திருவாவடுதுறை

bookmark

பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்

709

கங்கை வார்சடை யாய்கண நாதா

கால காலனே காமனுக் கனலே
பொங்கு மாகடல் விடமிடற் றானே

பூத நாதனே புண்ணியா புனிதா
செங்கண் மால்விடை யாய்தெளி தேனே

தீர்த்த னேதிரு வாவடு துறையுள்
அங்க ணாஎனை அஞ்சலென் றருளாய்

ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.

7.70.1

710

மண்ணின் மேல்மயங் கிக்கிடப் பேனை

வலிய வந்தெனை ஆண்டுகொண் டானே
கண்ணி லேன்உடம் பில்லடு நோயாற்

கருத்த ழிந்துனக் கேபொறை ஆனேன்
தெண்ணி லாஎறிக் குஞ்சடை யானே

தேவ னேதிரு வாவடு துறையுள்
அண்ண லேயெனை அஞ்சலென் றருளாய்

ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.

7.70.2

711

ஒப்பி லாமுலை யாளொரு பாகா

உத்த மாமத்த மார்தரு சடையாய்
முப்பு ரங்களைத் தீவளைத் தங்கே

மூவ ருக்கருள் செய்யவல் லானே
செப்ப ஆல்நிழற் கீழிருந் தருளுஞ்

செல்வ னேதிரு வாவடு துறையுள்
அப்ப னேயெனை அஞ்சலென் றருளாய்

ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.

7.70.3

712

கொதியி னால்வரு காளிதன் கோபங்

குறைய ஆடிய கூத்துடை யானே
மதியி லேன்உடம் பில்லடு நோயால்

மயங்கி னேன்மணி யேமண வாளா
விதியி னாலிமை யோர்தொழு தேத்தும்

விகிர்த னேதிரு வாவடு துறையுள்
அதிப னேயெனை அஞ்சலென் றருளாய்

ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.

7.70.4

713

வந்த வாளரக் கன்வலி தொலைத்து

வாழும் நாள்கொடுத் தாய்வழி முதலே
வெந்த வெண்பொடி பூசவல் லானே

வேட னாய்விச யற்கருள் புரிந்த
இந்து சேகர னேஇமை யோர்சீர்

ஈச னேதிரு வாவடு துறையுள்
அந்த ணாஎனை அஞ்சலென் றருளாய்

ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.

7.70.5

714

குறைவி லாநிறை வேகுணக் குன்றே

கூத்த னேகுழைக் காதுடை யானே
உறவி லேன்உனை அன்றிமற் றடியேன்

ஒருபி ழைபொறுத் தால்இழி வுண்டே
சிறைவண் டார்பொழில் சூழ்திரு வாரூர்ச்

செம்பொ னேதிரு வாவடு துறையுள்
அறவ னேயெனை அஞ்சலென் றருளாய்

ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.

7.70.6

715

வெய்ய மாகரி ஈருரி யானே

வேங்கை ஆடையி னாய்விதி முதலே
மெய்ய னேஅடல் ஆழியன் றரிதான்

வேண்ட நீகொடுத் தருள்புரி விகிர்தா
செய்ய மேனிய னேதிகழ் ஒளியே

செங்க ணாதிரு வாவடு துறையுள்
ஐய னேயெனை அஞ்சலென் றருளாய்

ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.

7.70.7

716

கோதி லாவமு தேஅருள் பெருகு

கோல மேஇமை யோர்தொழு கோவே
பாதி மாதொரு கூறுடை யானே

பசுப தீபர மாபர மேட்டீ
தீதி லாமலை யேதிரு வருள்சேர்

சேவ காதிரு வாவடு துறையுள்
ஆதி யேயெனை அஞ்சலென் றருளாய்

ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.

7.70.8

717

வான நாடனே வழித்துணை மருந்தே

மாசி லாமணி யேமறைப் பொருளே
ஏன மாவெயி றாமையும் எலும்பும்

ஈடு தாங்கிய மார்புடை யானே
தேனெய் பால்தயிர் ஆட்டுகந் தானே

தேவ னேதிரு வாவடு துறையுள்
ஆனை யேயெனை அஞ்சலென் றருளாய்

ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.

7.70.9

718

வெண்ட லைப்பிறை கொன்றையும் அரவும்

வேரி மத்தமும் விரவிமுன் முடித்த
இண்டை மாமலர்ச் செஞ்சடை யானை

ஈச னைத்திரு வாவடு துறையுள்
அண்ட வாணனைச் சிங்கடி யப்பன்

அணுக்க வன்றொண்டன் ஆர்வத்தால் உரைத்த
தண்ட மிழ்மலர் பத்தும்வல் லார்கள்

சாத லும்பிறப் பும்மறுப் பாரே.

7.70.10

திருச்சிற்றம்பலம்