திருமழபாடி - திருத்தாண்டகம்

bookmark

திருச்சிற்றம்பலம்

391

நீறேறு திருமேனி யுடையான் கண்டாய்

நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைந்தான் கண்டாய்
கூறாக உமைபாகங் கொண்டான் கண்டாய்

கொடியவிட முண்டிருண்ட கண்டன் கண்டாய்
ஏறேறி யெங்குந் திரிவான் கண்டாய்

ஏழுலகும் ஏழ்மலையு மானான் கண்டாய்
மாறானார் தம்மரண மட்டான் கண்டாய்

மழபாடி மன்னும் மணாளன் றானே.

6.39.1

392

கொக்கிறகு சென்னி யுடையான் கண்டாய்

கொல்லை விடையேறுங் கூத்தன் கண்டாய்
அக்கரைமே லாட லுடையான் கண்டாய்

அனலங்கை யேந்திய ஆதி கண்டாய்
அக்கோ டரவ மணிந்தான் கண்டாய்

அடியார்கட் காரமுத மானான் கண்டாய்
மற்றிருந்த கங்கைச் சடையான் கண்டாய்

மழபாடி மன்னும் மணாளன் றானே.

6.39.2

393

நெற்றித் தனிக்கண் ணுடையான் கண்டாய்

நேரிழையோர் பாகமாய் நின்றான் கண்டாய்
பற்றிப்பாம் பாட்டும் படிறன் கண்டாய்

பல்லூர் பலிதேர் பரமன் கண்டாய்
செற்றார் புரமூன்றுஞ் செற்றான் கண்டாய்

செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்
மற்றொரு குற்ற மிலாதான் கண்டாய்

மழபாடி மன்னும் மணாளன் றானே.

6.39.3

394

அலையார்ந்த புனற்கங்கைச் சடையான் கண்டாய்

அண்டத்துக் கப்பாலாய் நின்றான் கண்டாய்
கொலையான கூற்றங் குமைத்தான் கண்டாய்

கொல்வேங்கைத் தோலொன் றுடுத்தான் கண்டாய்
சிலையாற் றிரிபுரங்கள் செற்றான் கண்டாய்

செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்
மலையார் மடந்தை மணாளன் கண்டாய்

மழபாடி மன்னும் மணாளன் றானே.

6.39.4

395

உலந்தார்தம் அங்க மணிந்தான் கண்டாய்

உவகையோ டின்னருள்கள் செய்தான் கண்டாய்
நலந்திகழுங் கொன்றைச் சடையான் கண்டாய்

நால்வேத மாறங்க மானான் கண்டாய்
உலந்தார் தலைகலனாக் கொண்டான் கண்டாய்

உம்பரார் தங்கள் பெருமான் கண்டாய்
மலர்ந்தார் திருவடியென் தலைமேல் வைத்த

மழபாடி மன்னும் மணாளன் றானே.

6.39.5

396

தாமரையான் தன்றலையைச் சாய்த்தான் கண்டாய்

தகவுடையார் நெஞ்சிருக்கை கொண்டான் கண்டாய்
பூமலரா னேத்தும் புனிதன் கண்டாய்

புணர்ச்சிப் பொருளாகி நின்றான் கண்டாய்
ஏமருவு வெஞ்சிலையொன் றேந்தி கண்டாய்

இருளார்ந்த கண்டத் திறைவன் கண்டாய்
மாமருவுங் கலைகையி லேந்தி கண்டாய்

மழபாடி மன்னும் மணாளன் றானே.

6.39.6

397

நீராகி நெடுவரைக ளானான் கண்டாய்

நிழலாகி நீள்விசும்பு மானான் கண்டாய்
பாராகிப் பௌவமே ழானான் கண்டாய்

பகலாகி வானாகி நின்றான் கண்டாய்
ஆரேனுந் தன்னடியார்க் கன்பன் கண்டாய்

அணுவாகி ஆதியாய் நின்றான் கண்டாய்
வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்

மழபாடி மன்னும் மணாளன் றானே.

6.39.7

398

பொன்னியலுந் திருமேனி யுடையான் கண்டாய்

பூங்கொன்றைத் தாரொன் றணிந்தான் கண்டாய்
மின்னியலும் வார்சடையெம் பெருமான் கண்டாய்

வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தான் கண்டாய்
தன்னியல்பார் மற்றொருவ ரில்லான் கண்டாய்

தாங்கரிய சிவந்தானாய் நின்றான் கண்டாய்
மன்னிய மங்கையோர் கூறன் கண்டாய்

மழபாடி மன்னும் மணாளன் றானே.

6.39.8

399

ஆலால முண்டுகந்த ஆதி கண்டாய்

அடையலர்தம் புரமூன்று மெய்தான் கண்டாய்
காலாலக் காலனையுங் காய்ந்தான் கண்டாய்

கண்ணப்பர்க் கருள்செய்த காளை கண்டாய்
பாலாரும் மொழிமடவாள் பாகன் கண்டாய்

பசுவேறிப் பலிதிரியும் பண்பன் கண்டாய்
மாலாலு மறிவரிய மைந்தன் கண்டாய்

மழபாடி மன்னும் மணாளன் றானே.

6.39.9

400

ஒருசுடரா யுலகேழு மானான் கண்டாய்

ஓங்காரத் துட்பொருளாய் நின்றான் கண்டாய்
விரிசுடராய் விளங்கொளியாய் நின்றான் கண்டாய்

விழவொலியும் வேள்வொலியு மானான் கண்டாய்
இருசுடர் மீதோடா இலங்கைக் கோனை

ஈடழிய இருபதுதோ ளிறுத்தான் கண்டாய்
மருசுடரின் மாணிக்கக் குன்று கண்டாய்

மழபாடி மன்னும் மணாளன் றானே.

6.39.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வச்சிரத்தம்பேசுவரர்,
தேவியார் - அழகாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்