திருப்புன்கூர் - திருநீடூர் - திருத்தாண்டகம்

bookmark

திருச்சிற்றம்பலம்

107

பிறவாதே தோன்றிய பெம்மான் றன்னைப்

பேணாதார் அவர்தம்மைப் பேணா தானைத்
துறவாதே கட்டறுத்த சோதி யானைத்

தூநெறிக்குந் தூநெறியாய் நின்றான் றன்னைத்
திறமாய எத்திசையுந் தானே யாகித்

திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நிறமா மொளியானை நீடூ ரானை

நீதனே னென்னேநான் நினையா வாறே.

6.11.1

108

பின்றானும் முன்றானு மானான் றன்னைப்

பித்தர்க்குப் பித்தனாய் நின்றான் றன்னை
நன்றாங் கறிந்தவர்க்குந் தானே யாகி

நல்வினையுந் தீவினையு மானான் றன்னைச்
சென்றோங்கி விண்ணளவுந் தீயா னானைத்

திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நின்றாய நீடூர் நிலாவி னானை

நீதனே னென்னேநான் நினையா வாறே.

6.11.2

109

இல்லானை எவ்விடத்தும் உள்ளான் றன்னை

இனியநினை யாதார்க் கின்னா தானை
வல்லானை வல்லடைந்தார்க் கருளும் வண்ணம்

மாட்டாதார்க் கெத்திறத்தும் மாட்டா தானைச்
செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைத்

திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நெல்லால் விளைகழனி நீடூ ரானை

நீதனே னென்னேநான் நினையா வாறே.

6.11.3

110

கலைஞானங் கல்லாமே கற்பித் தானைக்

கடுநரகஞ் சாராமே காப்பான் றன்னைப்
பலவாய வேடங்கள் தானே யாகிப்

பணிவார்கட் கங்கங்கே பற்றா னானைச்
சிலையாற் புரமெரித்த தீயா டியைத்

திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நிலையார் மணிமாட நீடூ ரானை

நீதனே னென்னேநான் நினையா வாறே.

6.11.4

111

நோக்காதே எவ்வளவும் நோக்கி னானை

நுணுகாதே யாதொன்றும் நுணுகி னானை
ஆக்காதே யாதொன்று மாக்கி னானை

அணுகாதா ரவர்தம்மை அணுகா தானைத்
தேக்காதே தெண்கடல்நஞ் சுண்டான் றன்னைத்

திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நீக்காத பேரொளிசேர் நீடு ரானை

நீதனே னென்னேநான் நினையா வாறே.

6.11.5

112

பூணலாப் பூணானைப் பூசாச் சாந்த

முடையானை முடைநாறும் புன்க லத்தில்
ஊணலா வூணானை யொருவர் காணா

உத்தமனை யொளிதிகழும் மேனி யானைச்
சேணுலாஞ் செழும்பவளக் குன்றொப் பானைத்

திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நீணுலா மலர்க்கழனி நீடூ ரானை

நீதனே னென்னேநான் நினையா வாறே.

6.11.6

113

உரையார் பொருளுக் குலப்பி லானை

ஒழியாமே எவ்வுயிரு மானான் றன்னைப்
புரையாய்க் கனமாயாழ்ந் தாழா தானைப்

புதியனவு மாய்மிகவும் பழையான் றன்னைத்
திரையார் புனல்சேர் மகுடத் தானைத்

திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நிரையார் மணிமாட நீடூ ரானை

நீதனே னென்னேநான் நினையா வாறே.

6.11.7

114

கூரரவத் தணையானுங் குளிர்தண் பொய்கை

மலரவனுங் கூடிச்சென் றறிய மாட்டார்
ஆரொருவ ரவர்தன்மை யறிவார் தேவர்

அறிவோமென் பார்க்கெல்லா மறிய லாகாச்
சீரரவக் கழலானை நிழலார் சோலைத்

திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நீரரவத் தண்கழனி நீடூ ரானை

நீதனே னென்னேநான் நினையா வாறே.

6.11.8

115

கையெலாம் நெய்பாயக் கழுத்தே கிட்டக்

கால்நிமிர்த்து நின்றுண்ணுங் கையர் சொன்ன
பொய்யெலாம் மெய்யென்று கருதிப் புக்குப்

புள்ளுவரா லகப்படா துய்யப் போந்தேன்
செய்யெலாஞ் செழுங்கமலப் பழன வேலித்

திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நெய்தல்வாய்ப் புனற்படப்பை நீடூ ரானை

நீதனே னென்னேநான் நினையா வாறே.

6.11.9

116

இகழுமா றெங்ஙனே ஏழை நெஞ்சே

இகழாது பரந்தொன்றாய் நின்றான் றன்னை
நகழமால் வரைக்கீழிட் டரக்கர் கோனை

நலனழித்து நன்கருளிச் செய்தான் றன்னைத்
திகழுமா மதகரியி னுரிபோர்த் தானைத்

திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நிகழுமா வல்லானை நீடூ ரானை

நீதனே னென்னேநான் நினையா வாறே.

6.11.10

இத்தலங்கள் சோழநாட்டிலுள்ளன. திருப்புன்கூரில்,
சுவாமிபெயர் - சிவலோகநாதர்,
தேவியார் - சொக்கநாயகியம்மை.
திருநீடூரில்,

சுவாமிபெயர் - சோமநாதேசுவரர்,

திருச்சிற்றம்பலம்