திருநாட்டியத்தான்குடி

bookmark

பண் - தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

146

பூணாண் ஆவதோர் அரவங்கண் டஞ்சேன்

புறங்காட் டாடல்கண் டிகழேன்
பேணீ ராகிலும் பெருமையை உணர்வேன்

பிறவே னாகிலும் மறவேன்
காணீ ராகிலுங் காண்பனென் மனத்தாற்

கருதீ ராகிலுங் கருதி
நானே லும்மடி பாடுதல் ஒழியேன்

நாட்டியத் தான்குடி நம்பீ.

7.15.1

147

கச்சேர் பாம்பொன்று கட்டிநின் றிடுகாட்

டெல்லியில் ஆடலைக் கவர்வன்
துச்சேன் என்மனம் புகுந்திருக் கின்றமை

சொல்லாய் திப்பிய மூர்த்தி
வைச்சே யிடர்களைக் களைந்திட வல்ல

மணியே மாணிக்க வண்ணா
நச்சேன் ஒருவரை நானுமை யல்லால்

நாட்டியத் தான்குடி நம்பீ.

7.15.2

148

அஞ்சா தேயுமக் காட்செய வல்லேன்

யாதினுக் காசைப் படுகேன்
பஞ்சேர் மெல்லடி மாமலை மங்கை

பங்கா எம்பர மேட்டீ
மஞ்சேர் வெண்மதி செஞ்சடை வைத்த

மணியே மாணிக்க வண்ணா
நஞ்சேர் கண்டா வெண்டலை யேந்தீ

நாட்டியத் தான்குடி நம்பீ.

7.15.3

149

கல்லே னல்லேன் நின்புகழ் அடிமை

கல்லா தேபல கற்றேன்
நில்லே னல்லேன் நின்வழி நின்றார்

தம்முடை நீதியை நினைய
வல்லே னல்லேன் பொன்னடி பரவ

மாட்டேன் மறுமையை நினைய
நல்லே னல்லேன் நானுமக் கல்லால்

நாட்டியத் தான்குடி நம்பீ.

7.15.4

150

மட்டார் பூங்குழல் மலைமகள் கணவனைக்

கருதா தார்தமைக் கருதேன்
ஒட்டீ ராகிலும் ஒட்டுவன் அடியேன்

உம்மடி யடைந்தவர்க் கடிமைப்
பட்டே னாகிலும் பாடுதல் ஒழியேன்

பாடியும் நாடியும் அறிய
நட்டேன் ஆதலால் நான்மறக் கில்லேன்

நாட்டியத் தான்குடி நம்பீ.

7.15.5

151

படப்பாற் றன்மையில் நான்பட்ட தெல்லாம்

படுத்தா யென்றல்லல் பறையேன்
குடப்பாச் சிலுறை கோக்குளிர் வானே

கோனே கூற்றுதைத் தானே
மடப்பாற் றயிரொடு நெய்மகிழ்ந் தாடும்

மறையோ தீமங்கை பங்கா
நடப்பீ ராகிலும் நடப்பனும் மடிக்கே

நாட்டியத் தான்குடி நம்பீ.

7.15.6

152

ஐவாய் அரவினை மதியுடன் வைத்த

அழகா அமரர்கள் தலைவா
எய்வான் வைத்ததோர் இலக்கினை அணைதர

நினைந்தேன் உள்ளமுள் ளளவும்
உய்வான் எண்ணிவந் தும்மடி அடைந்தேன்

உகவீ ராகிலும் உகப்பன்
நைவா னன்றுமக் காட்பட்ட தடியேன்

நாட்டியத் தான்குடி நம்பீ.

7.15.7

153

கலியேன் மானுட வாழ்க்கையொன் றாகக்

கருதிடிற் கண்கணீர் பில்கும்
பலிதேர்ந் துண்பதோர் பண்புகண் டிகழேன்

பசுவே ஏறிலும் பழியேன்
வலியே யாகிலும் வணங்குதல் ஒழியேன்

மாட்டேன் மறுமையை நினையேன்
நலியேன் ஒருவரை நானுமை யல்லால்

நாட்டியத் தான்குடி நம்பீ.

7.15.8

154

குண்டா டிச்சமண் சாக்கியப் பேய்கள்

கொண்டா ராகிலுங் கொள்ளக்
கண்டா லுங்கரு தேன்எரு தேறுங்

கண்ணா நின்னல தறியேன்
தொண்டா டித்தொழு வார்தொழக் கண்டு

தொழுதேன் என்வினை போக
நண்டா டும்வயற் றண்டலை வேலி

நாட்டியத் தான்குடி நம்பீ.

7.15.9

155

கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற

கொடிறன் கோட்புலி சென்னி
நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி

நம்பியை நாளும் மறவாச்
சேடார் பூங்குழற் சிங்கடி யப்பன்

திருவா ரூரன் உரைத்த
பாடீ ராகிலும் பாடுமின் றொண்டீர்

பாடநும் பாவம்பற் றறுமே.

7.15.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கரிநாதேசுவரர், தேவியார் - மலர்மங்கையம்மை.

திருச்சிற்றம்பலம்