திருநள்ளாறு

bookmark

பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்

688

செம்பொன் மேனிவெண் ணீறணி வானைக்

கரிய கண்டனை மால்அயன் காணாச்
சம்பு வைத்தழல் அங்கையி னானைச்

சாம வேதனைத் தன்னொப்பி லானைக்
கும்ப மாகரி யின்னுரி யானைக்

கோவின் மேல்வருங் கோவினை எங்கள்
நம்ப னைநள் ளாறனை அமுதை

நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.

7.68.1

689

விரைசெய் மாமலர்க் கொன்றையி னானை

வேத கீதனை மிகச்சிறந் துருகிப்
பரசு வார்வினைப் பற்றறுப் பானைப்

பாலொ டானஞ்சும் ஆடவல் லானைக்
குரைக டல்வரை ஏழுல குடைய

கோனை ஞானக் கொழுந்தினைத் தொல்லை
நரைவிடை யுடையநல் லாறனை அமுதை

நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.

7.68.2

690

பூவில் வாசத்தைப் பொன்னினை மணியைப்

புவியைக் காற்றினைப் புனல்அனல் வெளியைச்
சேவின் மேல்வருஞ் செல்வனைச் சிவனைத்

தேவ தேவனைத் தித்திக்குந் தேனைக்
காவி யங்கண்ணிப் பங்கனைக் கங்கைச்

சடைய னைக்கா மரத்திசை பாட
நாவில் ஊறும்நள் ளாறனை அமுதை

நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.

7.68.3

691

தஞ்சம் என்றுதன் தாளது வடைந்த

பாலன் மேல்வந்த காலனை உருள
நெஞ்சில் ஓர்உதை கொண்ட பிரானை

நினைப்ப வர்மனம் நீங்ககில் லானை
விஞ்சை வானவர் தானவர் கூடிக்

கடைந்த வேலையுள் மிக்கெழுந் தெரியும்
நஞ்சம் உண்டநள் ளாறனை அமுதை

நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.

7.68.4

692

மங்கை பங்கனை மாசிலா மணியை

வான நாடனை ஏனமோ டன்னம்
எங்கு நாடியுங் காண்பரி யானை

ஏழை யேற்கெளி வந்தபி ரானை
அங்கம் நான்மறை யால்நிறை கின்ற

அந்த ணாளர் அடியது போற்றும்
நங்கள் கோனைநள் ளாறனை அமுதை

நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.

7.68.5

693

கற்ப கத்தினைக் கனகமால் வரையைக்

காம கோபனைக் கண்ணுத லானைச்
சொற்ப தப்பொருள் இருளறுத் தருளுந்

தூய சோதியை வெண்ணெய் நல்லூரில்
அற்பு தப்பழ ஆவணங் காட்டி

அடிய னாஎன்னை ஆளது கொண்ட
நற்ப தத்தைநள் ளாறனை அமுதை

நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.

7.68.6

694

மறவ னைஅன்று பன்றிப்பின் சென்ற

மாய னைநால்வர்க் காலின்கீழ் உரைத்த
அறவ னைஅம ரர்க்கரி யானை

அமரர் சேனைக்கு நாயக னான
குறவர் மங்கைதன் கேள்வனைப் பெற்ற

கோனை நான்செய்த குற்றங்கள் பொறுக்கும்
நறைவி ரியும்நள் ளாறனை அமுதை

நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.

7.68.7

695

மாதி னுக்குடம் பிடங்கொடுத் தானை

மணியி னைப்பணி வார்வினை கெடுக்கும்
வேத னைவேத வேள்வியர் வணங்கும்

விமல னையடி யேற்கெளி வந்த
தூதனைத் தன்னைத் தோழமை அருளித்

தொண்ட னேன்செய்த துரிசுகள் பொறுக்கும்
நாத னைநள் ளாறனை அமுதை

நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.

7.68.8

696

இலங்கை வேந்தன் எழில்திகழ் கயிலை

எடுப்ப ஆங்கிம வான்மகள் அஞ்சத்
துலங்கு நீண்முடி ஒருபதுந் தோள்கள்

இருப துந்நெரித் தின்னிசை கேட்டு
வலங்கை வாளொடு நாமமுங் கொடுத்த

வள்ள லைப்பிள்ளை மாமதிச் சடைமேல்
நலங்கொள் சோதிநள் ளாறனை அமுதை

நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.

7.68.9

697

செறிந்த சோலைகள் சூழ்ந்தநள் ளாற்றெஞ்

சிவனை நாவலூர்ச் சிங்கடி தந்தை
மறந்து நான்மற்று நினைப்பதே தென்று

வனப்ப கையப்பன் ஊரன்வன் றொண்டன்
சிறந்த மாலைகள் அஞ்சினோ டஞ்சுஞ்

சிந்தையுள் ளுருகிச் செப்ப வல்லார்க்
கிறந்து போக்கில்லை வரவில்லை யாகி

இன்பவெள் ளத்துள் இருப்பர்க ளினிதே.

7.68.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தெர்ப்பாரணியயீசுவரர்,
தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.

திருச்சிற்றம்பலம்