திருக்குரங்காடுதுறை - திருக்குறுந்தொகை

bookmark

திருச்சிற்றம்பலம்

631

இரங்கா வன்மனத் தார்கள் இயங்குமுப்
புரங்கா வல்லழி யப்பொடி யாக்கினான்
தரங்கா டுந்தட நீர்ப்பொன்னித் தென்கரைக்
குரங்கா டுதுறைக் கோலக் கபாலியே.

5.63.1

632

முத்தி னைமணி யைப்பவ ளத்தொளிர்
தொத்தி னைச்சுடர் சோதியைச் சோலைசூழ்
கொத்த லர்குரங் காடு துறையுறை
அத்த னென்னஅண் ணித்திட் டிருந்ததே.

5.63.2

633

குளிர்பு னற்குரங் காடு துறையனைத்
தளிர்நி றத்தையல் பங்கனைத் தண்மதி
ஒளிய னைந்நினைந் தேனுக்கென் உள்ளமுந்
தெளிவி னைத்தெளி யத்தெளிந் திட்டதே.

5.63.3

634

மணவன் காண்மலை யாள்நெடு மங்கலக்
கணவன் காண்கலை ஞானிகள் காதலெண்
குணவன் காண்குரங் காடு துறைதனில்
அணவன் காணன்பு செய்யு மடியர்க்கே.

5.63.4

635

ஞாலத் தார்தொழு தேத்திய நன்மையன்
காலத் தானுயிர் போக்கிய காலினன்
நீலத் தார்மிடற் றான்வெள்ளை நீறணி
கோலத் தான்குரங் காடு துறையனே.

5.63.5

636

ஆட்டி னான்முன் அமணரோ டென்றனைப்
பாட்டி னான்றன பொன்னடிக் கின்னிசை
வீட்டி னான்வினை மெய்யடி யாரொடுங்
கூட்டி னான்குரங் காடு துறையனே.

5.63.6

637

மாத்தன் றான்மறை யார்முறை யான்மறை
ஓத்தன் றாருகன் றன்னுயி ருண்டபெண்
போத்தன் றானவள் பொங்கு சினந்தணி
கூத்தன் றான்குரங் காடு துறையனே.

5.63.7

638

நாடி நந்தம ராயின தொண்டர்காள்
ஆடு மின்னழு மின்தொழு மின்னடி
பாடு மின்பர மன்பயி லும்மிடங்
கூடு மின்குரங் காடு துறையையே.

5.63.8

639

தென்றல் நன்னெடுந் தேருடை யானுடல்
பொன்ற வெங்கனல் பொங்க விழித்தவன்
அன்ற வந்தக னையயிற் சூலத்தாற்
கொன்ற வன்குரங் காடு துறையனே.

5.63.9

640

நற்ற வஞ்செய்த நால்வர்க்கு நல்லறம்
உற்ற நன்மொழி யாலருள் செய்தநற்
கொற்ற வன்குரங் காடு துறைதொழப்
பற்றுந் தீவினை யாயின பாறுமே.

5.63.10

641

கடுத்த தேரரக் கன்கயி லைம்மலை
எடுத்த தோள்தலை யிற்றல றவ்விரல்
அடுத்த லுமவன் இன்னிசை கேட்டருள்
கொடுத்த வன்குரங் காடு துறையனே.

5.63.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆபத்சகாயர், தேவியார் - பவளக்கொடியம்மை.


திருச்சிற்றம்பலம்