திருவானைக்கா

bookmark

பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

761

மறைகள் ஆயின நான்கும்

மற்றுள பொருள்களு மெல்லாந்
துறையுந் தோத்திரத் திறையுந்

தொன்மையும் நன்மையு மாய
அறையும் பூம்புனல் ஆனைக்

காவுடை ஆதியை நாளும்
இறைவன் என்றடி சேர்வார்

எம்மையும் ஆளுடை யாரே.

7.75.1

762

வங்கம் மேவிய வேலை

நஞ்செழ வஞ்சர்கள் கூடித்
தங்கள் மேல்அட ராமை

உண்ணென உண்டிருள் கண்டன்
அங்கம் ஓதிய ஆனைக்

காவுடை ஆதியை நாளும்
எங்கள் ஈசனென் பார்கள்

எம்மையும் ஆளுடை யாரே.

7.75.2

763

நீல வண்டறை கொன்றை

நேரிழை மங்கையோர் திங்கள்
சால வாளர வங்கள்

தங்கிய செஞ்சடை எந்தை
ஆல நீழலுள் ஆனைக்

காவுடை ஆதியை நாளும்
ஏலு மாறுவல் லார்கள்

எம்மையும் ஆளுடை யாரே.

7.75.3

764

தந்தை தாயுல குக்கோர்

தத்துவன் மெய்த்தவத் தோர்க்குப்
பந்த மாயின பெருமான்

பரிசுடை யவர்திரு வடிகள்
அந்தண் பூம்புனல் ஆனைக்

காவுடை ஆதியை நாளும்
எந்தை என்றடி சேர்வார்

எம்மையும் ஆளுடை யாரே.

7.75.4

765

கணைசெந் தீயர வந்நாண்

கல்வளை யுஞ்சிலை யாகத்
துணைசெய் மும்மதில் மூன்றுஞ்

சுட்டவ னேயுல குய்ய
அணையும் பூம்புனல் ஆனைக்

காவுடை ஆதியை நாளும்
இணைகொள் சேவடி சேர்வார்

எம்மையும் ஆளுடை யாரே.

7.75.5

766

விண்ணின் மாமதி சூடி

விலையிலி கலன்அணி விமலன்
பண்ணின் நேர்மொழி மங்கை

பங்கினன் பசுவுகந் தேறி
அண்ண லாகிய ஆனைக்

காவுடை ஆதியை நாளும்
எண்ணு மாறுவல் லார்கள்

எம்மையும் ஆளுடை யாரே.

7.75.6

767

தார மாகிய பொன்னித்

தண்டுறை ஆடி விழுத்தும்
நீரில் நின்றடி போற்றி

நின்மலா கொள்ளென ஆங்கே
ஆரங் கொண்டவெம் மானைக்

காவுடை ஆதியை நாளும்
ஈரம் உள்ளவர் நாளும்

எம்மையும் ஆளுடை யாரே.

7.75.7

768

உரவம் உள்ளதோர் உழையின்

உரிபுலி அதளுடை யானை
விரைகொள் கொன்றையி னானை

விரிசடை மேற்பிறை யானை
அரவம் வீக்கிய ஆனைக்

காவுடை ஆதியை நாளும்
இரவும் எல்லியும் பகலும்

ஏத்துவார் எமையுடை யாரே.

7.75.8

769

வலங்கொள் வாரவர் தங்கள்

வல்வினை தீர்க்கும் மருந்து
கலங்கக் காலனைக் காலாற்

காமனைக் கண்சிவப் பானை
அலங்கல் நீர்பொரும் ஆனைக்

காவுடை ஆதியை நாளும்
இலங்கு சேவடி சேர்வார்

எம்மையும் ஆளுடை யாரே.

7.75.9

770

ஆழி யாற்கருள் ஆனைக்

காவுடை ஆதிபொன் னடியின்
நீழ லேசர ணாக

நின்றருள் கூர நினைந்து
வாழ வல்லவன் றொண்டன்

வண்டமிழ் மாலைவல் லார்போய்
ஏழு மாபிறப் பற்று

எம்மையும் ஆளுடை யாரே.

7.75.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சம்புகேசுவரர்,
தேவியார் - அகிலாண்டநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்