திருக்கடவூர்வீரட்டம் - திருக்குறுந்தொகை

bookmark

திருச்சிற்றம்பலம்

368

மலைக்கொ ளானை மயக்கிய வல்வினை
நிலைக்கொ ளானை நினைப்புறு நெஞ்சமே
கொலைக்கை யானையுங் கொன்றிடு மாதலாற்
கலைக்கை யானைகண் டீர்கட வூரரே.

5.37.1

369

வெள்ளி மால்வரை போல்வதோ ரானையார்
உள்ள வாறெனை உள்புகு மானையார்
கொள்ள மாகிய கோயிலு ளானையார்
கள்ள வானைகண் டீர்கட வூரரே.

5.37.2

370

ஞான மாகிய நன்குண ரானையார்
ஊனை வேவ வுருக்கிய ஆனையார்
வேன லானை யுரித்துமை அஞ்சவே
கான லானைகண் டீர்கட வூரரே.

5.37.3

371

ஆல முண்டழ காயதோ ரானையார்
நீல மேனி நெடும்பளிங் கானையார்
கோல மாய கொழுஞ்சுட ரானையார்
கால வானைகண் டீர்கட வூரரே.

5.37.4

372

அளித்த ஆனஞ்சு மாடிய வானையார்
வெளுத்த நீள்கொடி யேறுடை யானையார்
எளித்த வேழத்தை எள்குவித் தானையார்
களித்த வானைகண் டீர்கட வூரரே.

5.37.5

373

விடுத்த மால்வரை விண்ணுற வானையார்
தொடுத்த மால்வரை தூயதோ ரானையார்
கடுத்த காலனைக் காய்ந்ததோ ரானையார்
கடுத்த வானைகண் டீர்கட வூரரே.

5.37.6

374

மண்ணு ளாரை மயக்குறு மானையார்
எண்ணு ளார்பல ரேத்திடு மானையார்
விண்ணு ளார்பல ரும்மறி யானையார்
கண்ணு ளானைகண் டீர்கட வூரரே.

5.37.7

375

சினக்குஞ் செம்பவ ளத்திர ளானையார்
மனக்கும் வல்வினை தீர்த்திடு மானையார்
அனைக்கும் அன்புடை யார்மனத் தானையார்
கனைக்கு மானைகண் டீர்கட வூரரே.

5.37.8

376

வேத மாகிய வெஞ்சுட ரானையார்
நீதி யானில னாகிய வானையார்
ஓதி யூழி தெரிந்துண ரானையார்
காத லானைகண் டீர்கட வூரரே.

5.37.9

377

நீண்ட மாலொடு நான்முகன் றானுமாய்க்
காண்டு மென்றுபுக் கார்க ளிருவரும்
மாண்ட வாரழ லாகிய வானையார்
காண்ட லானைகண் டீர்கட வூரரே.

5.37.10

378

அடுத்து வந்த இலங்கையர் மன்னனை
எடுத்த தோள்கள் இறநெரித் தானையார்
கடுத்த காலனைக் காய்ந்ததோ ரானையார்
கடுக்கை யானைகண் டீர்கட வூரரே.

5.37.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அமிர்தகடேசுவரர், தேவியார் - அபிராமியம்மை.

திருச்சிற்றம்பலம்

Read to next Story
What is the syntax for one-time data binding in Aurelia?
What is the syntax for one-time data binding in Aurelia? -
${expression &... Vector-right