பத்தாம் அதிகாரம்

bookmark

10. மடல் திறம்

பேரின்பக் கிளவி
மடல்துறை ஒன்பதும் சிவத்தினுட் மோக
முற்ற உயிரருள் பற்றி உரைத்தது.

1. ஆற்றாது உரைத்தல்

பொருளா எனைப்புகுந்(து) ஆண்டு புரந்தரன் மாலயன்பால்
இருளாய் இருக்கும் ஒளிநின்ற சிற்றம் பலமெனலாம்
சுருளார் கருங்குழல் வெண்ணகைச் செவ்வாய்த் துடியிடையீர்
அருளா(து) ஒழியின் ஒழியா(து) அழியும்என் ஆருயிரே. .. 73

கொளு
மல்லல்திரள் வரைத்தோளவன்
சொல்லற்றாது சொல்லியது.

(அருளை நம்பி உயிர் மிகவும் இரங்கியது என்பது பேரின்பப்பொருளாம்)

2. உலகின்மேல் வைத்துரைத்தல்

காய்சின வேலன்ன மின்னியல் கண்ணின் வலைகலந்து
வீசின போதுள்ள மீனிழந் தார்வியன் தென்புலியூர்
ஈசன சாந்தும் எருக்கும் அணிந்தோர் கிழிபிடித்துப்
பாய்ச்சின மாவென ஏறுவர் சீறூர்ப் பனைமடலே. .. 74

(இன்பம் பெறார்க்கு உடல் வம்பென உரைத்தது என்பது பேரின்பப்பொருள்)

3. தன் துணிபு உரைத்தல்

விண்ணை மடங்க விரிநீர் பரந்துவெற் புக்கரப்ப
மண்ணை மடங்க வரும்ஒரு காலத்து மன்னிநிற்கும்
அண்ணல் மடங்கல் அதள்அம் பலவன் அருளிலர்போல்
பெண்ணை மடன்மிசை யான்வரப் பண்ணிற்றோர் பெண்கொடியே. .. 75

கொளு
மான வேலவன் மடல்மிசை
யானும் ஏறுவன் என்ன உரைத்தது.

(சிவம் பெறாவிடில் உய்யேன் என்று அருளுடன் செப்பல் என்பது பேரின்பப்பொருள்)

4. மடலேறும் வகையுரைத்தல்

கழிகின்ற என்னையும் நின்றநின் கார்மயில் தன்னையும் யான்
கிழியொன்ற நாடி எழுதிக்கைக் கொண்டென் பிறவிகெட்டின்(று)
அழிகின்ற(து) ஆக்கிய தாள்அம் பலவன் கயிலையந்தேன்
பொழிகின்ற சாரல்நும் சீறூர்த் தெருவிடைப் போதுவனே. .. 76

கொளு
அடல்வேலன் அழிவுற்று
மடலேறும் வகையுரைத்தது.

(இவன் சிவனடிமை என்றெவரும் செப்ப இழிபாய் எங்கும் திரிவேன் என்றது என்பதாம்)

5. அருளால் அரிதென விலக்கல்

நடனாம் வணங்கும்தொல் லோன்எல்லை நான்முகன் மாலறியாக்
கடனாம் உருவத்(து) அரன்தில்லை மல்லற் கண் ணார்ந்த பெண்ணை
உடனாம் பெடையோடொண் சேவலும் முட்டையும் கட்டழித்து
மடனாம் புனைதரின் யார்கண்ண தோமன்ன இன்னருளே. ... 77

கொளு
அடல்வேல் அண்ணல் அருளுடை மையின்
மடல் ஏற்றுனக்(கு) அரிதென்றது.

(அருளே உயிரை அழுத்தி நிந்தை வருமோ பக்குவ வகையால் என்றது என்பதாம்)

6. மொழிநடை எழுதல் அரிதென விலக்கல்

அடிச்சந்தம் மால்கண் டிலாதன காட்டிவந்(து) ஆண்டுகொண்டென்
முடிச்சந்த மாமலர் ஆக்குமுன் னோன்புலி யூர்புரையும்
கடிச்சந்த யாழ்கற்ற மென்மொழிக் கன்னி அனநடைக்குப்
படிச்சந்தம் ஆக்கும் படம்உள வோநும் பரிசகத்தே. .. 78

கொளு
அவயவம் அரிதின் அண்ணல் தீட்டினும்
இவையிவை தீட்டல் இயலா(து) என்றது.

(அருள் சிவத்து அருமை அறியப்படாதெனல் என்பது பேரின்பப்பொருள்)

7. அவயவம் எழுதல் அரிதென விலக்கல்

யாழும் எழுதி எழில்முத்(து) எழுதி இருளின்மென்பூச்
சூழும் எழுதியர் தொண்டையும் தீட்டியென் தொல்பிறவி
ஏழும் எழுதா வகைசிதைத் தோன்புலி யூரிளமாம்
போழும் எழுதிற்றொர் கொம்பருண் டேற்கொண்டு போதுகவே. .. 79

கொளு
அவயவம் ஆனவை இவைஇவை என்றது.

(சிவனது கருணையும் செயலும் ஒருவரால் அறியப்படாதுஇ.:.து அரிதே என்றது என்பதாம்)

8. உடம்படாது விலக்கல்

ஊர்வாய் ஒழிவாய் உயர்பெண்ணைத் திண்மடல் நின்குறிப்புச்
சீர்வாய் சிலம்ப திருத்த இருந்திலம் ஈசர் தில்லைக்
கார்வாய் குழலிக்குன்ஆதர(வு) ஒதிக்கற் பித்துக்கண்டால்
ஆர்வாய் தரின்அறி வார்பின்னைச் செய்க அறிந்தனவே. .. 80

கொளு
அடுபடை அண்ணல் அழிதுயர் ஒழிகென
மடநடைத் தோழி மடல்வி லக்கியது.

(சிவத்திடை யாமே சேர்த்தும் என்று வன்மை ஒழியும் வகையை உணர்த்தியது)

9. உடம்பட்டு விலக்கல்

பைந்நாண் அரவன் படுகடல் வாய்ப்படு நஞ்சமுதாம்
மைந்நாண் மணிகண்டன் மன்னும் புலியூர் மணந்தபொன்இம்
மொய்ந்நாண் முதுதிரை வாயான் அழுந்தினும் என்னின்முன்னும்
இந்நாள் இதுமது வார்குழ லாட்(கு)என்கண் இன்னருளே. ... 81

கொளு
அரவரு நுண்ணிடை குரவரு கூந்தல் என்
உள்ளக் கருத்து விள்ளாள் என்றது.

(என் வழிச் சிவமே இருத்தலால் உன்றன் குறையும் கூறிக் கூட்டுவான் என்றது என்பதாம்)