திருஎதிர்கொள்பாடி

bookmark

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

062

மத்த யானை ஏறி மன்னர்

சூழவரு வீர்காள்
செத்த போதில் ஆரும் இல்லை

சிந்தையுள் வைம்மின்கள்
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா

வம்மின் மனத்தீரே
அத்தர் கோயில் எதிர்கொள் பாடி

என்ப தடைவோமே.

7.7.01

063

தோற்றம் உண்டேல் மரணம் உண்டு

துயரம் மனைவாழ்க்கை
மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு

நெஞ்ச மனத்தீரே
நீற்றர் ஏற்றர் நீல கண்டர்

நிறைபுனல் நீள்சடைமேல்
ஏற்றர் கோயில் எதிர்கொள் பாடி

என்ப தடைவோமே.

7.7.02

064

செடிகொ ளாக்கை சென்று சென்று

தேய்ந்தொல் லைவீழாமுன்
வடிகொள் கண்ணார் வஞ்ச னையுள்

பட்டு மயங்காதே
கொடிகொள் ஏற்றர் வெள்ளை நீற்றர்

கோவண ஆடையுடை
அடிகள் கோயில் எதிர்கொள் பாடி

என்ப தடைவோமே.

7.7.03

065

வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர்

வஞ்ச மனத்தீரே
யாவ ராலும் இகழப் பட்டிங்

கல்ல லில்வீழாதே
மூவ ராயும் இருவ ராயும்

முதல்வன் அவனேயாம்
தேவர் கோயில் எதிர்கொள் பாடி

என்ப தடைவோமே.

7.7.04

066

அரித்து நம்மேல் ஐவர் வந்திங்

காறலைப் பான்பொருட்டாற்
சிரித்த பல்வாய் வெண்ட லைபோய்

ஊர்ப்பு றஞ்சேராமுன்
வரிக்கொ டுத்திவ் வாள ரக்கர்

வஞ்ச மதில்மூன்றும்
எரித்த வில்லி எதிர்கொள் பாடி

என்ப தடைவோமே.

7.7.05

067

பொய்யர் கண்டீர் வாழ்க்கை யாளர்

பொத்தடைப் பான்பொருட்டால்
மையல் கொண்டீர் எம்மோ டாடி

நீரும் மனத்தீரே
நைய வேண்டா இம்மை யேத்த

அம்மை நமக்கருளும்
ஐயர் கோயில் எதிர்கொள் பாடி

என்ப தடைவோமே.

7.7.06

068

கூசம் நீக்கிக் குற்றம் நீக்கிச்

செற்ற மனம்நீக்கி
வாசம் மல்கு குழலி னார்கள்

வஞ்ச மனைவாழ்க்கை
ஆசை நீக்கி அன்பு சேர்த்தி

என்பணிந் தேறேறும்
ஈசர் கோயில் எதிர்கொள் பாடி

என்ப தடைவோமே.

7.7.07

069

இன்பம் உண்டேல் துன்பம் உண்டு

ஏழை மனைவாழ்க்கை
முன்பு சொன்ன மோழை மையான்

முட்டை மனத்தீரே
அன்ப ரல்லால் அணிகொள் கொன்றை

அடிக ளடிசேரார்
என்பர் கோயில் எதிர்கொள் பாடி

என்ப தடைவோமே.

7.7.08

070

தந்தை யாரும் தவ்வை யாரும்

எட்டனைச் சார்வாகார்
வந்து நம்மோ டுள்ள ளாவி

வான நெறிகாட்டுஞ்
சிந்தை யீரே நெஞ்சி னீரே

திகழ்மதி யஞ்சூடும்
எந்தை கோயில் எதிர்கொள் பாடி

என்ப தடைவோமே.

7.7.09

071

குருதி சோர ஆனையின் றோல்

கொண்ட குழற்சடையன்
மருது கீறி ஊடு போன

மாலய னும்மறியாச்
சுருதி யார்க்குஞ் சொல்ல வொண்ணாச்

சோதியெம் ஆதியான்
கருது கோயில் எதிர்கொள் பாடி

என்ப தடைவோமே.

7.7.10

072

முத்து நீற்றுப் பவள மேனிச்

செஞ்சடை யான்உறையும்
பத்தர் பந்தத் தெதிர்கொள் பாடிப்

பரமனை யேபணியச்
சித்தம் வைத்த தொண்டர் தொண்டன்

சடைய னவன்சிறுவன்
பத்தன் ஊரன் பாடல் வல்லார்

பாதம் பணிவாரே.

7.7.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அயிராவதேசுவரர்,
தேவியார் - வாசமலர்க்குழன்மாதம்மை.

திருச்சிற்றம்பலம்