திருச்சிராப்பள்ளி - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
841
மட்டு வார்குழ லாளொடு மால்விடை
இட்ட மாவுகந் தேறும் இறைவனார்
கட்டு நீத்தவர்க் கின்னரு ளேசெயுஞ்
சிட்டர் போலுஞ் சிராப்பள்ளிச் செல்வரே.
5.85.1
842
அரிய யன்றலை வெட்டிவட் டாடினார்
அரிய யன்றொழு தேத்தும் அரும்பொருள்
பெரிய வன்சிராப் பள்ளியைப் பேணுவார்
அரிய யன்றொழ அங்கிருப் பார்களே.
5.85.2
843
அரிச்சி ராப்பகல் ஐவரா லாட்டுண்டு
சுரிச்சி ராதுநெஞ் சேயொன்று சொல்லக்கேள்
திரிச்சி ராப்பள்ளி யென்றலுந் தீவினை
நரிச்சி ராது நடக்கும் நடக்குமே.
5.85.3
844
தாயு மாயெனக் கேதலை கண்ணுமாய்ப்
பேய னேனையும் ஆண்ட பெருந்தகை
தேய நாதன் சிராப்பள்ளி மேவிய
நாய னாரென நம்வினை நாசமே.
5.85.4
இப்பதிகத்தில் 5,6,7,8,9,10-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.
5.85.5-10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தாயுமானேசுவரர், தேவியார் - மட்டுவார்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்
