திருவாரூர்

bookmark

பண் - செந்துருத்தி

திருச்சிற்றம்பலம்

964

மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்

பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று

முகத்தால் மிகவாடி
ஆளா யிருக்கும் அடியார் தங்கள்

அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர்

வாழ்ந்து போதீரே.

7.95.1

965

விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன்

விரும்பி ஆட்பட்டேன்
குற்ற மொன்றுஞ் செய்த தில்லை

*கொத்தை ஆக்கினீர்
எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர்

நீரே பழிப்பட்டீர்
மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால்

வாழ்ந்து போதீரே.
*விச்சை - வித்தையென்பதுபோல் கொச்சை - கொத்தை எனநின்றது.

7.95.2

966

அன்றில் முட்டா தடையுஞ் சோலை

ஆரூர் அகத்தீரே
கன்று முட்டி உண்ணச் சுரந்த

காலி யவைபோல
என்றும் முட்டாப் பாடும் அடியார்

தங்கண் காணாது
குன்றில் முட்டிக் குழியில் விழுந்தால்

வாழ்ந்து போதீரே.

7.95.3

967

துருத்தி உறைவீர் பழனம் பதியாச்

சோற்றுத் துறையாள்வீர்
இருக்கை திருவா ரூரே உடையீர்

மனமே எனவேண்டா
அருத்தி யுடைய அடியார் தங்கள்

அல்லல் சொன்னக்கால்
வருத்தி வைத்து மறுமை பணித்தால்

வாழ்ந்து போதீரே.

7.95.4

968

செந்தண் பவளந் திகழுஞ் சோலை

இதுவோ திருவாரூர்
எந்தம் அடிகேள் இதுவே ஆமா

றுமக்காட் பட்டோ ர்க்குச்
சந்தம் பலவும் பாடும் அடியார்

தங்கண் காணாது
வந்தெம் பெருமான் முறையோ வென்றால்

வாழ்ந்து போதீரே.

7.95.5

969

தினைத்தா ளன்ன செங்கால் நாரை

சேருந் திருவாரூர்ப்
புனைத்தார் கொன்றைப் பொன்போல் மாலைப்

புரிபுன் சடையீரே
தனத்தா லின்றித் தாந்தாம் மெலிந்து

தங்கண் காணாது
மனத்தால் வாடி அடியார் இருந்தால்

வாழ்ந்து போதீரே.

7.95.6

970

ஆயம் பேடை அடையுஞ் சோலை

ஆரூர் அகத்தீரே
ஏயெம் பெருமான் இதுவே ஆமா

றுமக்காட் பட்டோ ர்க்கு
மாயங் காட்டிப் பிறவி காட்டி

மறவா மனங்காட்டிக்
காயங் காட்டிக் கண்ணீர் கொண்டால்

வாழ்ந்து போதீரே.

7.95.7

971

கழியாய்க் கடலாய்க் கலனாய் நிலனாய்க்

கலந்த சொல்லாகி
இழியாக் குலத்திற் பிறந்தோம் உம்மை

இகழா தேத்துவோம்
பழிதா னாவ தறியீர் அடிகேள்

பாடும் பத்தரோம்
வழிதான் காணா தலமந் திருந்தால்

வாழ்ந்து போதீரே.

7.95.8

972

பேயோ டேனும் பிரிவொன் றின்னா

தென்பர் பிறரெல்லாங்
காய்தான் வேண்டிற் கனிதா னன்றோ

கருதிக் கொண்டக்கால்
நாய்தான் போல நடுவே திரிந்தும்

உமக்காட் பட்டோ ர்க்கு
வாய்தான் திறவீர் திருவா ரூரீர்

வாழ்ந்து போதீரே.

7.95.9

973

செருந்தி செம்பொன் மலருஞ் சோலை

இதுவோ திருவாரூர்
பொருந்தித் திருமூ லத்தா னம்மே

இடமாக் கொண்டீரே
இருந்தும் நின்றுங் கிடந்தும் உம்மை

இகழா தேத்துவோம்
வருந்தி வந்தும் உமக்கொன் றுரைத்தால்

வாழ்ந்து போதிரே.

7.95.10

974

காரூர் கண்டத் தெண்டோ ள் முக்கண்

கலைகள் பலவாகி
ஆரூர்த் திருமூ லத்தா னத்தே

அடிப்பே ராரூரன்
பாரூர் அறிய என்கண் கொண்டீர்

நீரே பழிப்பட்டீர்
வாரூர் முலையாள் பாகங் கொண்டீர்

வாழ்ந்து போதீரே.

7.95.11

காஞ்சீபுரத்தில் ஆலந்தானெனும் பதிகமோதி ஒருகண்பெற்று,
இந்தத்தலத்தில் இந்தப்பதிகமோதி மற்றொரு கண்ணும் பெற்றது.

திருச்சிற்றம்பலம்