திருவொற்றியூர் - திருத்தாண்டகம்

bookmark

திருச்சிற்றம்பலம்

448

வண்டோங்கு செங்கமலங் கழுநீர் மல்கும்

மதமத்தஞ் சேர்சடைமேல் மதியஞ் சூடித்
திண்டோள்கள் ஆயிரமும் வீசி நின்று

திசைசேர நடமாடிச் சிவலோ கனார்
உண்டார்நஞ் சுலகுக்கோ ருறுதி வேண்டி

ஒற்றியூர் மேய வொளிவண் ணனார்
கண்டேன்நான் கனவகத்திற் கண்டேற் கென்றன்

கடும்பிணியுஞ் சுடுந்தொழிலுங் கைவிட் டவே.

6.045.1

449

ஆகத்தோர் பாம்பசைத்து வெள்ளே றேறி

அணிகங்கை செஞ்சடைமே லார்க்கச் சூடிப்
பாகத்தோர் பெண்ணுடையார் ஆணு மாவர்

பசுவேறி யுழிதருமெம் பரம யோகி
காமத்தால் ஐங்கணையான் தன்னை வீழக்

கனலா எரிவிழித்த கண்மூன் றினார்
ஓமத்தால் நான்மறைகள் ஓதல் ஓவா

ஒளிதிகழும் ஒற்றியூ ருறைகின் றாரே.

6.045.2

450

வெள்ளத்தைச் செஞ்சடைமேல் விரும்பி வைத்தீர்

வெண்மதியும் பாம்பு முடனே வைத்தீர்
கள்ளத்தை மனத்தகத்தே கரந்து வைத்தீர்

கண்டார்க்குப் பொல்லாது கண்டீர் எல்லே
கொள்ளத்தான் இசைபாடிப் பலியுங் கொள்ளீர்

கோளரவுங் குளிர்மதியுங் கொடியுங் காட்டி
உள்ளத்தை நீர்கொண்டீர் ஓதல் ஓவா

ஒளிதிகழும் ஒற்றியூ ருடைய கோவே.

6.045.3

451

நரையார்ந்த விடையேறி நீறு பூசி

நாகங்கச் சரைக்கார்த்தோர் தலைகை யேந்தி
உரையாவந் தில்புகுந்து பலிதான் வேண்ட

எம்மடிக ளும்மூர்தான் ஏதோ என்ன
விரையாதே கேட்டியேல் வேற்கண் நல்லாய்

விடுங்கலங்கள் நெடுங்கடலுள்நின்றுதோன்றுந்
திரைமோதக் கரையேறிச் சங்க மூருந்

திருவொற்றி யூரென்றார் தீய வாறே.

6.045.4

452

மத்தமா களியானை யுரிவை போர்த்து

வானகத்தார் தானகத்தா ராகி நின்று
பித்தர்தாம் போலங்கோர் பெருமை பேசிப்

பேதையரை யச்சுறுத்திப் பெயரக் கண்டு
பத்தர்கள்தாம் பலருடனே கூடிப் பாடிப்

பயின்றிருக்கு மூரேதோ பணீயீ ரென்ன
ஒத்தமைந்த உத்திரநாள் தீர்த்த மாக

ஒளிதிகழும் ஒற்றியூ ரென்கின் றாரே.

6.045.5

453

கடிய விடையேறிக் காள கண்டர்

கலையோடு மழுவாளோர் கையி லேந்தி
இடிய பலிகொள்ளார் போவா ரல்லர்

எல்லாந்தா னிவ்வடிகள் யாரென் பாரே
வடிவுடைய மங்கையுந் தாமு மெல்லாம்

வருவாரை யெதிர்கண்டோம் மயிலாப் புள்ளே
செடிபடுவெண் டலையொன் றேந்தி வந்து

திருவொற்றி யூர்புக்கார் தீய வாறே.

6.045.6

454

வல்லாராய் வானவர்க ளெல்லாங் கூடி

வணங்குவார் வாழ்த்துவார் வந்து நிற்பார்
எல்லேயெம் பெருமானைக் காணோ மென்ன

எவ்வாற்றால் எவ்வகையாற் காண மாட்டார்
நல்லார்கள் நான்மறையோர் கூடி நேடி

நாமிருக்கு மூர்பணியீ ரடிகே ளென்ன
ஒல்லைதான் திரையேறி யோதம் மீளும்

ஒளிதிகழும் ஒற்றியூ ரென்கின் றாரே.

6.045.7

455

நிலைப்பாடே நான்கண்ட தேடீ கேளாய்

நெருநலைநற் பகலிங்கோ ரடிகள் வந்து
கலைப்பாடுங் கண்மலருங் கலக்க நோக்கிக்

கலந்து பலியிடுவே னெங்குங் காணேன்
சலப்பாடே யினியொருநாட் காண்பே னாகில்

தன்னாகத் தென்னாகம் ஒடுங்கும் வண்ண
முலைப்பாடே படத்தழுவிப் போக லொட்டேன்

ஒற்றியூ ருறைந்திங்கே திரிவானையே.

6.045.8

456

மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை

மலையல்லை கடலல்லை வாயு வல்லை
எண்ணல்லை யெழுத்தல்லை யெரியு மல்லை

யிரவல்லை பகலல்லை யாவு மல்லை
பெண்ணல்லை யாணல்லை பேடு மல்லை

பிறிதல்லை யானாயும் பெரியாய் நீயே
உண்ணல்லை நல்லார்க்குத் தீயை யல்லை

உணர்வரிய ஒற்றியூ ருடைய கோவே.

6.045.9

457

மருவுற்ற மலர்க்குழலி மடவா ளஞ்ச

மலைதுளங்கத் திசைநடுங்கச் செறுத்து நோக்கிச்
செருவுற்ற வாளரக்கன் வலிதான் மாளத்

திருவடியின் விரலொன்றால் அலற வூன்றி
உருவொற்றி யங்கிருவ ரோடிக் காண

ஓங்கினவவ் வொள்ளழலா ரிங்கே வந்து
திருவொற்றி யூர்நம்மூ ரென்று போனார்

செறிவளைகள் ஒன்றொன்றாச் சென்ற வாறே.

6.045.10

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாணிக்கத்தியாகர்.
தேவியார் - வடிவுடையம்மை.

திருச்சிற்றம்பலம்