திருநள்ளாறு - திருத்தாண்டகம்

bookmark

திருச்சிற்றம்பலம்

201

ஆதிக்கண் ணான்முகத்தி லொன்று சென்று

அல்லாத சொல்லுரைக்கத் தன்கை வாளாற்
சேதித்த திருவடியைச் செல்ல நல்ல

சிவலோக நெறிவகுத்துக் காட்டு வானை
மாதிமைய மாதோர்கூ றாயி னானை

மாமலர்மே லயனோடு மாலுங் காணா
நாதியை நம்பியை நள்ளாற் றானை

நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

6.20.1

202

படையானைப் பாசுபத வேடத் தானைப்

பண்டனங்கற் பார்த்தானைப் பாவ மெல்லாம்
அடையாமைக் காப்பானை அடியார் தங்கள்

அருமருந்தை ஆவாவென் றருள்செய் வானைச்
சடையானைச் சந்திரனைத் தரித்தான் றன்னைச்

சங்கத்த முத்தனைய வெள்ளை யேற்றின்
நடையானை நம்பியை நள்ளாற் றானை

நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

6.20.2

203

படவரவ மொன்றுகொண் டரையி லார்த்த

பராபரனைப் பைஞ்ஞீலி மேவி னானை
அடலரவம் பற்றிக் கடைந்த நஞ்சை

அமுதாக உண்டானை ஆதி யானை
மடலரவம் மன்னுபூங் கொன்றை யானை

மாமணியை மாணிக்காய்க் காலன் றன்னை
நடலரவஞ் செய்தானை நள்ளாற் றானை

நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

6.20.3

204

கட்டங்க மொன்றுதங் கையி லேந்திக்

கங்கணமுங் காதில்விடு தோடு மிட்டுச்
சுட்டங்கங் கொண்டு துதையப் பூசிச்

சுந்தரனாய்ச் சூலங்கை யேந்தி னானைப்
பட்டங்க மாலை நிறையச் சூடிப்

பல்கணமுந் தாமும் பரந்த காட்டில்
நட்டங்க மாடியை நள்ளாற் றானை

நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

6.20.4

205

உலர்ந்தார்தம் அங்கங்கொண் டுலக மெல்லாம்

ஒருநொடியில் உழல்வானை உலப்பில் செல்வஞ்
சிலந்திதனக் கருள்செய்த தேவ தேவைத்

திருச்சிராப் பள்ளியெஞ் சிவலோ கனைக்
கலந்தார்தம் மனத்தென்றுங் காதலானைக்

கச்சியே கம்பனைக் கமழ்பூங் கொன்றை
நலந்தாங்கு நம்பியை நள்ளாற் றானை

நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

6.20.5

206

குலங்கெடுத்துக் கோள்நீக்க வல்லான் றன்னைக்

குலவரையன் மடப்பாவை இடப்பா லானை
மலங்கெடுத்து மாதீர்த்தம் ஆட்டிக் கொண்ட

மறையவனைப் பிறைதவழ்செஞ் சடையி னானைச்
சலங்கெடுத்துத் தயாமூல தன்ம மென்னுந்

தத்துவத்தின் வழிநின்று தாழ்ந்தோர்க் கெல்லாம்
நலங்கொடுக்கும் நம்பியை நள்ளாற் றானை

நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

6.20.6

207

பூவிரியும் மலர்க்கொன்றைச் சடையி னானைப்

புறம்பயத்தெம் பெருமானைப் புகலூ ரானை
மாவிரியக் களிறுரித்த மைந்தன் றன்னை

மறைக்காடும் வலிவலமும் மன்னி னானைத்
தேவிரியத் திகழ்தக்கன் வேள்வி யெல்லாஞ்

சிதைத்தானை உதைத்தவன்றன் சிரங்கொண் டானை
நாவிரிய மறைநவின்ற நள்ளாற் றானை

நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

6.20.7

208

சொல்லானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத்

தொல்லவுணர் புரமூன்று மெரியச் செற்ற
வில்லானை எல்லார்க்கு மேலா னானை

மெல்லியலாள் பாகனை வேதம் நான்குங்
கல்லாலின் நீழற்கீழ் அறங்கண் டானைக்

காளத்தி யானைக் கயிலை மேய
நல்லானை நம்பியை நள்ளாற் றானை

நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

6.20.8

209

குன்றாத மாமுனிவன் சாபம் நீங்கக்

குரைகழலாற் கூற்றுவனைக் குமைத்த கோனை
அன்றாக அவுணர்புர மூன்றும் வேவ

ஆரழல்வா யோட்டி யடர்வித் தானைச்
சென்றாது வேண்டிற்றொன் றீவான் றன்னைச்

சிவனேயெம் பெருமானென் றிருப்பார்க் கென்றும்
நன்றாகும் நம்பியை நள்ளாற் றானை

நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

6.20.9

210

இறவாமே வரம்பெற்றே னென்று மிக்க

இராவணனை இருபதுதோள் நெரிய வூன்றி
உறவாகி இன்னிசைகேட் டிரங்கி மீண்டே

உற்றபிணி தவிர்த்தருள வல்லான் றன்னை
மறவாதார் மனத்தென்றும் மன்னி னானை

மாமதியம் மலர்க்கொன்றை வன்னி மத்தம்
நறவார்செஞ் சடையானை நள்ளாற் றானை

நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

6.20.10

திருச்சிற்றம்பலம்