திருநின்றியூர்

bookmark

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

188

அற்றவ னாரடி யார்தமக்

காயிழை பங்கினராம்
பற்றவ னாரெம் பராபர

ரென்று பலர்விரும்பும்
கொற்றவ னார்குறு காதவர்

ஊர்நெடு வெஞ்சரத்தால்
செற்றவ னார்க்கிட மாவது

நந்திரு நின்றியூரே.

7.19.1

189

வாசத்தி னார்மலர்க் கொன்றையுள்

ளார்வடி வார்ந்தநீறு
பூசத்தி னார்புக லிந்நகர்

போற்றுமெம் புண்ணியத்தார்
நேசத்தி னாலென்னை யாளுங்கொண்

டார்நெடு மாகடல்சூழ்
தேசத்தி னார்க்கிட மாவது

நந்திரு நின்றியூரே.

7.19.2

190

அங்கையின் மூவிலை வேலர்

அமரர் அடிபரவச்
சங்கையை நீங்க அருளித்

தடங்கடல் நஞ்சமுண்டார்
மங்கையோர் பாகர் மகிழ்ந்த

இடம்வள மல்குபுனற்
செங்கயல் பாயும் வயல்பொலி

யுந்திரு நின்றியூரே.

7.19.3

191

ஆறுகந் தாரங்கம் நான்மறை

யாரெங்கு மாகியடல்
ஏறுகந் தாரிசை ஏழுகந்

தார்முடிக் கங்கைதன்னை
வேறுகந் தார்விரி நூலுகந்

தார்பரி சாந்தமதா
நீறுகந் தாருறை யும்மிட

மாந்திரு நின்றியூரே.

7.19.4

192

வஞ்சங்கொண் டார்மனஞ் சேரகில்

லார்நறு நெய்தயிர்பால்
அஞ்சுங்கொண் டாடிய வேட்கையி

னாரதி கைப்பதியே
தஞ்சங்கொண் டார்தமக் கென்றும்

இருக்கை சரணடைந்தார்
நெஞ்சங்கொண் டார்க்கிட மாவது

நந்திரு நின்றியூரே.

7.19.5

193

ஆர்த்தவர் ஆடர வம்மரை

மேற்புலி ஈருரிவை
போர்த்தவர் ஆனையின் தோலுடல்

வெம்புலால் கையகலப்
பார்த்தவ ரின்னுயிர் பார்படைத்

தான்சிர மஞ்சிலொன்றைச்
சேர்த்தவ ருக்குறை யும்மிட

மாந்திரு நின்றியூரே.

7.19.6

194

தலையிடை யார்பலி சென்றகந்

தோறுந் திரிந்தசெல்வர்
மலையுடை யாளொரு பாகம்வைத்

தார்கல் துதைந்தநன்னீர்
அலையுடை யார்சடை எட்டுஞ்

சுழல அருநடஞ்செய்
நிலையுடை யாருறை யும்மிட

மாந்திரு நின்றியூரே.

7.19.7

195

எட்டுகந் தார்திசை ஏழுகந்

தார்எழுத் தாறுமன்பர்
இட்டுகந் தார்மலர்ப் பூசையிச்

சிக்கும் இறைவர்முன்னாள்
பட்டுகும் பாரிடைக் காலனைக்

காய்ந்து பலியிரந்தூண்
சிட்டுகந் தார்க்கிட மாவது

நந்திரு நின்றியூரே.

7.19.8

196

காலமும் ஞாயிறு மாகிநின்

றார்கழல் பேணவல்லார்
சீலமுஞ் செய்கையுங் கண்டுகப்

பாரடி போற்றிசைப்ப
மாலொடு நான்முகன் இந்திரன்

மந்திரத் தால்வணங்க
நீலநஞ் சுண்டவ ருக்கிட

மாந்திரு நின்றியூரே.

7.19.9

197

வாயார் மனத்தால் நினைக்கு

மவருக் கருந்தவத்தில்
தூயார் சுடுபொடி யாடிய

மேனியர் வானிலென்றும்
மேயார் விடையுகந் தேறிய

வித்தகர் பேர்ந்தவர்க்குச்
சேயார் அடியார்க் கணியவர்

ஊர்திரு நின்றியூரே.

7.19.10

198

சேரும் புகழ்த்தொண்டர் செய்கை

அறாத்திரு நின்றியூரிற்
சீருஞ் சிவகதி யாயிருந்

தானைத் திருநாவலா
ரூரன் உரைத்த உறுதமிழ்

பத்தும்வல் லார்வினைபோய்ப்
பாரும் விசும்புந் தொழப்பர

மன்னடி கூடுவரே.

7.19.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மகாலட்சுமியீசுவரர், தேவியார் - உலகநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்