திருவாரூர்

bookmark

பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்

518

பத்திமையும் அடிமையையுங்

கைவிடுவான் பாவியேன்
பொத்தினநோ யதுவிதனைப்

பொருளறிந்தேன் போய்த்தொழுவேன்
முத்தினைமா மணிதன்னை

வயிரத்தை மூர்க்கனேன்
எத்தனைநாட் பிரிந்திருக்கேன்

என்னாரூர் இறைவனையே.

7.51.1

519

ஐவணமாம் பகழியுடை

அடல்மதனன் பொடியாகச்
செவ்வணமாந் திருநயனம்

விழிசெய்த சிவமூர்த்தி
மையணவு கண்டத்து

வளர்சடையெம் மாரமுதை
எவ்வணம்நான் பிரிந்திருக்கேன்

என்னாரூர் இறைவனையே.

7.51.2

520

சங்கலக்குந் தடங்கடல்வாய்

விடஞ்சுடவந் தமரர்தொழ
அங்கலக்கண் தீர்த்துவிடம்

உண்டுகந்த அம்மானை
இங்கலக்கும் உடற்பிறந்த

அறிவிலியேன் செறிவின்றி
எங்குலக்கப் பிரிந்திருக்கேன்

என்னாரூர் இறைவனையே.

7.51.3

521

இங்ஙனம்வந் திடர்ப்பிறவிப்

பிறந்தயர்வேன் அயராமே
அங்ஙனம்வந் தெனையாண்ட

அருமருந்தென் ஆரமுதை
வெங்கனல்மா மேனியனை

மான்மருவுங் கையானை
எங்ஙனம்நான் பிரிந்திருக்கேன்

என்னாரூர் இறைவனையே.

7.51.4

522

செப்பரிய அயனொடுமால்

சிந்தித்துந் தெரிவரிய
அப்பெரிய திருவினையே

அறியாதே அருவினையேன்
ஒப்பரிய குணத்தானை

இணையிலியை அணைவின்றி
எப்பரிசு பிரிந்திருக்கேன்

என்னாரூர் இறைவனையே.

7.51.5

523

வன்னாகம் நாண்வரைவில்

அங்கிகணை அரிபகழி
தன்னாகம் உறவாங்கிப்

புரமெரித்த தன்மையனை
முன்னாக நினையாத

மூர்க்கனேன் ஆக்கைசுமந்
தென்னாகப் பிரிந்திருக்கேன்

என்னாரூர் இறைவனையே.

7.51.6

524

வன்சயமாய் அடியான்மேல்

வருங்கூற்றின் உரங்கிழிய
முன்சயமார் பாதத்தால்

முனிந்துகந்த மூர்த்திதனை
மின்செயும்வார் சடையானை

விடையானை அடைவின்றி
என்செயநான் பிரிந்திருக்கேன்

என்னாரூர் இறைவனையே.

7.51.7

525

முன்னெறிவா னவர்கூடித்

தொழுதேத்தும் முழுமுதலை
அந்நெறியை அமரர்தொழும்

நாயகனை அடியார்கள்
செந்நெறியைத் தேவர்குலக்
கொழுந்தைமறந் திங்ஙனம்நான்
என்னறிவான் பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே.

7.51.8

526

கற்றுளவான் கனியாய

கண்ணுதலைக் கருத்தார
உற்றுளனாம் ஒருவனைமுன்

இருவர்நினைந் தினிதேத்தப்
பெற்றுளனாம் பெருமையனைப்

பெரிதடியேன் கையகன்றிட்
டெற்றுளனாய்ப் பிரிந்திருக்கேன்

என்னாரூர் இறைவனையே.

7.51.9

527

ஏழிசையாய் இசைப்பயனாய்

இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யுந்

துரிசுகளுக் குடனாகி
மாழையொண்கண் பரவையைத்தந்

தாண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன்

என்னாரூர் இறைவனையே.

7.51.10

528

வங்கமலி கடல்நஞ்சை

வானவர்கள் தாமுய்ய
நுங்கிஅமு தவர்க்கருளி

நொய்யேனைப் பொருட்படுத்துச்
சங்கிலியோ டெனைப்புணர்த்த

தத்துவனைச் சழக்கனேன்
எங்குலக்கப் பிரிந்திருக்கேன்

என்னாரூர் இறைவனையே.

7.51.11

529

பேரூரும் மதகரியின்

உரியானைப் பெரியவர்தஞ்
சீரூருந் திருவாரூர்ச்

சிவனடியே திறம்விரும்பி
ஆரூரன் அடித்தொண்டன்

அடியன்சொல் அகலிடத்தில்
ஊரூரன் இவைவல்லார்

உலகவர்க்கு மேலாரே.

7.51.12

இது திருவொற்றியூரிற் சங்கிலிநாச்சியாருடன்
இருக்கும்போது வீதிவிடங்கப்பெருமானுடைய
திருவோலக்கதரிசன ஞாபகம்வர ஓதியருளிய பதிகம்.

திருச்சிற்றம்பலம்