திருநாகைக்காரோணம் - திருத்தாண்டகம்

bookmark

திருச்சிற்றம்பலம்

221

பாரார் பரவும் பழனத் தானைப்

பருப்பதத் தானைப் பைஞ்ஞீலி யானை
சீரார் செழும்பவளக் குன்றொப் பானைத்

திகழுந் திருமுடிமேற் றிங்கள் சூடிப்
பேரா யிரமுடைய பெம்மான் றன்னைப்

பிறர்தன்னைக் காட்சிக் கரியான் றன்னைக்
காரார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்

காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

6.22.1

222

விண்ணோர் பெருமானை வீரட் டானை

வெண்ணீறு மெய்க்கணிந்த மேனி யானைப்
பெண்ணானை ஆணானைப் பேடி யானைப்

பெரும்பெற்றத் தண்புலியூர் பேணி னானை
அண்ணா மலையானை ஆனைந் தாடும்

அணியாரூர் வீற்றிருந்த அம்மான் றன்னைக்
கண்ணார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்

காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

6.22.2

223

சிறையார் வரிவண்டு தேனே பாடுந்

திருமறைக்காட் டெந்தை சிவலோ கனை
மறையான்றன் வாய்மூருங் கீழ்வே ளூரும்

வலிவலமுந் தேவூரும் மன்னி யங்கே
உறைவானை உத்தமனை ஒற்றி யூரிற்

பற்றியாள் கின்ற பரமன் றன்னைக்
கறையார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்

காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

6.22.3

224

அன்னமாம் பொய்கைசூழ் அம்ப ரானை

ஆச்சிரா மன்னகரு மானைக் காவும்
முன்னமே கோயிலாக் கொண்டான் றன்னை

மூவுலகுந் தானாய மூர்த்தி தன்னைச்
சின்னமாம் பன்மலர்க ளன்றே சூடிச்

செஞ்சடைமேல் வெண்மதியஞ் சேர்த்தி னானைக்
கன்னியம் புன்னைசூழ் அந்தண் நாகைக்

காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

6.22.4

225

நடையுடைய நல்லெருதொன் றூர்வான் றன்னை

ஞானப் பெருங்கடலை நல்லூர் மேய
படையுடைய மழுவாளொன் றேந்தி னானைப்

பன்மையே பேசும் படிறன் றன்னை
மடையிடையே வாளை யுகளும் பொய்கை

மருகல்வாய்ச் சோதி மணிகண் டனைக்
கடையுடைய நெடுமாட மோங்கு நாகைக்

காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

6.22.5

226

புலங்கொள்பூந் தேறல்வாய்ப் புகலிக் கோனைப்

பூம்புகார்க் கற்பகத்தை புன்கூர் மேய
அலங்கலங் கழனிசூழ் அணிநீர்க் கங்கை

அவிர்சடைமேல் ஆதரித்த அம்மான் றன்னை
இலங்கு தலைமாலை பாம்பு கொண்டே

ஏகாச மிட்டியங்கும் ஈசன் றன்னைக்
கலங்கற் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்

காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

6.22.6

227

பொன்மணியம் பூங்கொன்றை மாலை யானைப்

புண்ணியனை வெண்ணீறு பூசி னானைச்
சின்மணிய மூவிலைய சூலத் தானைத்

தென்சிராப் பள்ளிச் சிவலோ கனை
மன்மணியை வான்சுடலை யூராப் பேணி

வல்லெருதொன் றேறும் மறைவல் லானைக்
கன்மணிகள் வெண்டிரைசூழ் அந்தண் நாகைக்

காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

6.22.7

228

வெண்டலையும் வெண்மழுவு மேந்தி னானை

விரிகோ வணமசைத்த வெண்ணீற் றானைப்
புண்டலைய மால்யானை யுரிபோர்த் தானைப்

புண்ணியனை வெண்ணீ றணிந்தான் றன்னை
எண்டிசையு மெரியாட வல்லான் றன்னை

ஏகம்ப மேயானை எம்மான் றன்னைக்
கண்டலங் கழனிசூழ் அந்தண் நாகைக்

காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

6.22.8

229

சொல்லார்ந்த சோற்றுத் துறையான் றன்னைத்

தொன்னரக நன்னெறியாற் றூர்ப்பான் றன்னை
வில்லானை மீயச்சூர் மேவி னானை

வேதியர்கள் நால்வர்க்கும் வேதஞ் சொல்லிப்
பொல்லாதார் தம்மரண மூன்றும் பொன்றப்

பொறியரவம் மார்பாரப் பூண்டான் றன்னைக்
கல்லாலின் கீழானைக் கழிசூழ் நாகைக்

காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

6.22.9

230

மனைதுறந்த வல்லமணர் தங்கள் பொய்யும்

மாண்புரைக்கும் மனக்குண்டர் தங்கள் பொய்யுஞ்
சினைபொதிந்த சீவரத்தர் தங்கள் பொய்யும்

மெய்யென்று கருதாதே போத நெஞ்சே
பனையுரியைத் தன்னுடலிற் போர்த்த எந்தை

அவன்பற்றே பற்றாகக் காணி னல்லாற்
கனைகடலின் றென்கழிசூழ் அந்தண் நாகைக்

காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

6.22.10

231

நெடியானும் மலரவனும் நேடி யாங்கே

நேருருவங் காணாமே சென்று நின்ற
படியானைப் பாம்புரமே காத லானைப்

பாம்பரையோ டார்த்த படிறன் றன்னைச்
செடிநாறும் வெண்டலையிற் பிச்சைக் கென்று

சென்றானை நின்றியூர் மேயான் றன்னைக்
கடிநாறு பூஞ்சோலை அந்தண் நாகைக்

காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

6.22.11

திருச்சிற்றம்பலம்