திருவான்மியூர் - திருக்குறுந்தொகை

bookmark

திருச்சிற்றம்பலம்

811

விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர்
அண்ட நாயகன் றன்னடி சூழ்மின்கள்
பண்டு நீர்செய்த பாவம் பறைந்திடும்
வண்டு சேர்பொழில் வான்மியூ ரீசனே.

5.82.1

812

பொருளுஞ் சுற்றமும் பொய்ம்மையும் விட்டுநீர்
மருளும் மாந்தரை மாற்றி மயக்கறுத்
தருளு மாவல்ல ஆதியா யென்றலும்
மருள றுத்திடும் வான்மியூ ரீசனே.

5.82.2

813

மந்த மாகிய சிந்தை மயக்கறுத்
தந்த மில்குணத் தானை யடைந்துநின்
றெந்தை யீசனென் றேத்திட வல்லிரேல்
வந்து நின்றிடும் வான்மியூ ரீசனே.

5.82.3

814

உள்ள முள்கலந் தேத்தவல் லார்க்கலாற்
கள்ள முள்ள வழிக்கசி வானலன்
வெள்ள முமர வும்விர வுஞ்சடை
வள்ள லாகிய வான்மியூ ரீசனே.

5.82.4

815

படங்கொள் பாம்பரைப் பான்மதி சூடியை
வடங்கொள் மென்முலை மாதொரு கூறனைத்
தொடர்ந்து நின்று தொழுதெழு வார்வினை
மடங்க நின்றிடும் வான்மியூ ரீசனே.

5.82.5

816

நெஞ்சி லைவர் நினைக்க நினைக்குறார்
பஞ்சின் மெல்லடி யாளுமை பங்கவென்
றஞ்சி நாண்மலர் தூவி யழுதிரேல்
வஞ்சந் தீர்த்திடும் வான்மியூ ரீசனே.

5.82.6

817

நுணங்கு நூலயன் மாலு மறிகிலாக்
குணங்கள் தாம்பர விக்குறைந் துக்கவர்
சுணங்கு பூண்முலைத் தூமொழி யாரவர்
வணங்க நின்றிடும் வான்மியூ ரீசனே.

5.82.7

818

ஆதி யும்மர னாயயன் மாலுமாய்ப்
பாதி பெண்ணுரு வாய பரமனென்
றோதி யுள்குழைந் தேத்தவல் லாரவர்
வாதை தீர்த்திடும் வான்மியூ ரீசனே.

5.82.8

819

ஓட்டை மாடத்தி லொன்பது வாசலுங்
காட்டில் வேவதன் முன்னங் கழலடி
நாட்டி நாண்மலர் தூவி வலஞ்செயில்
வாட்டந் தீர்த்திடும் வான்மியூ ரீசனே.

5.82.9

820

பார மாக மலையெடுத் தான்றனைச்
சீர மாகத் திருவிர லூன்றினான்
ஆர்வ மாக அழைத்தவ னேத்தலும்
வார மாயினன் வான்மியூ ரீசனே.

5.82.10

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மருந்தீசுவரர், தேவியார் - சொக்கநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்