திருவேள்விக்குடி

bookmark

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

178

மூப்பதும் இல்லை பிறப்பதும்

இல்லை இறப்பதில்லை
சேர்ப்பது காட்டகத் தூரினு

மாகச்சிந் திக்கினல்லாற்
காப்பது வேள்விக் குடிதண்

டுருத்தியெங் கோன்அரைமேல்
ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல்

நாமிவர்க் காட்படோ மே.

7.18.1

179

கட்டக்காட் டில்நட மாடுவரி

யாவர்க்குங் காட்சியொண்ணார்
சுட்டவெண் ணீறணிந் தாடுவர்

பாடுவர் தூயநெய்யால்
வட்டக்குண் டத்தில் எரிவளர்த்

தோம்பி மறைபயில்வார்
அட்டக்கொண் டுண்ப தறிந்தோமேல்

நாமிவர்க் காட்படோ மே.

7.18.2

180

பேருமோர் ஆயிரம் பேருடை

யார்பெண்ணோ டாணுமல்லர்
ஊரும தொற்றியூர் மற்றையூர்

பெற்றவா நாமறியோம்
காருங் கருங்கடல் நஞ்சமு

துண்டுகண் டங்கறுத்தார்க்
காரம்பாம் பாவ தறிந்தோமேல்

நாமிவர்க் காட்படோ மே.

7.18.3

181

ஏனக்கொம் பும்மிள ஆமையும்

பூண்டங்கோர் ஏறுமேறிக்
கானக்காட் டிற்றொண்டர் கண்டன

சொல்லியுங் காமுறவே
மானைத்தோல் ஒன்றை உடுத்துப்

புலித்தோல் பியற்குமிட்டு
யானைத்தோல் போர்ப்ப தறிந்தோமேல்

நாமிவர்க் காட்படோ மே.

7.18.4

182

ஊட்டிக்கொண் டுண்பதோர் ஊணிலர்

ஊரிடு பிச்சையல்லாற்
பூட்டிக்கொண் டேற்றினை ஏறுவர்

ஏறியோர் பூதந்தம்பாற்
பாட்டிக்கொண் டுண்பவர் பாழிதொ

றும்பல பாம்புபற்றி
ஆட்டிக்கொண் டுண்ப தறிந்தோமேல்

நாமிவர்க் காட்படோ மே.

7.18.5

183

குறவனார் தம்மகள் தம்மக

னார்மண வாட்டிகொல்லை
மறவனா ராயங்கோர் பன்றிப்பின்

போவது மாயங்கண்டீர்
இறைவனார் ஆதியார் சோதிய

ராயங்கோர் சோர்வுபடா
அறவனார் ஆவத றிந்தோமேல்

நாமிவர்க் காட்படோ மே.

7.18.6

184

பித்தரை ஒத்தொரு பெற்றியர்

நற்றவை என்னைப்பெற்ற
முத்தவை தம்மனை தந்தைக்குந்

தவ்வைக்குந் தம்பிரானார்
செத்தவர் தந்தலை யிற்பலி

கொள்வதே செல்வமாகில்
அத்தவம் ஆவத றிந்தோமேல்

நாமிவர்க் காட்படோ மே.

7.18.7

185

உம்பரான் ஊழியான் ஆழியான்

ஓங்கி மலருறைவான்
தம்பரம் அல்லவர் சிந்திப்ப

வர்தடு மாற்றறுப்பார்
எம்பரம் அல்லவர் என்னெஞ்சத்

துள்ளும் இருப்பதாகில்
அம்பரம் ஆவத றிந்தோமேல்

நாமிவர்க் காட்படோ மே.

7.18.8

186

இந்திர னுக்கும் இராவண

னுக்கும் அருள்புரிந்தார்
மந்திரம் ஓதுவர் மாமறை

பாடுவர் மான்மறியர்
சிந்துரக் கண்ணனும் நான்முக

னும்முட னாய்த்தனியே
அந்தரஞ் செல்வத றிந்தோமேல்

நாமிவர்க் காட்படோ மே.

7.18.9

187

கூடலர் மன்னன் குலநாவ

லூர்க்கோன் நலத்தமிழைப்
பாடவல் லபர மன்னடி

யார்க்கடி மைவழுவார்
நாடவல் லதொண்டன் ஆரூரன்

ஆட்படு மாறுசொல்லிப்
பாடவல் லார்பர லோகத்

திருப்பது பண்டமன்றே.

7.18.10

திருச்சிற்றம்பலம்