோதி நின்னா மம்பயிலப் பெற்றேன்
அண்டா வமரர்க் கமரர் பெருமான்

அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.

7.3.08

030

மாணா வுருவா கியோர்மண் ணளந்தான்

மலர்மே லவன்நேடி யுங்காண் பரியாய்
நீணீள் முடிவா னவர்வந் திறைஞ்சும்

நெல்வா யிலரத் துறைநின் மலனே
வாணார் நுதலார் வலைப்பட் டடியேன்

பலவின் கனியீந் ததுபோல் வதன்முன்
ஆணோடு பெண்ணா முருவாகி நின்றாய்

அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.

7.3.09

031

நீரூ ரும்நெடு வயல்சூழ் புறவின்

நெல்வா யிலரத் துறைநின் மலனைத்
தேரூர் நெடுவீதி நன்மா டமலி

தென்னா வலர்கோ னடித்தொண்டு பண்ணி
ஆரூ ரனுரைத் தனநற் றமிழின்

மிகுமாலை யோர்பத் திவைகற்று வல்லார்
காரூர் களிவண் டறையானை மன்ன

ரவராகி யோர்விண் முழுதாள் பவரே.

7.3.10

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அரத்துறைநாதர், தேவியார் - ஆனந்தநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்