திருவாரூர் - திருத்தாண்டகம்

bookmark

திருச்சிற்றம்பலம்

310

இடர்கெடுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா

ஈண்டொளிசேர் கங்கைச் சடையா யென்றுஞ்
சுடரொளியா யுள்விளங்கு சோதி யென்றுந்

தூநீறு சேர்ந்திலங்கு தோளா வென்றுங்
கடல்விடம துண்டிருண்ட கண்டா வென்றுங்

கலைமான் மறியேந்து கையா வென்றும்
அடல்விடையாய் ஆரமுதே ஆதி யென்றும்

ஆரூரா வென்றென்றே அலறா நில்லே.

6.31.1

311

செடியேறு தீவினைகள் தீரும் வண்ணஞ்

சிந்தித்தே நெஞ்சமே திண்ண மாகப்
பொடியேறு திருமேனி யுடையா யென்றும்

புரந்தரன்றன் தோள்துணித்த புனிதா வென்றும்
அடியேனை யாளாகக் கொண்டா யென்றும்

அம்மானே ஆரூரெம் மரசே யென்றுங்
கடிநாறு பொழிற்கச்சிக் கம்பா வென்றுங்

கற்பகமே யென்றென்றே கதறா நில்லே.

6.31.2

312

நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா

நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குக்
புலர்வதன்முன் னலகிட்டு மெழுக்கு மிட்டுப்

பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்

சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதி யென்றும்

ஆரூரா வென்றென்றே அலறா நில்லே.

6.31.3

313

புண்ணியமும் நன்னெறியு மாவ தெல்லாம்

நெஞ்சமே இதுகண்டாய் பொருந்தக் கேள்நீ
நுண்ணியவெண் ணூல்கிடந்த மார்பா வென்றும்

நுந்தாத வொண்சுடரே யென்று நாளும்
விண்ணியங்கு தேவர்களும் வேதம் நான்கும்

விரைமலர்மேல் நான்முகனும் மாலுங் கூடி
எண்ணரிய திருநாம முடையா யென்றும்

எழிலாரூ ராவென்றே ஏத்தா நில்லே.

6.31.4

314

இழைத்தநாள் எல்லை கடப்ப தென்றால்

இரவினொடு நண்பகலு மேத்தி வாழ்த்திப்
பிழைத்ததெலாம் பொறுத்தருள்செய் பெரியோ யென்றும்

பிஞ்ஞகனே மைஞ்ஞவிலுங் கண்டா வென்றும்
அழைத்தலறி அடியேனுன் னரணங் கண்டாய்

அணியாரூர் இடங்கொண்ட அழகா வென்றுங்
குழற்சடையெங் கோனென்றுங் கூறு நெஞ்சே

குற்றமில்லை யென்மேல்நான் கூறி னேனே.

6.31.5

315

நீப்பரிய பல்பிறவி நீக்கும் வண்ணம்

நினைந்திருந்தேன் காண்நெஞ்சே நித்த மாகச்
சேப்பிரியா வெல்கொடியி னானே யென்றுஞ்

சிவலோக நெறிதந்த சிவனே யென்றும்
பூப்பிரியா நான்முகனும் புள்ளின் மேலைப்

புண்டரிகக் கண்ணானும் போற்றி யென்னத்
தீப்பிழம்பாய் நின்றவனே செல்வ மல்குந்

திருவாரூ ராவென்றே சிந்தி நெஞ்சே.

6.31.6

316

பற்றிநின்ற பாவங்கள் பாற்ற வேண்டிற்

பரகதிக்குச் செல்வதொரு பரிசு வேண்டிற்
சுற்றிநின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டிற்

சொல்லுகேன் கேள்நெஞ்சே துஞ்சா வண்ணம்
உற்றவரும் உறுதுணையும் நீயே யென்றும்

உன்னையல்லால் ஒருதெய்வம் உள்கே னென்றும்
புற்றரவக் கச்சார்த்த புனிதா வென்றும்

பொழிலாரூ ராவென்றே போற்றா நில்லே.

6.31.7

317

மதிதருவன் நெஞ்சமே உஞ்சு போக

வழியாவ திதுகண்டாய் வானோர்க் கெல்லாம்
அதிபதியே ஆரமுதே ஆதி யென்றும்

அம்மானே ஆரூரெம் மையா வென்றுந்
துதிசெய்து துன்றுமலர் கொண்டு தூவிச்

சூழும் வலஞ்செய்து தொண்டு பாடிக்
கதிர்மதிசேர் சென்னியனே கால காலா

கற்பகமே யென்றென்றே கதறா நில்லே.

6.31.8

318

பாசத்தைப் பற்றறுக்க லாகு நெஞ்சே

பரஞ்சோதி பண்டரங்கா பாவ நாசா
தேசத் தொளிவிளக்கே தேவ தேவே

திருவாரூர்த் திருமூலத் தானா வென்றும்
நேசத்தை நீபெருக்கி நேர்நின் றுள்கி

 

நித்தலுஞ் சென்றடிமேல் வீழ்ந்து நின்று
ஏசற்று நின்றிமையோ ரேறே வென்றும்

எம்பெருமா னென்றென்றே ஏத்தா நில்லே.

6.31.9

319

புலன்களைந்தால் ஆட்டுண்டு போது போக்கிப்

புறம்புறமே திரியாதே போது நெஞ்சே
சலங்கொள்சடை முடியுடைய தலைவா வென்றுந்

தக்கன்செய் பெருவேள்வி தகர்த்தா யென்றும்
இலங்கையர்கோன் சிரநெரித்த இறைவா வென்றும்

எழிலாரூ ரிடங்கொண்ட எந்தா யென்றும்
நலங்கொளடி என்றலைமேல் வைத்தா யென்றும்

நாடோ றும் நவின்றேத்தாய் நன்மை யாமே.

6.31.10

திருச்சிற்றம்பலம்