திருவீழிமிழலை - திருத்தாண்டகம்

bookmark

திருச்சிற்றம்பலம்

499

போரானை ஈருரிவைப் போர்வை யானைப்

புலியதளே யுடையாடை போற்றி னானைப்
பாரானை மதியானைப் பகலா னானைப்

பல்லுயிராய் நெடுவெளியாய்ப் பரந்து நின்ற
நீரானைக் காற்றானைத் தீயா னானை

நினையாதார் புரமெரிய நினைந்த தெய்வத்
தேரானைத் திருவீழி மிழலை யானைச்

சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

6.050.1

500

சவந்தாங்கு மயானத்துச் சாம்ப லென்பு

தலையோடு மயிர்க்கயிறு தரித்தான் தன்னைப்
பவந்தாங்கு பாசுபத வேடத் தானைப்

பண்டமரர் கொண்டுகந்த வேள்வி யெல்லாங்
கவர்ந்தானைக் கச்சியே கம்பன் தன்னைக்

கழலடைந்தான் மேற்கறுத்த காலன் வீழச்
சிவந்தானைத் திருவீழி மிழலை யானைச்

சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

6.050.2

501

அன்றாலின் கீழிருந்தங் கறஞ்சொன் னானை

அகத்தியனை யுகப்பானை அயன்மால் தேட
நின்றானைக் கிடந்தகடல் நஞ்சுண் டானை

நேரிழையைக் கலந்திருந்தே புலன்க ளைந்தும்
வென்றானை மீயச்சூர் மேவி னானை

மெல்லியலாள் தவத்தினிறை யளக்க லுற்றுச்
சென்றானைத் திருவீழி மிழலை யானைச்

சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

6.050.3

502

தூயானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத்

தோன்றிய எவ்வுயிர்க்குந் துணையாய் நின்ற
தாயானைச் சக்கரமாற் கீந்தான் தன்னைச்

சங்கரனைச் சந்தோக சாமம் ஓதும்
வாயானை மந்திரிப்பார் மனத்து ளானை

வஞ்சனையால் அஞ்செழுத்தும் வழுத்து வார்க்குச்
சேயானைத் திருவீழி மிழலை யானைச்

சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

6.050.4

503

நற்றவத்தின் நல்லானைத் தீதாய் வந்த

நஞ்சமுது செய்தானை அமுத முண்ட
மற்றமரர் உலந்தாலும் உலவா தானை

வருகாலஞ் செல்காலம் வந்த காலம்
உற்றவத்தை யுணர்ந்தாரும் உணர லாகா

ஒருசுடரை இருவிசும்பி னூர்மூன் றொன்றச்
செற்றவனைத் திருவீழி மிழலை யானைச்

சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

6.050.5

504

மைவான மிடற்றானை அவ்வான் மின்போல்

வளர்சடைமேல் மதியானை மழையா யெங்கும்
பெய்வானைப் பிச்சாட லாடு வானைப்

பிலவாய பேய்க்கணங்க ளார்க்கச் சூலம்
பொய்வானைப் பொய்யிலா மெய்யன் தன்னைப்

பூதலமும் மண்டலமும் பொருந்து வாழ்க்கை
செய்வானைத் திருவீழி மிழலை யானைச்

சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

6.050.6

505

மிக்கானைக் குறைந்தடைந்தார் மேவ லானை

வெவ்வேறாய் இருமூன்று சமய மாகிப்
புக்கானை எப்பொருட்கும் பொதுவா னானைப்

பொன்னுலகத்தவர் போற்றும் பொருளுக் கெல்லாந்
தக்கானைத் தானன்றி வேறொன் றில்லாத்

தத்துவனைத் தடவரையை நடுவு செய்ததிக்
கானைத் திருவீழி மிழலை யானைச்

சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

6.050.7

506

வானவர்கோன் தோளிறுத்த மைந்தன் தன்னை

வளைகுளமும் மறைக்காடும் மன்னி னானை
ஊனவனை உயிரவனை யொருநாட் பார்த்தன்

உயர்தவத்தின் நிலையறிய லுற்றுச் சென்ற
கானவனைக் கயிலாயம் மேவி னானைக்

கங்கைசேர் சடையானைக் கலந்தார்க் கென்றுந்
தேனவனைத் திருவீழி மிழலை யானைச்

சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

6.050.8

507

பரத்தானை யிப்பக்கம் பலவா னானைப்

பசுபதியைப் பத்தர்க்கு முத்தி காட்டும்
வரத்தானை வணங்குவார் மனத்து ளானை

மாருதமால் எரிமூன்றும் வாய்அம் பீர்க்காஞ்
சரத்தானைச் சரத்தையுந்தன் தாட்கீழ் வைத்த

தபோதனனைச் சடாமகுடத் தணிந்த பைங்கட்
சிரத்தானைத் திருவீழி மிழலை யானைச்

சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

6.050.9

508

அறுத்தானை அயன்தலைகள் அஞ்சி லொன்றை

அஞ்சாதே வரையெடுத்த அரக்கன் தோள்கள்
இறுத்தானை யெழுநரம்பி னிசைகேட் டானை

இந்துவினைத் தேய்த்தானை இரவி தன்பல்
பறித்தானைப் பகீரதற்காய் வானோர் வேண்டப்

பரந்திழியும் புனற்கங்கை பனிபோ லாங்குச்
செறித்தானைத் திருவீழி மிழலை யானைச்

சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

6.050.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகர்.
தேவியார் - சுந்தரகுசாம்பிகை.

திருச்சிற்றம்பலம்