திருவாரூர் - திருத்தாண்டகம்

bookmark

திருச்சிற்றம்பலம்

340

ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ

ஓருருவே மூவுருவ மான நாளோ
கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ

காமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும்விண்ணுந் தெரித்த நாளோ

மான்மறிக்கை யேந்தியோர் மாதோர் பாகந்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ

திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6.34.1

341

மலையார்பொற் பாவையொடு மகிழ்ந்த நாளோ

வானவரை வலியமுத மூட்டி யந்நாள்
நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ

நினைப்பரிய தழற்பிழம்பாய் நிமிர்ந்த நாளோ
அலைசாமே அலைகடல்நஞ் சுண்ட நாளோ

அமரர்கணம் புடைசூழ இருந்த நாளோ
சிலையால்முப் புரமெரித்த முன்னோ பின்னோ

திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6.34.2

342

பாடகஞ்சேர் மெல்லடிநற் பாவை யாளும்

நீயும்போய்ப் பார்த்தனது பலத்தைக் காண்பான்
வேடனாய் வில்வாங்கி யெய்த நாளோ

விண்ணவர்க்குங் கண்ணவனாய் நின்ற நாளோ
மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை

மணிதிகழும் அம்பலத்தே மன்னிக் கூத்தை
ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ

அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6.34.3

343

ஓங்கி யுயர்ந்தெழுந்து நின்ற நாளோ

ஓருகம்போல் ஏழுகமாய் நின்ற நாளோ
தாங்கியசீர்த் தலையான வானோர் செய்த

தக்கன்றன் பெருவேள்வி தகர்த்த நாளோ
நீங்கியநீர்த் தாமரையான் நெடுமா லோடு

நில்லாயெம் பெருமானே யென்றங் கேத்தி
வாங்கிமதி வைப்பதற்கு முன்னோ பின்னோ

வளராரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6.34.4

344

பாலனாய் வளர்ந்திலாப் பான்மை யானே

பணிவார்கட் கங்கங்கே பற்றா னானே
நீலமா மணிகண்டத் தெண்டோ ளானே

நெருநலையாய் இன்றாகி நாளை யாகுஞ்
சீலமே சிவலோக நெறியே யாகுஞ்

சீர்மையே கூர்மையே குணமே நல்ல
கோலம்நீ கொள்வதற்கு முன்னோ பின்னோ

குளிராரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6.34.5

345

திறம்பலவும் வழிகாட்டிச் செய்கை காட்டிச்

சிறியையாய்ப் பெரியையாய் நின்ற நாளோ
மறம்பலவு முடையாரை மயக்கந் தீர்த்து

மாமுனிவர்க் கருள்செய்தங் கிருந்த நாளோ
பிறங்கியசீர்ப் பிரமன்றன் தலைகை யேந்திப்

பிச்சையேற் றுண்டுழன்று நின்ற நாளோ
அறம்பலவு முரைப்பதற்கு முன்னோ பின்னோ

அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6.34.6

346

நிலந்தரத்து நீண்டுருவ மான நாளோ

நிற்பனவும் நடப்பனவும் நீயே யாகிக்
கலந்துரைக்கக் கற்பகமாய் நின்ற நாளோ

காரணத்தால் நாரணனைக் கற்பித் தன்று
வலஞ்சுருக்கி வல்லசுரர் மாண்டு வீழ

வாசுகியை வாய்மடுத்து வானோ ருய்யச்
சலந்தரனைக் கொல்வதற்கு முன்னோ பின்னோ

தண்ணாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6.34.7

347

பாதத்தால் முயலகனைப் பாது காத்துப்

பாரகத்தே பரஞ்சுடராய் நின்ற நாளோ
கீதத்தை மிகப்பாடும் அடியார்க் கென்றுங்

கேடிலா வானுலகங் கொடுத்த நாளோ
பூதத்தான் பொருநீலி புனிதன் மேவிப்

பொய்யுரையா மறைநால்வர் விண்ணோர்க் கென்றும்
வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ

விழவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6.34.8

348

புகையெட்டும் போக்கெட்டும் புலன்க ளெட்டும்

பூதலங்க ளவையெட்டும் பொழில்க ளெட்டுங்
கலையெட்டுங் காப்பெட்டுங் காட்சி யெட்டுங்

கழற்சே வடியடைந்தார் களைக ணெட்டும்
நகையெட்டும் நாளெட்டும் நன்மை யெட்டும்

நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்க ளெட்டுந்
திகையெட்டுந் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ

திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6.34.9

349

ஈசனா யுலகேழும் மலையு மாகி

இராவணனை ஈடழித்திட் டிருந்த நாளோ
வாசமலர் மகிழ்தென்ற லான நாளோ

மதயானை யுரிபோர்த்து மகிழ்ந்த நாளோ
தாதுமலர் சண்டிக்குக் கொடுத்த நாளோ

சகரர்களை மறித்திட்டாட் கொண்ட நாளோ
தேசமுமை யறிவதற்கு முன்னோ பின்னோ

திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6.34.10

திருச்சிற்றம்பலம்