கண்டராதித்தர் அருளிய திருவிசைப்பா

bookmark

கோயில் - மின்னார் உருவம்

பண்: பஞ்சமம் 

திருச்சிற்றம்பலம் 

195.

மின்னார் உருவம் மேல்விளங்க வெண்கொடி மாளி கைசூழப்
பொன்னார் குன்றம் ஒன்று வந்து நின்றது போலும் என்னாத்
தென்னா என்று வண்டு பாடும் தென்தில்லை அம்ப லத்துள்
என்னார் அமுதை எங்கள் கோவை என்றுகொல் எய்துவதே

1

196.

ஓவா முத்தீ அஞ்சு வேள்வி ஆறங்க நான்மறையோர்
ஆவே படுப்பார் அந்த ணாளர் ஆகுதி வேட்டுயர் வார்
மூவா யிரவர் தங்க ளோடு முன் அரங்(கு) ஏறிநின்ற
கோவே உன்றன் கூத்துக் காணக் கூடுவ தென்று கொலோ.

2

197.

முத்தீ யாளர் நான் மறையர் மூவா யிர வர்நின்னோ(டு)
ஒத்தே வாழும் தன்மை யாளர் ஓதிய நான்மறையைத்
தெத்தே யென்று வண்டு பாடும் தென்தில்லை அம்பலத்துள்
அத்தா உன்றன் ஆடல் காண அணைவதும் என்றுகொலோ

3

198.

மானைப் புரையும் மடமென் நோக்கி மாமலை யாளோடும்
ஆனைஞ் சாடும் சென்னி மேலோர் அம்புலி சூடும்அரன்
தேனைப் பாலைத் தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துக்
கோனை ஞானக் கொழுந்து தன்னைக் கூடுவது என்றுகொலோ

4

199.

களிவான் உலகில் கங்கை நங்கை காதலனே ! அருளென்(று)
ஒளிமால் முன்னே வரங்கி டக்க உன்னடியார்க்(கு) அருளும்
தெளிவார் அமுதே ! தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துள்
ஒளிவான் சுடரே ! உன்னை நாயேன் உறுவதும் என்றுகொலோ

5

200.

பாரோர் முழுதும் வந்தி றைஞ்சப் பதஞ்சலிக்(கு) ஆட்டுகந்தான்
வாரார் முலையாள் மங்கை பங்கன் மாமறையோர் வணங்கச்
சீரான் மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத்(து) ஆடுகின்ற
காரார் மிடற்றெங் கண்டனாரைக் காண்பதும் என்றுகொலோ

6

201.

இலையார் கதிர்வேல் இலங்கைவேந்தன் இருபது தோளும்இற
மலைதான் எடுத்த மற்றவற்கு வாளொடு நாள்கொடுத்தான்
சிலையால் புரமூன்(று) எய்த வில்லி செம்பொனின் அம்பலத்துக்
கலையார் மறிபொன் கையி னானைக் காண்பதும் என்றுகொலோ

7

202.

வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும் ஈழமும் கொண்டதிறல்
செங்கோற் சோழன் கோழி வேந்தன் செம்பியன் பொன்னணிந்த
அங்கோல் வளையார் பாடி யாடும் அணிதில்லை அம்பலத்துள்
எங்கோன் ஈசன் எம்மி றையை என்றுகொல் எய்துவதே.

8

203.

நெடுயா னோடு நான் முகனும் வானவரும் நெருங்கி
முடியான் முடிகள் மோதி உக்க முழுமணி யின்திரளை
அடியார் அலகி னால்தி ரட்டும் அணிதில்லை அம்பலத்துக்
கடியார் கொன்றை மாலை யானைக் காண்பதும் என்றுகொலோ

9

204.

சீரான் மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத் தாடிதன்னைக்
காரார் சோலைக் கோழி வேந்தன் தஞ்சையர் கோன்கலந்த
ஆரா இன்சொற் கண்டரா தித்தன் அருந்தமிழ் மாலை வல்லார்
பேரா வுலகிற் பெருமை யோடும் பேரின்பம் எய்துவரே.

10

திருச்சிற்றம்பலம்