பூந்துருத்திநம்பி காடநம்பி அருளிய திருவிசைப்பா
1. திருவாருர்
பண்: பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
183.
கைக்குவான் முத்தின் சரிவளை பெய்து
கழுத்திலோர் தனிவடங் கட்டி
முக்கண்நா யகராய்ப் பவனிபோந்(து) இங்ஙன்
முரிவதோர் முரிவுமை அளவும்
தக்கசீர்க் கங்கை அளவுமன்(று) என்னோ
தம்மொருப் பாடுல கதன்மேல்
மிக்கசீர் ஆருர் ஆதியாய் வீதி
விடங்கராய் நடம்குலா வினரே.
1
184.
பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப்
பருகுதோ(று)ம் அமுதம்ஒத் தவர்க்கே
தித்தியா இருக்கும் தேவர்காள் ! இவர்தம்
திருவுரு இருந்தவா பாரீர்
சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த
தனிமுழு முதலுமாய் அதற்கோர்
வித்துமாய் ஆருர் ஆதியாய் வீதி
விடங்கராய் நடம்குலா வினரே.
2
திருச்சிற்றம்பலம்
