திருக்கானாட்டுமுள்ளூர்

bookmark

பண் - கொல்லிக்கௌவாணம்

திருச்சிற்றம்பலம்

404

வள்வாய மதிமிளிரும் வளர்சடையி னானை

மறையவனை வாய்மொழியை வானவர்தங் கோனைப்
புள்வாயைக் கீண்டுலகம் விழுங்கியுமிழ்ந் தானைப்

பொன்னிறத்தின் முப்புரிநூல் நான்முகத்தி னானை
முள்வாய மடல்தழுவி முடத்தாழை ஈன்று

மொட்டலர்ந்து விரைநாறும் முருகுவிரி பொழில்சூழ்
கள்வாய கருங்குவளை கண்வளருங் கழனிக்

கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.

7.40.1

405

ஒருமேக முகிலாகி ஒத்துலகந் தானாய்

ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளுந் தானாய்ப்
பொருமேவு கடலாகிப் பூதங்கள் ஐந்தாய்ப்

புனைந்தவனைப் புண்ணியனைப் புரிசடையி னானைத்
திருமேவு செல்வத்தார் தீமூன்றும் வளர்த்த

திருத்தக்க அந்தணர்கள் ஓதுநக ரெங்குங்
கருமேதி செந்தாம ரைமேயுங் கழனிக்

கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.

7.40.2

406

இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தி னானை

இறையவனை மறையவனை எண்குணத்தி னானைச்
சுரும்புயர்ந்த கொன்றையொடு தூமதியஞ் சூடுஞ்

சடையானை விடையானைச் சோதியெனுஞ் சுடரை
அரும்புயர்ந்த அரவிந்தத் தணிமலர்க ளேறி

அன்னங்கள் விளையாடும் அகன்றுறையின் அருகே
கரும்புயர்ந்து பெருஞ்செந்நெல் நெருங்கிவிளை கழனிக்

கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.

7.40.3

407

பூளைபுனை கொன்றையொடு புரிசடையி னானைப்

புனலாகி அனலாகிப் பூதங்கள் ஐந்தாய்
நாளைஇன்று நெருநலாய் ஆகாய மாகி

ஞாயிறாய் மதியமாய் நின்றவெம் பரனைப்
பாளைபடு பைங்கமுகின் சூழலிளந் தெங்கின்

படுமதஞ்செய் கொழுந்தேறல் வாய்மடுத்துப் பருகிக்
காளைவண்டு பாடமயில் ஆலும்வளர் சோலைக்

கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.

7.40.4

408

செருக்குவாய்ப் பைங்கண்வெள் ளரவரையி னானைத்

தேவர்கள்சூ ளாமணியைச் செங்கண்விடை யானை
முருக்குவாய் மலரொக்குந் திருமேனி யானை

முன்னிலையாய் முழுதுலக மாயபெரு மானை
இருக்குவாய் அந்தணர்கள் எழுபிறப்பு ளெங்கும்

வேள்வியிருந் திருநிதியம் வழங்குநக ரெங்கும்
கருக்குவாய்ப் பெண்ணையொடு தெங்குமலி சோலைக்

கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.

7.40.5

409

விடையரவக் கொடியேந்தும் விண்ணவர்தங் கோனை

வெள்ளத்து மாலவனும் வேதமுத லானும்
அடியிணையுந் திருமுடியுங் காணவரி தாய

சங்கரனைத் தத்துவனைத் தையல்மட வார்கள்
உடையவிழக் குழலவிழக் கோதைகுடைந் தாடக்

குங்குமங்கள் உந்திவரு கொள்ளிடத்தின் கரைமேற்
கடைகள்விடு வார்குவளை களைவாருங் கழனிக்

கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.

7.40.6

410

அருமணியை முத்தினை ஆனஞ்சும் ஆடும்

அமரர்கள்தம் பெருமானை அருமறையின் பொருளைத்
திருமணியைத் தீங்கரும்பின் ஊறலிருந் தேனைத்

தெரிவரிய மாமணியைத் திகழ்தருசெம் பொன்னைக்
குருமணிகள் கொழித்திழிந்து சுழித்திழியுந் திரைவாய்க்

கோல்வளையார் குடைந்தாடுங் கொள்ளிடத்தின் கரைமேற்
கருமணிகள் போல்நீலம் மலர்கின்ற கழனிக்

கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.

7.40.7

411

இழைதழுவு வெண்ணூலும் மேவுதிரு மார்பின்

ஈசன்றன் எண்டோ ள்கள் வீசியெரி யாடக்
குழைதழுவு திருக்காதிற் கோளரவ மசைத்துக்

கோவணங்கொள் குழகனைக் குளிர்சடையி னானைத்
தழைதழுவு தண்ணிறத்த செந்நெலதன் அயலே

தடந்தரள மென்கரும்பின் தாழ்கிடங்கி னருகே
கழைதழுவித் தேன்றொடுக்குங் கழனிசூழ் பழனக்

கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.

7.40.8

412

குனிவினிய கதிர்மதியஞ் சூடுசடை யானைக்

குண்டலஞ்சேர் காதவனை வண்டினங்கள் பாடப்
பனியுதிருஞ் சடையானைப் பால்வெண்ணீற் றானைப்

பலவுருவுந் தன்னுருவே ஆயபெரு மானைத்
துனிவினிய தூயமொழித் தொண்டைவாய் நல்லார்

தூநீலங் கண்வளருஞ் சூழ்கிடங்கி னருகே
கனிவினிய கதலிவனந் தழுவுபொழிற் சோலைக்

கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.

7.40.9

413

தேவியம்பொன் மலைக்கோமன் றன்பாவை யாகத்

தனதுருவம் ஒருபாகஞ் சேர்த்துவித்த பெருமான்
மேவியவெந் நரகத்தில் அழுந்தாமை நமக்கு

மெய்ந்நெறியைத் தான்காட்டும் வேதமுத லானைத்
தூவிவாய் நாரையொடு குருகுபாய்ந் தார்ப்பத்

துறைக்கெண்டை மிளிர்ந்துகயல் துள்ளிவிளை யாடக்
காவிவாய் வண்டுபல பண்செய்யுங் கழனிக்

கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.

7.40.10

414

திரையினார் கடல்சூழ்ந்த தென்னிலங்கைக் கோனைச்

செற்றவனைச் செஞ்சடைமேல் வெண்மதியி னானைக்
கரையினார் புனல்தழுவு கொள்ளிடத்தின் கரைமேற்

கானாட்டு முள்ளூரிற் கண்டுகழல் தொழுது
உரையினார் மதயானை நாவலா ரூரன்

உரிமையால் உரைசெய்த ஒண்டமிழ்கள் வல்லார்
வரையினார் வகைஞாலம் ஆண்டவர்க்குந் தாம்போய்

வானவர்க்குந் தலைவராய் நிற்பரவர் தாமே.

7.40.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பதஞ்சலியீசுவரர், தேவியார் - கானார்குழலம்மை.

திருச்சிற்றம்பலம்