திருநின்றியூர் - திருக்குறுந்தொகை

bookmark

திருச்சிற்றம்பலம்

226

கொடுங்கண் வெண்டலை கொண்டு குறைவிலைப்
படுங்க ணொன்றில ராய்ப்பலி தேர்ந்துண்பர்
நெடுங்கண் மங்கைய ராட்டயர் நின்றியூர்க்
கடுங்கைக் கூற்றுதைத் திட்ட கருத்தரே.

5.23.1

227

வீதி வேல்நெடுங் கண்ணியர் வெள்வளை
நீதி யேகொளப் பாலது நின்றியூர்
வேத மோதி விளங்குவெண் தோட்டராய்க்
காதில் வெண்குழை வைத்தவெங் கள்வரே.

5.23.2

228

புற்றி னார்அர வம்புலித் தோல்மிசைச்
சுற்றி னார்சுண்ணப் போர்வைகொண் டார்சுடர்
நெற்றிக் கண்ணுடை யாரமர் நின்றியூர்
பற்றி னாரைப்பற் றாவினைப் பாவமே.

5.23.3

229

பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
மறையின் ஓசையும் மல்கி அயலெலாம்
நிறையும் பூம்பொழில் சூழ்திரு நின்றியூர்
உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே.

5.23.4

230

சுனையுள் நீலஞ் சுளியும் நெடுங்கணாள்
இனைய னென்றென்று மேசுவ தென்கொலோ
நினையுந் தண்வயல் சூழ்திரு நின்றியூர்ப்
பனையின் ஈருரி போர்த்த பரமரே.

5.23.5

231

உரைப்பக் கேண்மின்நும் உச்சியு ளான்றனை
நிரைப்பொன் மாமதில் சூழ்திரு நின்றியூர்
உரைப்பொற் கற்றைய ராரிவ ரோவெனிற்
திரைத்துப் பாடித் திரிதருஞ் செல்வரே.

5.23.6

232

கன்றி யூர்முகில் போலுங் கருங்களி
றின்றி ஏறல னாலிது வென்கொலோ
நின்றி யூர்பதி யாக நிலாயவன்
வென்றி யேறுடை எங்கள் விகிர்தனே.

5.23.7

233

நிலையி லாவெள்ளை மாலையன் நீண்டதோர்
கொலைவி லாலெயில் எய்த கொடியவன்
நிலையி னார்வயல் சூழ்திரு நின்றியூர்
உரையி னாற்றொழு வார்வினை ஓயுமே.

5.23.8

234

அஞ்சி யாகிலும் அன்புபட் டாகிலும்
நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ
இஞ்சி மாமதில் எய்திமை யோர்தொழக்
குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே.

5.23.9

235

எளிய னாமொழி யாஇலங் கைக்கிறை
களியி னாற்கயி லாய மெடுத்தவன்
நெளிய வூன்ற வலானமர் நின்றியூர்
அளியி னாற்றொழு வார்வினை யல்குமே.

5.23.10

திருச்சிற்றம்பலம்