திருஆவடுதுறை - திருத்தாண்டகம்

bookmark

திருச்சிற்றம்பலம்

458

நம்பனை நால்வேதங் கரைகண் டானை

ஞானப் பெருங்கடலை நன்மை தன்னைக்
கம்பனைக் கல்லா லிருந்தான் தன்னைக்

கற்பகமா யடியார்கட் கருள்செய் வானைச்
செம்பொன்னைப் பவளத்தைத் திரளு முத்தைத்

திங்களை ஞாயிற்றைத் தீயை நீரை
அம்பொன்னை யாவடுதண் டுறையுள் மேய

அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

6.046.1

459

மின்னானை மின்னிடைச்சே ருருமி னானை

வெண்முகிலாய் எழுந்துமழை பொழிவான் தன்னைத்
தன்னானைத் தன்னொப்பா ரில்லா தானைத்

தாயாகிப் பல்லுயிர்க்கோர் தந்தை யாகி
என்னானை யெந்தை பெருமான் தன்னை

இருநிலமும் அண்டமுமாய்ச் செக்கர் வானே
அன்னானை ஆவடுதண் டுறையுள் மேய

அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

6.046.2

460

பத்தர்கள் சித்தத்தே பாவித் தானைப்

பவளக் கொழுந்தினை மாணிக் கத்தின்
தொத்தினைத் தூநெறியாய் நின்றான் தன்னைச்

சொல்லுவார் சொற்பொருளின் தோற்ற மாகி
வித்தினை முளைக்கிளையை வேரைச் சீரை

வினைவயத்தின் தன்சார்பை வெய்ய தீர்க்கும்
அத்தனை ஆவடுதண் டுறையுள் மேய

அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

6.046.3

461

பேணியநற் பிறைதவழ்செஞ் சடையி னானைப்

பித்தராம் அடியார்க்கு முத்தி காட்டும்
ஏணியை யிடர்க்கடலுட் சுழிக்கப் பட்டிங்

கிளைக்கின்றேற் கக்கரைக்கே யேற வாங்குந்
தோணியைத் தொண்டனேன் தூய சோதிச்

சுலாவெண் குழையானைச் சுடர்பொற் காசின்
ஆணியை ஆவடுதண் டுறையுள் மேய

அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

6.046.4

462

ஒருமணியை உலகுக்கோ ருறுதி தன்னை

உதயத்தி னுச்சியை உருமா னானைப்
பருமணியைப் பாலோடஞ் சாடி னானைப்

பவித்திரனைப் பசுபதியைப் பவளக் குன்றைத்
திருமணியைத் தித்திப்பைத் தேன தாகித்

தீங்கரும்பி னின்சுவையைத் திகழுஞ் சோதி
அருமணியை ஆவடுதண் டுறையுள் மேய

அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

6.046.5

463

ஏற்றானை யெண்டோ ளுடையான் தன்னை

யெல்லி நடமாட வல்லான் தன்னைக்
கூற்றானைக் கூற்ற முதைத்தான் தன்னைக்

குரைகடல்வாய் நஞ்சுண்ட கண்டன் தன்னை
நீற்றானை நீளரவொன் றார்த்தான் தன்னை

நீண்ட சடைமுடிமேல் நீரார் கங்கை
ஆற்றானை ஆவடுதண் டுறையுள் மேய

அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

6.046.6

464

கைம்மான மதகளிற்றை உரித்தான் தன்னைக்

கடல்வரைவா னாகாச மானான் தன்னைச்
செம்மானப் பவளத்தைத் திகழும் முத்தைத்

திங்களை ஞாயிற்றைத் தீயா னானை
எம்மானை என்மனமே கோயி லாக

இருந்தானை என்புருகும் அடியார் தங்கள்
அம்மானை ஆவடுதண் டுறையுள் மேய

அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

6.046.7

465

மெய்யானைப் பொய்யரொடு விரவா தானை

வெள்ளிடையைத் தண்ணிழலை வெந்தீ யேந்துங்
கையானைக் காமனுடல் வேவக் காய்ந்த

கண்ணானைக் கண்மூன் றுடையான் தன்னைப்
பையா டரவமதி யுடனே வைத்த

சடையானைப் பாய்புலித்தோ லுடையான் தன்னை
ஐயானை ஆவடுதண் டுறையுள் மேய

அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

6.046.8

466

வேண்டாமை வேண்டுவது மில்லான் தன்னை

விசயனைமுன் னசைவித்த வேடன் தன்னைத்
தூண்டாமைச் சுடர்விடுநற் சோதி தன்னைச்

சூலப் படையானைக் காலன் வாழ்நாள்
மாண்டோட வுதைசெய்த மைந்தன் தன்னை

மண்ணவரும் விண்ணவரும் வணங்கி யேத்தும்
ஆண்டானை ஆவடுதண் டுறையுள் மேய

அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

6.046.9

467

பந்தணவு மெல்விரலாள் பாகன் தன்னைப்

பாடலோ டாடல் பயின்றான் தன்னைக்
கொந்தணவு நறுங்கொன்றை மாலை யானைக்

கோலமா நீல மிடற்றான் தன்னைச்
செந்தமிழோ டாரியனைச் சீரி யானைத்

திருமார்பிற் புரிவெண்ணூல் திகழப் பூண்ட
அந்தணனை ஆவடுதண் டுறையுள் மேய

அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

6.046.10

468

தரித்தானைத் தண்கடல்நஞ் சுண்டான் தன்னைத்

தக்கன்றன் பெருவேள்வி தகர்த்தான் தன்னைப்
பிரித்தானைப் பிறைதவழ்செஞ் சடையி னானைப்

பெருவலியால் மலையெடுத்த அரக்கன் தன்னை
நெரித்தானை நேரிழையாள் பாகத் தானை

நீசனேன் உடல் சார்ந்த உறு நோயான தீர
அரித்தானை ஆவடுதண் டுறையுள் மேய

அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

6.046.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாசிலாமணியீசுவரர்.
தேவியார் - ஒப்பிலாமுலையம்மை.

திருச்சிற்றம்பலம்