திருவையாறு - திருத்தாண்டகம்

bookmark

திருச்சிற்றம்பலம்

380

ஓசை ஒலியெலா மானாய் நீயே

உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலா மானாய் நீயே

மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிது மினியாய் நீயே

பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலா மானாய் நீயே

திருவையா றகலாத செம்பொற் சோதீ.

6.38.1

381

நோக்கரிய திருமேனி யுடையாய் நீயே

நோவாமே நோக்கருள வல்லாய் நீயே
காப்பரிய ஐம்புலனுங் காத்தாய் நீயே

காமனையுங் கண்ணழலாற் காய்ந்தாய் நீயே
ஆர்ப்பரிய மாநாக மார்த்தாய் நீயே

அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே
தீர்ப்பரிய வல்வினைநோய் தீர்ப்பாய் நீயே

திருவையா றகலாத செம்பொற் சோதீ.

6.38.2

382

கனத்தகத்துக் கடுஞ்சுடராய் நின்றாய் நீயே

கடல்வரைவான் ஆகாய மானாய் நீயே
தனத்தகத்துத் தலைகலனாக் கொண்டாய் நீயே

சார்ந்தாரைத் தகைந்தாள வல்லாய் நீயே
மனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் நீயே

மலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
சினத்திருந்த திருநீல கண்டன் நீயே

திருவையா றகலாத செம்பொற் சோதீ

6.38.3

383

வானுற்ற மாமலைக ளானாய் நீயே

வடகயிலை மன்னி யிருந்தாய் நீயே
ஊனுற்ற ஒளிமழுவாட் படையாய் நீயே

ஒளிமதியோ டரவுபுனல் வைத்தாய் நீயே
ஆனுற்ற ஐந்து மமர்ந்தாய் நீயே

அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே
தேனுற்ற சொன்மடவாள் பங்கன் நீயே

திருவையா றகலாத செம்பொற் சோதீ.

6.38.4

384

பெண்ணாண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே

பெரியார்கட் கெல்லாம் பெரியாய் நீயே
உண்ணா வருநஞ்ச முண்டாய் நீயே

ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே
கண்ணா யுலகெலாங் காத்தாய் நீயே

கழற்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்ணார் மழுவாட் படையாய் நீயே

திருவையா றகலாத செம்பொற் சோதீ.

6.38.5

385

உற்றிருந்த உணர்வெலா மானாய் நீயே

உற்றவர்க்கோர் சுற்றமாய் நின்றாய் நீயே
கற்றிருந்த கலைஞான மானாய் நீயே

கற்றவர்க்கோர் கற்பகமாய் நின்றாய் நீயே
பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே

பிரானா யடியென்மேல் வைத்தாய் நீயே
செற்றிருந்த திருநீல கண்டன் நீயே

திருவையா றகலாத செம்பொற் சோதீ.

6.38.6

386

எல்லா வுலகமு மானாய் நீயே

ஏகம்ப மேவி யிருந்தாய் நீயே
நல்லாரை நன்மை யறிவாய் நீயே

ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே
பொல்லா வினைக ளறுப்பாய் நீயே

புகழ்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
செல்வாய செல்வந் தருவாய் நீயே

திருவையா றகலாத செம்பொற் சோதீ.

6.38.7

387

ஆவினில் ஐந்து மமர்ந்தாய் நீயே

அளவில் பெருமை யுடையாய் நீயே
பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே

போர்க்கோலங் கொண்டெயி லெய்தாய் நீயே
நாவில் நடுவுரையாய் நின்றாய் நீயே

நண்ணி யடியென்மேல் வைத்தாய் நீயே
தேவ ரறியாத தேவன் நீயே

திருவையா றகலாத செம்பொற் சோதீ.

6.38.8

388

எண்டிசைக்கும் ஒண்சுடராய் நின்றாய் நீயே

ஏகம்ப மேய இறைவன் நீயே
வண்டிசைக்கும் நறுங்கொன்றைத் தாராய் நீயே

வாரா வுலகருள வல்லாய் நீயே
தொண்டிசைத்துன் னடிபரவ நின்றாய் நீயே

தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்சிலைக்கோர் சரங்கூட்ட வல்லாய் நீயே

திருவையா றகலாத செம்பொற் சோதீ.

6.38.9

389

விண்டார் புரமூன்று மெய்தாய் நீயே

விண்ணவர்க்கும் மேலாகி நின்றாய் நீயே
கண்டாரைக் கொல்லும்நஞ் சுண்டாய் நீயே

காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே
தொண்டாய் அடியேனை ஆண்டாய் நீயே

தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்டோ ள்விட் டெரியாட லுகந்தாய் நீயே

திருவையா றகலாத செம்பொற் சோதீ.

6.38.10

390

ஆரு மறியா இடத்தாய் நீயே

ஆகாயந் தேரூர வல்லாய் நீயே
பேரும் பெரிய இலங்கை வேந்தன்

பெரிய முடிபத் திறுத்தாய் நீயே
ஊரும் புரமூன்று மட்டாய் நீயே

ஒண்டா மரையானும் மாலுங் கூடித்
தேரும் அடியென்மேல் வைத்தாய் நீயே

திருவையா றகலாத செம்பொற் சோதீ.

6.38.11

திருச்சிற்றம்பலம்