மூன்றாம் காட்சி

bookmark

நேரம் : காலை ஏழு மணி.

இடம் : "பத்ம விலாஸம்" கொல்லைப்புறம்.

பாத்திரங்கள் : விநாயகராவின் மனைவி சிவகாமியம்மாள், வேலைக்காரி தாயி.

சிவகாமி : ஏண்டி, தாயி! நேற்று ஏன் வரவில்லை? உன் மகளை அனுப்பினாயே? அவளால் என்ன வேலை செய்ய முடிந்தது? இப்படிப் பண்ணினால் உன்னைத் தள்ளிவிடுவேன்.

தாயி (கண்ணில் நீர் ததும்ப) : அப்படிச் செய்யக் கூடாது, அம்மா! காப்பாற்றவேண்டும். புருஷன் சண்டைபோட்டு அடித்துவிட்டார். நேற்றெல்லாம் எழுந்திருக்கவே முடியவில்லை.

சிவகாமி : ஐயோ! உன் புருஷன் அவ்வளவு பொல்லாதவனா? ஐயாகிட்டச் சொல்லிப் போலீஸில் எழுதிவைக்கச் சொல்லட்டுமா?

தாயி : அவர் நல்லவரம்மா! பாழுங்கள்ளு அப்படிப் பண்ணுகிறது. முந்தாநாள் சம்பளங் கொடுத்தாங்க. குடித்துவிட்டு வந்துவிட்டார்.

சிவகாமி : சம்பளம் எவ்வளவு?

தாயி : பஞ்சுஸ்கூலில் மாதம் 22 ரூபாய் சம்பளம். சௌக்கியமாய் இருக்கலாம். ஆனால் சம்பளத்தில் முக்கால்வாசி குடிக்குப் போகிறது. ஆறு ஏழு ரூபாய் கூட இட்டேறுவதில்லை.

சிவகாமி : நல்லவரென்று சொல்கிறாயே? நீ சொல்லிக் குடிக்காமல் செய்யக்கூடாதா?

தாயி : எவ்வளவோ செய்து பார்த்துவிட்டேன். நல்ல புத்தியா யிருக்கும்போது குடிப்பதே இல்லை என்று சொல்லுவார். சாமியை வைத்துக்கூட சத்தியம் செய்திருக்கிறார். ஆனால் ஆலையிலிருந்து எந்தப் பாதையாக வந்தாலும் வழியில் பாழும் கடை ஒன்று...

சிவகாமி : இந்தக் கடைகளை ஏன் தான் வைத்திருக்கிறார்களோ, தெரியவில்லை.

தாயி : காந்தி மகாத்மா வந்து கள்ளு சாராயக் கடைகளை மூடப்போகிறார் என்று முன்னே சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஒன்றையுங் காணோம்.

சிவகாமி : சரி, காப்பிக்கு நேரமாகிவிட்டது. சீக்கிரம் காரியத்தைப் பார்.

[உள்ளே போகிறாள்.]