திருக்கச்சிஅனேகதங்காவதம்

bookmark

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

094

தேனெய் புரிந்துழல் செஞ்சடை யெம்பெரு

மானதி டந்திகழ் ஐங்கணையக்
கோனை யெரித்தெரி யாடி இடங்குல

வான திடங்குறை யாமறையாம்
மானை இடத்ததோர் கையனி டம்மத

மாறு படப்பொழி யும்மலைபோல்
யானை யுரித்த பிரான திடங்கலிக்

கச்சி அனேகதங் காவதமே.

7.10.1

095

கூறு நடைக்குழி கட்பகு வாயன

பேயுகந் தாடநின் றோரியிட
வேறு படக்குட கத்திலை யம்பல

வாணன்நின் றாடல் விரும்புமிடம்
ஏறு விடைக்கொடி யெம்பெரு மான்இமை

யோர்பெரு மான்உமை யாள்கணவன்
ஆறு சடைக்குடை அப்ப னிடங்கலிக்

கச்சி அனேகதங் காவதமே.

7.10.2

096

கொடிக ளிடைக்குயில் கூவுமி டம்மயி

லாலுமி டம்மழு வாளுடைய
கடிகொள் புனற்சடை கொண்ட நுதற்கறைக்

கண்டனி டம்பிறைத் துண்டமுடிச்
செடிகொள் வினைப்பகை தீருமி டந்திரு

வாகுமி டந்திரு மார்பகலத்
தடிக ளிடம்அழல் வண்ண னிடங்கலிக்

கச்சி அனேகதங் காவதமே.

7.10.3

097

கொங்கு நுழைத்தன வண்டறை கொன்றையுங்

கங்கையுந் திங்களுஞ் சூடுசடை
மங்குல் நுழைமலை மங்கையை நங்கையைப்

பங்கினிற் றங்க உவந்தருள்செய்
சங்கு குழைச்செவி கொண்டரு வித்திரள்

பாய வியாத்தழல் போலுடைத்தம்
அங்கை மழுத்திகழ் கைய னிடங்கலிக்

கச்சி அனேகதங் காவதமே.

7.10.4

098

பைத்த படத்தலை ஆடர வம்பயில்

கின்ற இடம்பயி லப்புகுவார்
சித்தம் ஒருநெறி வைத்த இடந்திகழ்

கின்ற இடந்திரு வானடிக்கே
வைத்த மனத்தவர் பத்தர் மனங்கொள

வைத்த இடம்மழு வாளுடைய
அத்தன் இடம்அழல் வண்ண னிடங்கலிக்

கச்சி அனேகதங் காவதமே.

7.10.5

099

தண்ட முடைத்தரு மன்தமர் என்றம

ரைச்செயும் வன்துயர் தீர்க்குமிடம்
பிண்ட முடைப்பிற வித்தலை நின்று

நினைப்பவர் ஆக்கையை நீக்குமிடம்
கண்ட முடைக்கரு நஞ்சை நுகர்ந்த

பிரான திடங்கடல் ஏழுகடந்
தண்ட முடைப்பெரு மான திடங்கலிக்

கச்சி அனேகதங் காவதமே.

7.10.6

100

கட்டு மயக்கம் அறுத்தவர் கைதொழு

தேத்து மிடங்கதி ரோன்ஒளியால்
விட்ட இடம்விடை யூர்தி யிடங்குயிற்

பேடைதன் சேவலோ டாடுமிடம்
மட்டு மயங்கி அவிழ்ந்த மலரொரு

மாதவி யோடு மணம்புணரும்
அட்ட புயங்கப் பிரான திடங்கலிக்

கச்சி அனேகதங் காவதமே.

7.10.7

101

புல்லி இடந்தொழு துய்துமெ னாதவர்

தம்புர மூன்றும் பொடிப்படுத்த
வில்லி இடம்விர வாதுயிர் உண்ணும்வெங்

காலனைக் கால்கொடு வீந்தவியக்
கொல்லி இடங்குளிர் மாதவி மவ்வல்

குராவகு ளங்குருக் கத்திபுன்னை
அல்லி யிடைப்பெடை வண்டுறங் குங்கலிக்

கச்சி அனேகதங் காவதமே.

7.10.8

102

சங்கை யவர்புணர் தற்கரி யான்றள

வேனகை யாள்தவி ராமிகுசீர்
மங்கை யவள்மகி ழச்சுடு காட்டிடை

நட்டம்நின் றாடிய சங்கரனெம்
அங்கையி னல்லனல் ஏந்து மவன்கனல்

சேரொளி யன்னதோர் பேரகலத்
தங்கை யவன்னுறை கின்ற இடங்கலிக்

கச்சி அனேகதங் காவதமே.

7.10.9

103

வீடு பெறப்பல ஊழிகள் நின்று

நினைக்கும் இடம்வினை தீருமிடம்
பீடு பெறப்பெரி யோர திடங்கொண்டு

மேவினர் தங்களைக் காக்குமிடம்
பாடு மிடத்தடி யான்புகழ் ஊரன்

உரைத்தஇம் மாலைகள் பத்தும்வல்லார்
கூடு மிடஞ்சிவ லோகன் இடங்கலிக்

கச்சி அனேகதங் காவதமே.

7.10.10

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காவதேசுவரர்,
தேவியார் - காமாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம்