திருவாரூர் - திருத்தாண்டகம்

bookmark

திருச்சிற்றம்பலம்

290

திருமணியைத் தித்திக்குந் தேனைப் பாலைத்

தீங்கரும்பின் இன்சுவையைத் தெளிந்த தேறற்
குருமணியைக் குழல்மொந்தை தாளம் வீணை

கொக்கரையின் சச்சரியின் பாணி யானைப்
பருமணியைப் பவளத்தைப் பசும்பொன் முத்தைப்

பருப்பதத்தி லருங்கலத்தைப் பாவந் தீர்க்கும்
அருமணியை ஆரூரி லம்மான் றன்னை

அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.

6.29.1

291

பொன்னேபோற் றிருமேனி உடையான் றன்னைப்

பொங்குவெண் ணூலானைப் புனிதன் றன்னை
மின்னானை மின்னிடையாள் பாகன் றன்னை

வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தான் றன்னைத்
தன்னானைத் தன்னொப்பா ரில்லா தானைத்

தத்துவனை உத்தமனைத் தழல்போல் மேனி
அன்னானை ஆரூரி லம்மான் றன்னை

அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.

6.29.2

292

ஏற்றானை ஏழுலகு மானான் றன்னை

ஏழ்கடலு மேழ்மலையு மானான் றன்னைக்
கூற்றானைக் கூற்ற முதைத்தான் றன்னைக்

கொடுமழுவாள் கொண்டதோர் கையான் றன்னைக்
காற்றானைத் தீயானை நீரு மாகிக்

கடிகமழும் புன்சடைமேற் கங்கை வெள்ள
ஆற்றானை ஆரூரி லம்மான் றன்னை

அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.

6.29.3

293

முந்திய வல்வினைகள் தீர்ப்பான் றன்னை

மூவாத மேனிமுக் கண்ணி னானைச்
சந்திரனும் வெங்கதிரு மாயி னானைச்

சங்கரனைச் சங்கக் குழையான் றன்னை
மந்திரமும் மறைப்பொருளு மானான் றன்னை

மறுமையு மிம்மையு மானான் றன்னை
அந்திரனை ஆரூரி லம்மான் றன்னை

அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.

6.29.4

294

பிறநெறியாய்ப் பீடாகிப் பிஞ்ஞ கனுமாய்ப்

பித்தனாய்ப் பத்தர் மனத்தி னுள்ளே
உறநெறியாய் ஓமமாய் ஈமக் காட்டில்

ஓரிபல விடநட்ட மாடி னானைத்
துறநெறியாய்த் தூபமாய்த் தோற்ற மாகி

நாற்றமாய் நன்மலர்மே லுறையா நின்ற
அறநெறியை ஆரூரி லம்மான் றன்னை

அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.

6.29.5

295

பழகிய வல்வினைகள் பாற்று வானைப்

பசுபதியைப் பாவகனைப் பாவந் தீர்க்குங்
குழகனைக் கோளரவொன் றாட்டு வானைக்

கொடுகொட்டி கொண்டதோர் கையான் றன்னை
விழவனை வீரட்ட மேவி னானை

விண்ணவர்க ளேத்தி விரும்பு வானை
அழகனை ஆரூரி லம்மான் றன்னை

அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.

6.29.6

296

சூளா மணிசேர் முடியான் றன்னைச்

சுண்ணவெண் ணீறணிந்த சோதி யானைக்
கோள்வா யரவ மசைத்தான் றன்னைக்

கொல்புலித்தோ லாடைக் குழகன் றன்னை
நாள்வாயும் பத்தர் மனத்து ளானை

நம்பனை நக்கனை முக்க ணானை
ஆள்வானை ஆரூரி லம்மான் றன்னை

அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.

6.29.7

297

முத்தினை மணிதன்னை மாணிக் கத்தை

மூவாத கற்பகத்தின் கொழுந்து தன்னைக்
கொத்தினை வயிரத்தைக் கொல்லே றூர்ந்து

கோளரவொன் றாட்டுங் குழகன் றன்னைப்
பத்தனைப் பத்தர் மனத்து ளானைப்

பரிதிபோற் றிருமேனி உடையான் றன்னை
அத்தனை ஆரூரி லம்மான் றன்னை

அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.

6.29.8

298

பையா டரவங்கை யேந்தி னானைப்

பரிதிபோற் றிருமேனிப் பால்நீற் றானை
நெய்யாடு திருமேனி நிமலன் றன்னை

நெற்றிமேல் மற்றொருகண் நிறைவித் தானைச்
செய்யானைச் செழும்பவளத் திரளொப் பானைச்

செஞ்சடைமேல் வெண்டிங்கள் சேர்த்தி னானை
ஐயாறு மேயானை ஆரூ ரானை

அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.

6.29.9

299

சீரார் முடிபத் துடையான் றன்னைத்

தேசழியத் திருவிரலாற் சிதைய நூக்கிப்
பேரார் பெருமை கொடுத்தான் றன்னைப்

பெண்ணிரண்டு மாணுமாய் நின்றான் றன்னைப்
போரார் புரங்கள் புரள நூறும்

புண்ணியனை வெண்ணீ றணிந்தான் றன்னை
ஆரானை ஆரூரி லம்மான் றன்னை

அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.

6.29.10

திருச்சிற்றம்பலம்