திருமாளிகைத்தேவர் அருளிய திருவிசைப்பா

bookmark

திருவிசைப்பா, திருப்பல்லாண்டு

திருவிசைப்பா

1. கோயில்

பண்: பஞ்சமம்

திருச்சிற்றம்பலம்

ஒளிவளர் விளக்கே உவப்பிலா ஒன்றே !
  உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே !
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே !
  சித்தத்துள் தித்திக்கும் தேனே !
அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே !
  அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
  தொண்டனேன் விளம்புமா விளம்பே.

1

இடர்கெடுத்(து) என்னை ஆண்டுகொண்(டு) என்னுள்
  இருட்பிழம்பு அறஎறிந்(து) எழுந்த
சுடர்மணி விளக்கின் உள்ளொளி விளங்கும்
  தூயநற் சோதியுள் சோதீ !
அடல்விடைப் பாகா ! அம்பலக் கூத்தா !
  அயனொடு மாலறி யாமைப்
படரொளிப் பரப்பிப் பரந்துநின் றாயைத்
  தொண்டனேன் பணியுமா பணியே.

2

தற்பரம் பொருளே ! சசிகண்ட ! சிகண்டா !
  சாமகண்டா ! அண்ட வாணா !
நற்பெரும் பொருளாய் உரைகலந்து உன்னை
  என்னுடை நாவினால் நவில்வான்
அற்பன்என் உள்ளத்து அளவிலா உன்னைத்
  தந்தபொன் அம்பலத்து ஆடி !
கற்பமாய் உலகாய் அல்லைஆ னாயைத்
  தொண்டனேன் கருதுமா கருதே.

3

பெருமையிற் சிறுமை பெண்ணொடுஆ ணாய்என்
  பிறப்புஇறப்பு அறுத்தபே ரொளியே !
கருமையின் வெளியே கயற்கணாள் இமவான்
  மகள்உமை யவள்களை கண்ணே !
அருமையின் மறைநான் கோலமிட் டரற்றும்
  அப்பனே அம்பலத்து அமுதே
ஒருமையிற் பலபுக்கு உருவிநின் றாயைத்
  தொண்டனேன் உரைக்குமாறு உரையே.

4

கோலமே மேலை வானவர் கோவே !
  குணங்குறி இறந்ததோர் குணமே !
காலமே கங்கை நாயகா எங்கள்
  காலகாலா! காம நாசா !
ஆலமே அமுதுண்டு அம்பலம் செம்பொற்
  கோயில்கொண்டு ஆடவல் லானே !
ஞாலமே தமியேன் நற்றவத் தாயைத்
  தொண்டனேன் நணுகுமா நணுகே.

5

நீறணி பவளக் குன்றமே ! நின்ற
  நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே !
வேறணி புவன போகமே யோக
  வெள்ளமே மேருவில் வீரா !
ஆறணி சடையெம் அற்புதக் கூத்தா
  அம்பொன்செய் அம்பலத் தரசே !
ஏறணி கொடியெம் ஈசனே, உன்னைத்
  தொண்டனேன் இசையுமாறு இசையே.

6

தனதன்நல் தோழா சங்கரா ! சூல
  பாணியே! தாணுவே சிவனே !
கனகநல் தூணே! கற்பகக் கொழுந்தே
  கண்கள்மூன் றுடையதோர் கரும்பே !
அனகனே குமர விநாயக சனக
  அம்பலத்து அமரசே கரனே !
நுனகழல் இணையென் நெஞ்சினுள் இனிதாத்
  தொண்டனேன் நுகருமா நுகரே.

7

திறம்பிய பிறவிச் சிலதெய்வ நெறிக்கே
  திகைக்கின்றேன் தனைத்திகை யாமே
நிறம்பொன்னும் மின்னும் நிறைந்தசே வடிக்கீழ்
  நிகழ்வித்த நிகரிலா மணியே !
அறம்பல திறங்கண்டு அருந்தவர்க்கு அரசாய்
  ஆலின்கீழ் இருந்தஅம் பலவா !
புறஞ்சமண் புத்தர் பொய்கள்கண் டாயைத்
  தொண்டனேன் புணருமா புணரே.

8

தக்கன்நல் தலையும் எச்சன்வன் தலையும்
  தாமரை நான்முகன் தலையும்
ஒக்கவிண்(டு) உருள ஒண்திருப் புருவம்
  நெறித்தரு ளியவுருத் திரனே !
அக்கணி புலித்தோல் ஆடைமேல் ஆட
  ஆடப்பொன் னம்பலத்து ஆடும்
சொக்கனே எவர்க்கும் தொடர்வரி யாயைத்
  தொண்டனேன் தொடருமா தொடரே.

9

மடங்கலாய்க் கனகன் மார்புகீண் டானுக்கு
  அருள்புரி வள்ளலே ! மருளார்
இடங்கொள்முப் புரம்வெந்து அவியவை திகத்தேர்
  ஏறிய ஏறுசே வகனே !
அடங்கவல் அரக்கன் அருள்திரு வரைக்கீழ்
  அடர்த்தபொன் னம்பலத் தரசே !
விடங்கொள்கண் டத்துஎம் விடங்கனே ! உன்னைத்
  தொண்டனேன் விரும்புமா விரும்பே.

10

மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டாது
  அயன்திரு மாலொடு மயங்கி
முறைமுறை முறையிட்(டு) ஓர்வரி யாயை
  மூர்க்கனேன் மொழிந்தபுன் மொழிகள்
அறைகழல் அரன்சீர் அறிவிலா வெறுமைச்
  சிறுமையில் பொறுக்கும்அம் பலத்துள்
நிறைதரு கருணா நிலயமே ! உன்னைத்
  தொண்டனேன் நினையுமா நினையே.

11

திருச்சிற்றம்பலம்

சிற்சபை: சுவாமி: ஆனந்தநடராஜ மூர்த்தி ; அம்பிகை: சிவகாமசுந்தரி

மூலஸ்தானம்: ஸ்ரீமூலநாதர்; அம்பிகை: உமாபார்வதி