சித்தத்தொகை - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
957
சிந்திப் பார்மனத் தான்சிவன் செஞ்சுடர்
அந்தி வானிறத் தானணி யார்மதி
முந்திச் சூடிய முக்கண்ணி னானடி
வந்திப் பாரவர் வானுல காள்வரே.
5.97.1
958
அண்ட மாரிரு ளூடு கடந்தும்பர்
உண்டு போலுமோ ரொண்சுட ரச்சுடர்
கண்டிங் காரறி வாரறி வாரெலாம்
வெண்டிங் கட்கண்ணி வேதியன் என்பரே.
5.97.2
959
ஆதி யாயவ னாரு மிலாதவன்
போது சேர்புனை நீண்முடிப் புண்ணியன்
பாதி பெண்ணுரு வாகிப் பரஞ்சுடர்ச்
சோதி யுட்சோதி யாய்நின்ற சோதியே.
5.97.3
960
இட்ட திட்டதோ ரேறுகந் தேறியூர்
பட்டி துட்டங்க னாய்ப்பலி தேர்வதோர்
கட்ட வாழ்க்கைய னாகிலும் வானவர்
அட்ட மூர்த்தி யருளென் றடைவரே.
5.97.4
961
ஈறில் கூறைய னாகி எரிந்தவெண்
ணீறு பூசி நிலாமதி சூடிலும்
வீறி லாதன செய்யினும் விண்ணவர்
ஊற லாயரு ளாயென் றுரைப்பரே.
5.97.5
962
உச்சி வெண்மதி சூடிலும் ஊனறாப்
பச்சை வெண்டலை யேந்திப் பலஇலம்
பிச்சை யேபுகு மாகிலும் வானவர்
அச்சந் தீர்த்தரு ளாயென் றடைவரே.
5.97.6
963
ஊரி லாயென்றொன் றாக வுரைப்பதோர்
பேரி லாய்பிறை சூடிய பிஞ்ஞகா
காரு லாங்கண்ட னேயுன் கழலடி
சேர்வி லார்கட்குத் தீயவை தீயவே.
5.97.7
964
எந்தை யேயெம் பிரானே யெனவுள்கிச்
சிந்திப் பாரவர் தீவினை தீருமால்
வெந்த நீறுமெய் பூசிய வேதியன்
அந்த மாவளப் பாரடைந் தார்களே.
5.97.8
965
ஏன வெண்மருப் போடென்பு பூண்டெழில்
ஆனை யீருரி போர்த்தன லாடிலுந்
தான வண்ணத்த னாகிலுந் தன்னையே
வான நாடர் வணங்குவர் வைகலே.
5.97.9
966
ஐயன் அந்தணன் ஆணொடு பெண்ணுமாம்
மெய்யன் மேதகு வெண்பொடிப் பூசிய
மைகொள் கண்டத்தன் மான்மறிக் கையினான்
பைகொள் பாம்பரை யார்த்த பரமனே.
5.97.10
967
ஒருவ னாகிநின் றானிவ் வுலகெலாம்
இருவ ராகிநின் றார்கட் கறிகிலான்
அருவ ராவரை ஆர்த்தவ னார்கழல்
பரவு வாரவர் பாவம் பறையுமே.
5.97.11
968
ஓத வண்ணனும் ஒண்மலர்ச் செல்வனும்
நாத னேயரு ளாயென்று நாடொறுங்
காதல் செய்து கருதப் படுமவர்
பாத மேத்தப் பறையுநம் பாவமே.
5.97.12
969
வ தன்மை யவரவ ராக்கையான்
வெவ்வ தன்மைய னென்ப தொழிமினோ
மௌவல் நீண்மலர் மேலுறை வானொடு
பௌவ வண்ணனு மாய்ப்பணி வார்களே.
5.97.13
970
அக்கும் ஆமையும் பூண்டன லேந்திஇல்
புக்குப் பல்பலி தேரும் புராணனை
நக்கு நீர்கள் நரகம் புகேன்மினோ
தொக்க வானவ ராற்றொழு வானையே.
5.97.14
971
கங்கை தங்கிய செஞ்சடை மேலிளந்
திங்கள் சூடிய தீநிற வண்ணனார்
இங்க ணாரெழில் வானம் வணங்கவே
அங்க ணாற்கது வாலவன் தன்மையே.
