திருப்புள்ளிருக்குவேளூர் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
787
வெள்ளெ ருக்கர வம்விர வுஞ்சடைப்
புள்ளி ருக்குவே ளூரரன் பொற்கழல்
உள்ளி ருக்கு முணர்ச்சியில் லாதவர்
நள்ளி ருப்பர் நரகக் குழியிலே.
5.79.1
788
மாற்ற மொன்றறி யீர்மனை வாழ்க்கைபோய்க்
கூற்றம் வந்துமைக் கொள்வதன் முன்னமே
போற்ற வல்லிரேற் புள்ளிருக் குவேளூர்
சீற்ற மாயின தேய்ந்தறுங் காண்மினே.
5.79.2
789
அரும றையனை ஆணொடு பெண்ணனைக்
கருவி டம்மிக வுண்டவெங் கண்டனைப்
புரிவெண் ணூலனைப் புள்ளிருக் குவேளூர்
உருகி நைபவர் உள்ளங் குளிருமே.
5.79.3
790
தன்னு ருவை யொருவர்க் கறிவொணா
மின்னு ருவனை மேனிவெண் ணீற்றனைப்
பொன்னு ருவனைப் புள்ளிருக் குவேளூர்
என்ன வல்லவர்க் கில்லை யிடர்களே.
5.79.4
791
செங்கண் மால்பிர மற்கு மறிவொணா
அங்கி யின்னுரு வாகி அழல்வதோர்
பொங்க ரவனைப் புள்ளிருக் குவேளூர்
மங்கை பாகனை வாழ்த்த வருமின்பே.
5.79.5
792
குற்ற மில்லியைக் கோலச் சிலையினாற்
செற்ற வர்புரஞ் செந்தழ லாக்கியைப்
புற்ற ரவனைப் புள்ளிருக் குவேளூர்
பற்ற வல்லவர் பாவம் பறையுமே.
5.79.6
793
கையி னோடுகால் கட்டி யுமரெலாம்
ஐயன் வீடினன் என்பதன் முன்னம்நீர்
பொய்யி லாவரன் புள்ளிருக் குவேளூர்
மையு லாவிய கண்டனை வாழ்த்துமே.
5.79.7
794
உள்ளம் உள்கி உகந்து சிவனென்று
மெள்ள வுள்க வினைகெடும் மெய்ம்மையே
புள்ளி னார்பணி புள்ளிருக் குவேளூர்
வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே.
5.79.8
இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
5.79.9
795
அரக்க னார்தலை பத்தும் அழிதர
நெருக்கி மாமலர்ப் பாதம் நிறுவிய
பொருப்ப னாருறை புள்ளிருக் குவேளூர்
விருப்பி னாற்றொழு வார்வினை வீடுமே.
5.79.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வைத்தியநாதர், தேவியார் - தையல்நாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
