திருக்கோளிலி - திருக்குறுந்தொகை

bookmark

திருச்சிற்றம்பலம்

573

முன்ன மேநினை யாதொழிந் தேனுனை
இன்னம் நானுன சேவடி யேத்திலேன்
செந்நெ லார்வயல் சூழ்திருக் கோளிலி
மன்ன னேயடி யேனை மறவலே.

5.57.1

574

விண்ணு ளார்தொழு தேத்தும் விளக்கினை
மண்ணு ளார்வினை தீர்க்கு மருந்தினைப்
பண்ணு ளார்பயி லுந்திருக் கோளிலி
அண்ண லாரடி யேதொழு துய்ம்மினே.

5.57.2

575

நாளும் நம்முடை நாள்கள் அறிகிலோம்
ஆளும் நோய்களோ ரைம்பதோ டாறெட்டும்
ஏழை மைப்பட் டிருந்துநீர் நையாதே
கோளி லியரன் பாதமே கூறுமே.

5.57.3

576

விழவி னோசை ஒலியறாத் தண்பொழில்
பழகி னார்வினை தீர்க்கும் பழம்பதி
அழல்கை யானம ருந்திருக் கோளிலிக்
குழக னார்திருப் பாதமே கூறுமே.

5.57.4

577

மூல மாகிய மூவர்க்கு மூர்த்தியைக்
கால னாகிய காலற்குங் காலனைக்
கோல மாம்பொழில் சூழ்திருக் கோளிலிச்
சூல பாணிதன் பாதந் தொழுமினே.

5.57.5

578

காற்ற னைக்கடல் நஞ்சமு துண்டவெண்
ணீற்ற னைநிமிர் புன்சடை யண்ணலை
ஆற்ற னையம ருந்திருக் கோளிலி
ஏற்ற னாரடி யேதொழு தேத்துமே.

5.57.6

579

வேத மாயவிண் ணோர்கள் தலைவனை
ஓதி மன்னுயி ரேத்து மொருவனைக்
கோதி வண்டறை யுந்திருக் கோளிலி
வேத நாயகன் பாதம் விரும்புமே.

5.57.7

580

நீதி யாற்றொழு வார்கள் தலைவனை
வாதை யான விடுக்கும் மணியினை
கோதி வண்டறை யுந்திருக் கோளிலி
வேத நாயகன் பாதம் விரும்புமே.

5.57.8

581

மாலும் நான்முக னாலும் அறிவொணாப்
பாலின் மென்மொழி யாளொரு பங்கனைக்
கோல மாம்பொழில் சூழ்திருக் கோளிலி
நீல கண்டனை நித்தல் நினைமினே.

5.57.9

582

அரக்க னாய இலங்கையர் மன்னனை
நெருக்கி யம்முடி பத்திறுத் தானவற்
கிரக்க மாகிய வன்றிருக் கோளிலி
அருத்தி யாயடி யேதொழு துய்ம்மினே.

5.57.10

திருச்சிற்றம்பலம்