5.97.15
972
நகர வெல்கொடி யானொடு நன்னெஞ்சே
நுகர நீயுனைக் கொண்டுயப் போக்குறில்
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகரில் சேவடி யேபுக லாகுமே.
5.97.16
973
சரண மாம்படி யார்பிற ரியாவரோ
கரணந் தீர்த்துயிர் கையி லிகழ்ந்தபின்
மரண மெய்திய பின்னவை நீக்குவான்
அரண மூவெயி லெய்தவ னல்லனே.
5.97.17
974
ஞமனென் பான்நர கர்க்கு நமக்கெலாஞ்
சிவனென் பான்செழு மான்மறிக் கையினான்
கவனஞ் செய்யுங் கனவிடை யூர்தியான்
தமரென் றாலுங் கெடுந்தடு மாற்றமே.
5.97.18
975
இடப மேறியும் இல்பலி யேற்பவர்
அடவி காதலித் தாடுவர் ஐந்தலைப்
படவம் பாம்பரை யார்த்த பரமனைக்
கடவி ராய்ச்சென்று கைதொழு துய்ம்மினே.
5.97.19
976
இணர்ந்து கொன்றைபொற் றாது சொரிந்திடும்
புணர்ந்த வாளர வம்மதி யோடுடன்
அணைந்த அஞ்சடை யானவன் பாதமே
உணர்ந்த உள்ளத் தவருணர் வார்களே.
5.97.20
977
தருமந் தான்றவந் தான்றவத் தால்வருங்
கருமந் தான்கரு மான்மறிக் கையினான்
அருமந் தன்ன அதிர்கழல் சேர்மினோ
சிரமஞ் சேரழல் தீவினை யாளரே.
5.97.21
978
நமச்சி வாயவென் பாருள ரேலவர்
தமச்ச நீங்கத் தவநெறி சார்தலால்
அமைத்துக் கொண்டதோர் வாழ்க்கைய னாகிலும்
இமைத்து நிற்பது சால அரியதே.
5.97.22
979
பற்பல் காலம் பயிற்றிப் பரமனைச்
சொற்பல் காலம்நின் றேத்துமின் தொல்வினை
வெற்பில் தோன்றிய வெங்கதிர் கண்டவப்
புற்ப னிக்கெடு மாறது போலுமே.
5.97.23
980
மணிசெய் கண்டத்து மான்மறிக் கையினான்
கணிசெய் வேடத்தர் ஆயவர் காப்பினாற்
பணிகள் தாஞ்செய வல்லவர் யாவர்தம்
பிணிசெய் யாக்கையை நீக்குவர் பேயரே.
5.97.24
981
இயக்கர் கின்னரர் இந்திரன் தானவர்
நயக்க நின்றவன் நான்முகன் ஆழியான்
மயக்க மெய்தவன் மாலெரி யாயினான்
வியக்குந் தன்மையி னானெம் விகிர்தனே.
5.97.25
982
அரவ மார்த்தன லாடிய அண்ணலைப்
பரவு வாரவர் பாவம் பறைதற்குக்
குரவை கோத்தவ னுங்குளிர் போதின்மேல்
கரவில் நான்முக னுங்கரி யல்லரே.
5.97.26
983
அழலங் கையினன் அந்தரத் தோங்கிநின்
றுழலும் மூவெயில் ஒள்ளழ லூட்டினான்
தழலுந் தாமரை யானொடு தாவினான்
கழலுஞ் சென்னியுங் காண்டற் கரியனே.
5.97.27
984
இளமை கைவிட் டகறலும் மூப்பினார்
வளமை போய்ப்பிணி யோடு வருதலால்
உளமெ லாமொளி யாய்மதி ஆயினான்
கிளமை யேகிளை யாக நினைப்பனே.
5.97.28
985
தன்னிற் றன்னை அறியுந் தலைமகன்
தன்னிற் றன்னை அறியிற் றலைப்படுந்
தன்னிற் றன்னை அறிவில னாயிடிற்
தன்னிற் றன்னையுஞ் சார்தற் கரியனே.
5.97.29
986
இலங்கை மன்னனை ஈரைந்து பத்துமன்
றலங்க லோடுட னேசெல வூன்றிய
நலங்கொள் சேவடி நாடொறும் நாடொறும்
வலம்கொண் டேத்துவார் வானுல காள்வரே.
5.97.30
திருச்சிற்றம்பலம்
