வரைக்காட்சிப் படலம் - 968
விளக்கேற்றல்
968.
மந்தாரம் முந்து மகரந்த மணம் குலாவும்
அம் தார் அரசர்க்கு அரசன்தன் அனீக வெள்ளம்.
நந்தாது ஒலிக்கும் நரலைப் பெரு வேலை எல்லாம்
செந்தாமரை பூத்தென. தீபம் எடுத்தது அன்றே.
மந்தாரம் முந்து மகரந்தம் - மந்தார மலர்கள் சொரியும் தேனின்;
மணம் குலாவும்- மணங் கமழப் பெற்ற; அம்தார் அரசர்க்கு அரசன்
தன் - அழகிய மாலையணிந்த தசரதனின்; அனீக வெள்ளம் -
சேனைக் கடலனாது; நந்தாது ஒலிக்கும் - குறையாமல் ஒலிக்கும்;
நரலை - பெரு முழக்கத்தையுடைய; பெரு வேலை எல்லாம் - பெருங்
கடலின் இடம் முழுவதும்; செந்தாமரை பூத்து என - செந்தாமரை
மலர் பூத்தது போல; தீபம் எடுத்த - விளக்குகளை ஏற்றி வைத்தது.
சேனை தங்கியிருந்த இடம் முழுவதும் விளக்குகள்
ஏற்றப்பட்டதனால் அது கடல் முழுதும் செந்தாமரை பூத்தது போல
விளங்கியது என்பது - தற்குறிப்பேற்ற அணி. 41
