திருப்பழனம் - திருத்தாண்டகம்

bookmark

திருச்சிற்றம்பலம்

360

அலையார் கடல்நஞ்ச முண்டார் தாமே

அமரர்களுக் கருள்செய்யு மாதி தாமே
கொலையாய கூற்ற முதைத்தார் தாமே

கொல்வேங்கைத் தோலொன் றசைத்தார் தாமே
சிலையாற் புரமூன் றெரித்தார் தாமே

தீநோய் களைந்தென்னை யாண்டார் தாமே
பலிதேர்ந் தழகாய பண்பர் தாமே

பழன நகரெம் பிரானார் தாமே.

6.36.1

361

வெள்ள மொருசடைமே லேற்றார் தாமே

மேலார்கண் மேலார்கண் மேலார் தாமே
கள்ளங் கடிந்தென்னை யாண்டார் தாமே

கருத்துடைய பூதப் படையார் தாமே
உள்ளத் துவகை தருவார் தாமே

உறுநோய் சிறுபிணிகள் தீர்ப்பார் தாமே
பள்ளப் பரவைநஞ் சுண்டார் தாமே

பழன நகரெம் பிரானார் தாமே.

6.36.2

362

இரவும் பகலுமாய் நின்றார் தாமே

எப்போது மென்னெஞ்சத் துள்ளார் தாமே
அரவ மரையி லசைத்தார் தாமே

அனலாடி யங்கை மறித்தார் தாமே
குரவங் கமழுங்குற் றாலர் தாமே

கோலங்கள் மேன்மே லுகப்பார் தாமே
பரவு மடியார்க்குப் பாங்கர் தாமே

பழன நகரெம் பிரானார் தாமே.

6.36.3

363

மாறின் மதின்மூன்று மெய்தார் தாமே

வரியரவங் கச்சாக ஆர்த்தார் தாமே
நீறுசேர் திருமேனி நிமலர் தாமே

நெற்றி நெருப்புக்கண் வைத்தார் தாமே
ஏறு கொடுஞ்சூலக் கையார் தாமே

என்பா பரண மணிந்தார் தாமே
பாறுண் தலையிற் பலியார் தாமே

பழன நகரெம் பிரானார் தாமே.

6.364

364

சீரால் வணங்கப் படுவார் தாமே

திசைக்கெல்லாந் தேவாகி நின்றார் தாமே
ஆரா வமுதமு மானார் தாமே

அளவில் பெருமை யுடையார் தாமே
நீரார் நியம முடையார் தாமே

நீள்வரை வில்லாக வளைத்தார் தாமே
பாரார் பரவப் படுவார் தாமே

பழன நகரெம் பிரானார் தாமே.

6.36.5

365

கால னுயிர்வௌவ வல்லார் தாமே

கடிதோடும் வெள்ளை விடையார் தாமே
கோலம் பலவு முகப்பார் தாமே

கோள்நாக நாணாகப் பூண்டார் தாமே
நீலம் பொலிந்த மிடற்றார் தாமே

நீள்வரையி னுச்சி யிருப்பார் தாமே
பால விருத்தரு மானார் தாமே

பழன நகரெம் பிரானார் தாமே.

6.36.6

366

ஏய்ந்த வுமைநங்கை பங்கர் தாமே

ஏழூழிக் கப்புறமாய் நின்றார் தாமே
ஆய்ந்து மலர்தூவ நின்றார் தாமே

அளவில் பெருமை யுடையார் தாமே
தேய்ந்த பிறைசடைமேல் வைத்தார் தாமே

தீவா யரவதனை யார்த்தார் தாமே
பாய்ந்த படர்கங்கை யேற்றார் தாமே

பழன நகரெம் பிரானார் தாமே.

6.36.7

367

ஓராதார் உள்ளத்தில் நில்லார் தாமே

உள்ளூறு மன்பர் மனத்தார் தாமே
பேராதென் சிந்தை யிருந்தார் தாமே

பிறர்க்கென்றுங் காட்சிக் கரியார் தாமே
ஊராரு மூவுலகத் துள்ளார் தாமே

உலகை நடுங்காமற் காப்பார் தாமே
பாரார் முழவத் திடையார் தாமே

பழன நகரெம் பிரானார் தாமே.

6.36.8

368

நீண்டவர்க்கோர் நெருப்புருவ மானார் தாமே

நேரிழையை யொருபாகம் வைத்தார் தாமே
பூண்டரவைப் புலித்தோல்மே லார்த்தார் தாமே

பொன்னிறத்த வெள்ளச் சடையார் தாமே
ஆண்டுலகே ழனைத்தினையும் வைத்தார் தாமே

அங்கங்கே சிவமாகி நின்றார் தாமே
பாண்டவரிற் பார்த்தனுக்குப் பரிந்தார் தாமே

பழன நகரெம் பிரானார் தாமே.

6.36.9

369

விடையேறி வேண்டுலகத் திருப்பார் தாமே

விரிகதிரோன் சோற்றுத் துறையார் தாமே
புடைசூழத் தேவர் குழாத்தார் தாமே

பூந்துருத்தி நெய்த்தான மேயார் தாமே
அடைவே புனல்சூழ்ஐ யாற்றார் தாமே

அரக்கனையு மாற்ற லழித்தார் தாமே
படையாப் பல்பூத முடையார் தாமே

பழன நகரெம் பிரானார் தாமே.

6.36.10

திருச்சிற்றம்பலம்