திருநாரையூர் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
553
வீறு தானுடை வெற்பன் மடந்தையோர்
கூற னாகிலுங் கூன்பிறை சூடிலும்
நாறு பூம்பொழில் நாரையூர் நம்பனுக்
காறு சூடலும் அம்ம அழகிதே.
5.55.1
554
புள்ளி கொண்ட புலியுரி யாடையும்
வெள்ளி கொண்டவெண் பூதிமெய் யாடலும்
நள்ளி தெண்டிரை நாரையூ ரான்நஞ்சை
அள்ளி யுண்டலும் அம்ம அழகிதே.
5.55.2
555
வேடு தங்கிய வேடமும் வெண்டலை
ஓடு தங்கிய வுண்பலி கொள்கையும்
நாடு தங்கிய நாரையூ ரான்நடம்
ஆடு பைங்கழல் அம்ம அழகிதே.
5.55.3
556
கொக்கின் றூவலுங் கூவிளங் கண்ணியும்
மிக்க வெண்டலை மாலை விரிசடை
நக்க னாகிலும் நாரையூர் நம்பனுக்
கக்கி னாரமும் அம்ம அழகிதே.
5.55.4
557
வடிகொள் வெண்மழு மானமர் கைகளும்
பொடிகொள் செம்பவ ளம்புரை மேனியும்
நடிகொள் நன்மயில் சேர்திரு நாரையூர்
அடிகள் தம்வடி வம்ம அழகிதே.
5.55.5
558
சூல மல்கிய கையுஞ் சுடரொடு
பாலு நெய்தயி ராடிய பான்மையும்
ஞால மல்கிய நாரையூர் நம்பனுக்
கால நீழலும் அம்ம அழகிதே.
5.55.6
559
பண்ணி னான்மறை பாடலொ டாடலும்
எண்ணி லார்புர மூன்றெரி செய்ததும்
நண்ணி னார்துயர் தீர்த்தலும் நாரையூர்
அண்ண லார்செய்கை அம்ம அழகிதே.
5.55.7
560
என்பு பூண்டெரு தேறி இளம்பிறை
மின்பு ரிந்த சடைமேல் விளங்கவே
நன்ப கற்பலி தேரினும் நாரையூர்
அன்ப னுக்கது அம்ம அழகிதே.
5.55.8
561
முரலுங் கின்னரம் மொந்தை முழங்கவே
இரவி னின்றெரி யாடலு நீடுவான்
நரலும் வாரிநன் னாரையூர் நம்பனுக்
கரவும் பூணுதல் அம்ம அழகிதே.
5.55.9
562
கடுக்கை யஞ்சடை யன்கயி லைம்மலை
எடுத்த வாளரக் கன்றலை ஈரைஞ்சும்
நடுக்கம் வந்திற நாரையூ ரான்விரல்
அடுத்த தன்மையும் அம்ம அழகிதே.
5.55.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சவுந்தரேசுவரர், தேவியார் - திருபுரசுந்தரநாயகி.
திருச்சிற்றம்பலம்
